Skip to main content

பாராளுமன்றத் தேர்தலுக்கு பணப் பலனாக மாறும் பசுமை வழிச்சாலை!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
salam


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலும் சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்து கல் நடும் பணியில் போலீசாரை வைத்து மாநில அரசின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 
 

இந்த பசுமை வழிச்சாலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போடப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்க, இதனால் பயன்பெறுவது பாராளுமன்றத் தேர்தல்தான் என அதிமுக கொங்கு மண்டல மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் விரிவாகவே பேசினார். அவர் கூறிய தகவர்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அவர் எடுத்த எடுப்பிலேயே, பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் வரப்போகிறது திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும், அடுத்த ஆண்டுதானே அப்போது பார்த்துக்கொள்ளலாம் என ஜனநாயகம் பேசி வருகிறார்கள்.

 

 

 

 

இந்த நிலையில் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் என்றாலும் இருக்கும் நாட்கள் வெறும் 300 நாட்கள். அதில் தேர்தல் நடைமுறைகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும். ஆக இருப்பது 240 நாட்கள்தான். மத்தியில் இருக்கும் பாஜக தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என விரிவான திட்டத்தில் உள்ளது. 
 

இதற்காக தனியார் ஏஜென்சிகளை களம் இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதன் அடிப்படையில்தான் பாஜகவும், அதிமுகவும் ரகசியமாக பேசி முடித்தது பாதிக்கு பாதி 50 - 50. இருவது தொகுதிகள் அதிமுக, இருவது தொகுதிகள் பாஜக என பேசி முடித்தது. எடப்பாடி அரசுக்கு பாராளுமன்றத் தேர்தல் வரை எந்த சிக்கலும் இல்லை என டெல்லி சர்க்கார் உறுதி கொடுத்துள்ளது. 
 

அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இந்த எடப்பாடி அரசு நீடிக்க வேண்டும் என்றால் மத்தியில் பாஜக அரசுதான் இருக்க வேண்டும். அதற்கு கைமாறகத்தான் இந்த ஆளுக்கு பாதி என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் பசுமை வழிச்சாலைக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் கேள்வி. எந்தவொரு அரசு திட்டமும், மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானாலும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட சதவிகிதம் கமிசனாக ஆட்சியில் உள்ளவர்களுக்கு கிடைப்பது எழுதப்படாத நடைமுறை. 

 

 

 

 

இந்த பசுமை வழிச்சாலைக்கு முதல் கட்டமாக அரசு அறிவித்திருப்பது பத்தாயிரம் கோடி ரூபாய். இப்பணிகள் தற்போது நில அளவீடு மட்டுமே நடந்து வருகிறது. இது ஜூலை மாதத்திற்குள் முடிவடைந்து சாலை அமைப்பதற்கான நிறுவனத்தை உறுதி செய்யப்படும். அது வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், உள்நாட்டு நிறுவனமானாலும் சரி. 
 

சாலை அமைக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த நிறுவனம் முதல் தவணையாக 10 சதவீதம் ஆளும் அரசுக்கு வழங்கும். அதன்பிறகு சதவிகிதங்கள் கூடுவது உண்டு. ஆனால் இந்த பத்து சதவீதம்தான் பாராளுமன்றத் தேர்தலுக்கு இறைக்கப்படப்போகிறது. ஒரு தொகுதிக்கு 250 சி என்ற அளவில் 40 தொகுதிகளுக்கும் ஆயிரம் சி புழங்கப்போகிறது. 
 

பாஜக போட்டியிடும் தொகுதியானாலும் சரி, அதிமுக போட்டியிடும் தொகுதியானாலம் சரி ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் ஆயிரம் வரை திட்டமிடப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் மூன்றிலிருந்து நான்கு லட்சம் வாக்காளர்களுக்கு வாரி வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக நடைப்பெற்ற தேர்தல்களில் ஓட்டுககு பணம்தான் தீர்மானித்துள்ளது. 

