Skip to main content

நீங்கள் அமைதியானவர்... அரசியல் ஆட்டம் உங்களுக்கு வேண்டாம் -ரஜினிக்கு சீமான் அறிவுரை!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020
hjk

 

ரஜினி அரசியல் வருகை தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில் இதுதொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. எங்களை மாதிரியான பிள்ளைகள் அவரின் ரசிகர்களாக உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவர் எங்களை விட அரசியல் குறித்து அதிகம் கவனித்து வருகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அவருக்கு நிறைய அரசியல் ஆலோசகர்கள் உண்டு. இது ரொம்ப மோசமான ஆட்டமாக இருக்கின்றது. அவர் நினைப்பதெல்லாம் இந்த ஆட்டத்திற்கு சரியாக இருக்கும் என்று அவர் நினைக்கக்கூடாது. அவரை இறக்கி விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேச வாய்ப்பு இருக்கிறது. விமர்சனங்களை அவரால் தாங்க முடியாது. ஏனென்றால் புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் அவர். அவரால் அரசியல் ஆட்டத்தில் ஈடுகொடுக்க முடியாது. அவருக்கு தேவை ஓய்வு, நிம்மதி. அவர் இளம் வயதாக இருக்கும் போதே ஓய்வுக்காக இமயமலை சென்று வந்தவர். அவருக்கு தற்போது அரசியலில் ஈடுபடும் தேவை எங்கிருந்து வருகிறது. 

 

இந்த காலகட்டம் ஒரு கொடூர சூழலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாதிய, மத சூழ்நிலைகள் தலை விரித்தாடுகின்றது. அரசியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி இதுதானே அடிப்படை. இதில் ஒரு கவர்ச்சி மட்டும் உங்களிடம் இருக்கிறது. மற்றதெல்லாம் பேராபத்தாக உங்களிடம் உள்ளது. தப்பாக உள்ள செய்தியை அவர் பொதுவெளியில் முன்வைக்கலாம். அதைவிடுத்து நான் இறங்கித்தான் ஆழம் பார்ப்பேன் என்பதெல்லாம் முடியாத இயலாக காரியம். சீமான் செய்வது தவறு, அவர் செய்வது சரி, இல்லை சீமான் செய்வது நன்றாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டி கொண்டு இருப்பது என்பது அவருக்கு நல்ல அணுகுமுறையாக இருக்கும்.  இனி வரும் காலம் என்பது அவர் அமைதியாக பொழுதை கழிக்க வேண்டிய காலகட்டம்.  தற்போது நாம் எல்லாம் எந்த சூழ்நிலைகளில் பொழுதை கழித்து வருகிறோம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

 

எனவே நாம் அவருடைய நலனில் அக்கறை கொண்டுதான் இதனை சொல்கிறோம். அவருடைய உடல்நலன் இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா என்றால் அவருடைய வயதின் காரணமாக அதில் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே அவர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருக்கிறது. சினிமாவில் அவர் எங்களுக்கெல்லாம் மூத்தவர். ஆனால் அரசியலில் நான் மூத்தவன் இன்னும் சொல்ல போனால் கமலுக்கெல்லாம் மூத்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன், இந்த ஆட்டம் மிக கடினமான ஒன்று. இதை ஆடிபார்க்க முயலாதீர்கள் என்று ஒரு ரசிகராகவும் நலம் விரும்பியாகவும் கேட்டுக்கொள்கிறேன். அதுவே உங்களின் உடல்நலத்துக்கு உகந்ததாகவும் இருக்கும்" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்