Skip to main content

நீட் தேர்வை ஆதரிப்பவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள்..? -சீமான் கேள்வி!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
fg

 

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடப்பு அரசியல் சூழல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பேசினார். அவை வருமாறு, " இன்றைக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விலக்கு வாங்கியது போல நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கப்படும் என்று கூறுகிறவர்கள், அதை எப்படி யாரிடம் கூறி வாங்குவார்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். சும்மா எதையும் கூறக்கூடாது என்பது என்னுடைய கருத்து. நேரடியாக மோடியிடம் பேசும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஸ்டாலின் இதை தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் யாரிடம் என்ன சொல்லி இதனை தடுத்த முடியும். இவர்களிடம் தான் 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் பாஜக ஆட்சிதானே நடைபெறும். பிறகு இவர்கள் எப்படி தேர்வை நிறுத்துவார்கள். இதை முதலில் அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும். 

 

நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அம்மையார் நளினி சிதம்பரம் தெரிவிக்கிறார். கார்த்தி சிதம்பரம் அதனை வரவேற்கிறேன் என்று தெரிவிக்கிறார். அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு யாரிடம் சொல்லி நீட் தேர்வை ஒழிப்போம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஆக தற்போது மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் உள்ள கொதிநிலையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள் என்பதே எங்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இதை பற்றி பேசுவதற்கான தகுதி, நேர்மை இது எதுவுமே கிடையாது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக கூறுகின்றது. எந்த இடத்தில் தமிழகத்தில் இந்தி இல்லை என்று முதலில் சொல்ல வேண்டும். சங்கம் வளர்த்த மதுரையில் கூட இரயில் நிலையங்களில் ஒரு தமிழ் எழுத்தை காணவில்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் அவல நிலையாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் பாதைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ் இருக்கிறதா என்றால் அறவே இல்லை என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைய நிலைமை இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் மைல்கற்களை ஆக்கிரமித்துள்ளது. மாநில தன்னாட்சியை மறுப்பவர்களுடன் இவர்கள் கூட்டணி வைத்ததே தமிழகம் இந்த நிலைக்கு ஆளானதற்கு காரணம். இதனால்தான் மாநில உரிமைகள் அனைத்தும் நம்மை விட்டு பறிபோயுள்ளது. இந்தி தன்னாலே உள்ளே வந்துவிட்டது. இவர்கள் இந்தியை தடுப்போம் என்று சொல்வதை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் 1999 மதிப்பெண் வாங்கினாலும், நீட் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளீர்கள். 600 மதிப்பெண் எடுத்தவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் அவர் மருத்துவம் படிக்கலாம் என்பதெல்லாம் எந்த மாதிரியான தகுதி என்று தெரியவில்லை. எனவேதான் நீட் தேர்வை தூக்கி எறிய சொல்கிறோம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.