Skip to main content

'காஷ்மீர் விவகாரம்... அவசரநிலை பிரகடனம்' மாலன் பதில்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் அரசியல் அரங்கில் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் மாலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவரின் கருத்துக்கள் வருமாறு,

 

d



காஷ்மீர் விவகாரம் தொடர்பாக புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தில் குறிப்பாக ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

முதலில் ஜனநாயகத்துக்கு விரோதமாக என்பதே தவறானது. அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதற்கு போதுமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் புதிய மசோதாக்கள் பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்க இதை ஜனநாயகத்துக்கு விரோதமாக என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு வாதம்.அதில் எந்த பொருளும் இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் மக்களிடம் முறையிடலாம். மக்களிடம் அவர்களின் கருத்துக்களை பதிய வைக்கலாம். இது ஜனநாயகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு சுதந்திரம்தான். எனவே எதிர்க்க வேண்டும் என்றால் மக்களிடம் நேரில் செல்லலாம்.

ஆனால் இதுதொடர்பாக ஒரு அச்சம் இருக்கிறதே, பெரும்பான்மை இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்கட்சிகள் கூறுவதை பற்றி?

தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கைகளிலேயே கட்சிகள் தெரிவித்து விடுகிறார்கள். தங்களின் கொள்கைகளை மறைத்து விட்டு எந்த கட்சியும் மக்களிடம் வாக்குகளை பெறுவதாக நினைக்க இயலாது. அதையும் தாண்டி மெஜாரிட்டி என்பதே மக்கள் வழங்கியது தானே? பிறகு எப்படி அதை ஜனநாயக விரோதம் என்று கூற இயலும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்திய விதம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முடிவு சரி, ஆனால் அமல் செய்யப்பட்ட விதம் தவறு என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த மாதிரியான விவகாரங்களில் எந்த அரசாக இருந்தாலும் இப்படியான முடிவைத்தான் எடுக்கும். இதற்கு நமக்கு பல முன் உதாரணங்கள் இருக்கிறது. அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போதும் இப்படியாக ஒரு சூழ்நிலையில் தான் நிறைவேற்றப்பட்டது. அவசரநிலை அமல்படுத்தப்படுகிறது என்று யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. குடியரசுதலைவருக்கு கூட இதுகுறித்து தெரியாது. அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அரசு வித்தியாசமாக செயல்படுவதாக நினைக்க தேவையில்லை.

காஷ்மீரில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் இணைத்தே திமுக சொல்வதாக புரிந்து கொள்ளலாமா?

இருக்கலாம், இது ஜனநாயகத்துக்கு உகந்த நடவடிக்கை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான அவசியம் ஏற்பட்டதாக அரசு நினைத்திருக்கலாம். பாஜக இல்லாத எந்த அரசாக இருந்தாலும் இதே மாதிரியான முடிவு எடுக்க முயன்றார்கள் எனில் அதற்கான வழிமுறையாக இதைபோன்றதொரு வழியையே பின்பற்றுவார்கள். எனவே சில விவகாரங்களில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.அதை மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் செய்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

 

Next Story

மக்களவைத் தேர்தல்; இந்தியா கூட்டணியில் சிக்கல்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Trouble in India's alliance at Lok Sabha Elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த காங்கிரஸுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில், மேற்கு வங்கத்தில் 42 தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். 

அதனை தொடர்ந்து, 13 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக, காஷ்மீரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்க்க வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இது மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் தனித்து போட்டியிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Trouble in India's alliance at Lok Sabha Elections

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளதாவது, “மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எங்கேயும் ஆதரவு இல்லை என்றும், 2019ஆம் ஆண்டு தேர்தலின் கட்சி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து மிகவும் கடுமையானது. 

மேலும், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களவைத் தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லாத சூழலை தேசிய மாநாட்டு கட்சி ஏற்படுத்திவிட்டது. எனவே, இந்த பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதியிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்களை கட்சியின் நாடாளுமன்ற குழு இறுதி செய்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.