Skip to main content

அமித்ஷா என்ன பூதமா... ஸ்டாலினை எதிர்த்து போட்டியா..? -சீமான் தடாலடி பதில்

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
hjk

 

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் பதில்கள் வருமாறு, "அமித்ஷா தமிழகம் வருவதை பற்றி என்னிடம் அதிகம் கேள்வி எழுப்பப்படுகிறது, அவர் என்ன மனிதர்தானே அல்லது பூதமா? அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று தெரியவில்லை. அதுவும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு பயம் ஏற்படுவதாக பாஜக சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அப்படியெல்லாம் யாரும் பயப்படவில்லை என்பதே உண்மை. நம் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை கேட்க ஒருவருக்கும் துப்பில்லை. இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழர்களை எல்லாம் அங்கே அழித்து ஒழித்தாகிவிட்டது. 

 

பிறகு எதற்காக அவர்களுக்கு இங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியை எடுத்துக்கொண்டு சென்று அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? மீன் பிடிக்க செல்லும் எங்கள் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வார்கள். அதுதானே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகுகளை பறிமுதல் செய்து அதனை இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்குகிறது. ஒருவேளை நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இவ்வாறு செய்ய விடுவோமா? அவர்களுக்குத்தான் அந்த துணிச்சல் வந்திருக்குமா?  இவர்கள் கேள்வி கேட்க மறுப்பதால் இந்த நிலை வந்திருக்கிறது. இது அனைத்தும் கொஞ்ச நாட்களுக்குத்தான். இலங்கை அரசுக்கு நாம் என்பதை காட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 

 

ஏன் நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் பயிற்சி கொடுக்கவில்லை என்றால், பாகிஸ்தான் கொடுக்கும், சீனா கொடுக்கும், அமெரிக்கா கொடுக்கும் என்று கதை விடுகிறார்கள். இதை நாம் நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாமும் இவ்வளவு காலம் அதை நம்பியதாக நடித்தோம். ஆனால் அதனை தொடர விடக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதனை கேட்க நாதியில்லை. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் நாங்கள் ஏன் புலம்ப போகிறோம். தலைவன் இல்லா நாடும், தகப்பன் இல்லாத வீடும் தட்டுகெட்டு நிற்கும் என்பார்கள். அது தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன உணர்வும் மான உணர்வும் கொண்டு பேச யாரும் இல்லை. அதனால் தான் இந்த நிலைமை எங்களுக்கு வந்துள்ளது.

 

தேர்தல் அரசியலில் எப்படி வெற்றி பெறுவது என்றுதான் பார்க்கிறார்கள். இந்திய அளவிலும் அதைத்தான் பார்க்கிறார்கள், தமிழக கட்சிகளும் அதைத்தான் செய்ய விரும்புகிறார்கள். மக்கள் நலனை யாரும் பார்ப்பதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள், எங்கள் கட்சியினரும் அப்படி போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள், நானும் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். முதலில் கட்சி சின்னங்களை ஒழிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல முறை தேர்தல் ஆணையத்திடமே நேரில் முறையிட்டுள்ளோம்.  அவ்வாறு கொண்டுவந்தால் தான் வாக்குக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும்" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்