 

 

 

 

இந்த நடைமுறையில் கடைசியாக நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் பாடம் சொல்லியுள்ளது என தனியார் ஏஜென்சிகள் எடுத்த ஆய்வு வெளிப்பட்டிருக்கிறது. ஆக நடைமுறைப்படியே தேர்தலை நடத்துங்கள். நமது இலக்கு 40க்கு 40 என்பதுதான் அதிமுகவும், டெல்லி சர்காரும் போட்டிருக்கும் சீக்கிரட் பிளான். இங்கு இதுவெல்லாம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகள் கால் ஊன்ற விடமாட்டோம் என பிரதான கட்சியான திமுக பொதுக்கூட்டம் போட்டு பேசி வருகிறது. நாட்கள் விரைவாக போய்க்கொண்டிருக்க அந்த வேகத்தோடு பாஜகவும், அதிமுகவும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர். இப்படி பசுமை வழிச்சாலை பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பணப்பலனாய் மாறியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரியார் பல்கலை தொலைதூர கல்வித்திட்டம் வழங்கும் படிப்புகள் செல்லாது” - யுஜிசி அதிரடி அறிவிப்பு!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

UGC has announced courses offered Periyar University Distance Education Program not valid

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் படிப்புகள் செல்லாது எனவும், அத்திட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.  

 

சேலத்தை அடுத்துள்ள கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் தனியார் என 125க்கும் மேற்பட்ட கலைக்கல்லூரிகள் இந்தப் பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன.

 

இந்தப் பல்கலைக்கழகத்தில், 'பிரைடு' என்ற பெயரில் தொலைதூரக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் இந்த திட்டத்தின் மூலம் வருவாயும் கிடைத்து வருகிறது.

 

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வித்திட்டத்தில் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பும் செல்லாது என்றும், தொலைநிலைக் கல்வித்திட்டத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திடீரென்று அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியார் பல்கலையில் கடந்த 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் 2014 - 2015 ல்வி ஆண்டு வரையிலும், அதையடுத்து 2019 - 2020 கல்வி ஆண்டிற்கும் தொலைதூர கல்வித்திட்டத்தில் பட்டப்படிப்புகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. தொலைதூர கல்வித்திட்டத்திற்கென முழு நேர இயக்குநர் இல்லாதது, போதிய முழுநேர பேராசிரியர்கள் இல்லாதது, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான படிப்பு மையங்கள் அமைக்கப்படாதது தொடர்பாக பெரியார் பல்கலை மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

 

இது தொடர்பாக யுஜிசியின் புகார் மறுசீரமைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டதன் பேரில் சில பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022 - 2024 வரை எந்த ஒரு உயர்கல்வி நிறுவனங்களின் விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. அதேபோல், ஏற்கனவே 2021 - 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தின் மீதான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் அனைத்தும் தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வித்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பிலும் மாணவர்கள் சேர வேண்டாம். பல்கலையின் தொலைதூரக் கல்வித்திட்டத்திற்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்வதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...   ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக???

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து அவர் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். “நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இப்படி அவர் அளித்த பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன.

 

rajini



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும் என கூறியுள்ளார். 
 

அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார் என கூறியுள்ளார். 
 

ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை மறக்க கூடாது, எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரங்கில் கூட எடுபடாது. அவரைப் பற்றி கருத்து சொல்லும்போது ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 
 

பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை என்பதால் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கலாம். இரண்டாவது நோக்கம், பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு, மோடி அரசுக்கு எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம், பொருளாதார கீழ்நிலை போன்றவைகளை திசை திருப்புவதற்காக ரஜினியை ஒரு ஆயுதமாக மத்திய அரசு கையாண்டிருக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வது, 95 ஆண்டு காலம் இந்த தமிழ் இனத்திற்காகவே போராடிய பெரியார் பற்றி பேசுகிறபோது, யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்று கூறினார்.


 

பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 
 

அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
 

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

நடிகர் ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

எந்த விதத்திலும் ரஜினிகாந்த்தை காயப்படுத்த முடியாது. அவரை சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

ரஜினியின் பேச்சுக்கு இப்படி பிரபலங்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் விதமாக பேசியதாக ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்திருந்தார். 
 

அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

இதேபோல் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை நகர தலைவர் நேருதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரஜினிக்கு எதிராக கோவை காட்டுர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். 
 

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் அதன் நிர்வாகிகள் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சத்தியமங்கலம் காவல்நிலையத்திலும், கோபி காவல்நிலையம், அம்மாபேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது... அதேபோல அவருக்கு வேண்டிய ஒரு சிலர் ஆதரவும் அளித்துள்ளனர். மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாரா? வருத்தம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.