Skip to main content

"பிள்ளை மாதிரி நடத்த மாட்டேன், ப்ரெண்ட் மாதிரி தான் இருப்போம்" -கதறிய தந்தைக்கு ஆறுதல் சொல்ல தெரியவில்லை... சிவசங்கர் உருக்கம்...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
 vignesh

 

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தகுழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அக்கிராம மக்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவர் விக்னேஷ் தந்தை விஸ்வநாதனை சந்தித்து ஆறுதல் கூறினார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர்.  

 

பின்னர் நம்மிடம் அவர், 

 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் மருதூர் ஊராட்சி இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மூத்த மகன் தான் விக்னேஷ். பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் எடுத்த புத்திசாலிப் பிள்ளை. 

 

மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எளிய ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவன். ஒரு சிறு ஓட்டு வீடும், சிறிதளவு நிலமுமே சொத்து. அப்பாவும், அம்மாவும் உடல்நலம் குன்றியவர்கள். ஆனால் பிள்ளைகள் விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்.

 

vvv

 

 

"பிள்ளை மாதிரி நடத்த மாட்டேன், ப்ரெண்ட் மாதிரி தான் இருப்போம்", என கதறுகிறார் விஸ்வநாதன். பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் எடுத்த மகனை தம் ஊருக்கு அருகில் உள்ள செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அவரது பொருளாதார நிலைக்கு இதுவே அதிகம். இருப்பினும் மகனின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற தன்னால் முடிந்ததை செய்தார்.

 

+2ல் 1006 மதிப்பெண்கள் எடுத்தான். நீட் தேர்வு எழுதினான், வெற்றி பெற இயலவில்லை. ஆனால் குறிக்கோளை அடைய விக்னேஷும், குடும்பமும் முடிவெடுத்தது. நிலத்தை விற்று மகனை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சைதன்யா கோச்சிங் சென்டரில் சேர்த்தார் விஸ்வநாதன். அந்த வருட நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் எடுத்தான் விக்னேஷ். குறிக்கோள் நிறைவேறவில்லை. மீண்டும் நீட் தேர்வு எழுத முடிவெடுத்தார்கள்.

 

குடும்பத்திற்கு சுமை ஏற்ற விரும்பாத விக்னேஷ் தானே படிக்க முடிவெடுத்தான். ஆனாலும் துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் நடத்தப்படும் நீட் கோச்சிங்கில் சேர்த்தார் விஸ்வநாதன். நல்ல முறையில் படித்து வந்தான். கரோனா பெருந்தொற்றால் பயிற்சி நிலையம் மூடப்பட்டது. இலந்தங்குழி திரும்பினான் விக்னேஷ். வீட்டில் இருந்து படித்து வந்தான். 

 

வீட்டை விட்டு வெளியில் செல்லாத பிள்ளை. தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கின்ற பிள்ளை. ஆன்லைன் வகுப்புக்காக சிக்னல் கிடைக்கவில்லை என்றே வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல், அடுத்த தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வானாம்.

 

 

ddd

 

இந்த முறை எப்படியும் மருத்துவம் சேர்ந்து விடுவேன் என்று உறுதியாக இருந்திருக்கிறான். நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்படாத சூழலில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். ஆனால் வெளியில் தெரியவில்லை.

 

"நீட் தேர்விற்கு போக, ஜெயங்கொண்டம் போய் புதுசட்டை எடுத்துக்கிட்டு வந்தோம். கீழமாளிகையில இருக்கிற குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். ராத்திரி ஒன்னா உக்காந்து தான் சாப்பிட்டோம். எப்பவும் விடியற்காலை 4 மணிக்கு ஏந்திரிச்சி படிக்க ஆரம்பிச்சிடுவான். ராத்திரி நல்லா தான் படுத்தான்", என சொல்லி கதறி அழுதார் விஸ்வநாதன். 

 

வீட்டின் பின் கதவு திறந்திருக்கிறது, மகனை காணவில்லை என்று தேடி சென்றிருக்கிறார். வீட்டின் பின்னால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயலில் இருக்கும் கிணற்றில் பிணமாக தான் கிடைத்திருக்கிறான் விக்னேஷ். 

 

விஸ்வநாதனுக்கு ஆறுதல் சொல்ல சென்ற நாங்கள் என்ன சொல்லி தேற்றுவது எனத் தெரியாமல் வாய் மூடி அமர்ந்திருந்தோம். உடல் நலம் இல்லாத தாய், தன் மகன் இறந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றி  மருதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். 

 

6666

 

அனிதாவில் துவங்கிய நீட் பலி, விக்னேஷில் வந்து நிற்கிறது. இந்த ஆண்டே இன்னும் சில மாணவ, மாணவியர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை (08.09.2020) தான் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் தலைமையில் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்றும் (09.09.2020) உயிர்பலி தொடர்கிறது. அன்று தொடங்கி தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நீட் தேர்வை எதிர்த்து வருகிறார். தி.மு.க தான் போராடி வருகிறது. 

 

மத்திய பா.ஜ.க அரசின் வற்புறுத்தலால் தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்திய அ.தி.மு.க அரசு, இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் தான் கண் திறப்பார்கள் எனத் தெரியவில்லை என கண்டனம் தெரிவித்த சிவசங்கர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார் உறுதியாக. 

 

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்