Skip to main content

படிக்காதவன் சோறு போடுகிறான்; படித்தவன் நாட்டை கூறு போடுகிறான் - சீமான் பேச்சு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

ik



சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது "கடந்த 50 ஆண்டுகளாக ஓட்டை மாற்றி மாற்றி போட்டு இந்த தமிழகம் பாழ்ப்பட்டு போய் கிடக்கிறது. அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்றாலும் பழக்க தோஷம் அவர்களை விடுவதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு அம்மா கன்னியாகுமரியில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். "அப்பா, உனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதற்கு ஒரு வாக்கை வீணடிக்க வேண்டும் என்று இலைக்குப் போட்டுவிட்டேன்" என்று கூறினார்கள். தான் செய்தது தவறு என்பதை அவர்களுக்கு காலம் புரிய வைக்கும். மாறி மாறி இந்த தமிழகத்தை திமுக, அதிமுக சீரழித்து வருகிறார்கள். இன்னமும் அது தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆண்ட பெருந்தலைவர் காமராஜர் செய்த சாதனைகளை, இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக கட்சிகள் செய்யவில்லை. கிட்டதட்ட 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி மடை மாற்றம் செய்து வருகிறார்கள். இலவசம் தருவதாகக் கூறி மதி மயக்குகிறார்கள். 

 

இவர்கள் பல துணைகளைக் கட்டினார்களே தவிர, ஒரு அணையைக் கூட கட்டவில்லை. ஒரு துணையும் கட்டாத அவர், பல அணைகளைக் கட்டி நாட்டை வளமாக்கினார். ராஜாஜி நிதியில்லை என்று கூறி மூடிய 6000 பள்ளிகளைத் திறந்ததோடு, மேலும் 16 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வியைப் போதித்தவர் படிக்காத மாமேதை காமராஜர். அவரின் சாதனைகளை யாராவது மறந்துவிட முடியுமா, இல்லை மறுத்து பேசிவிட முடியுமா?  நமக்கு இரண்டு கண் போனாலும், அவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பதுதான் மானுட சிந்தனை. அப்படித்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் எப்படி நினைக்கவில்லை. எங்கள் தலைவர் அப்படி நினைக்கவில்லை. எங்களை உருவாக்கிய மேதகு பிரபாகரன் அப்படி நினைக்கவில்லை, எங்களை அவ்வாறு உருவாக்கவும் இல்லை. அவர் என்ன நினைத்தார், நான் வீழ்ந்தாலும் சரி, என் இனம் எழ வேண்டும் என்று விரும்பினார். அதே கோட்பாட்டில் அவருடைய பிள்ளைகள் நாங்களும் இருக்கின்றோம். 

 

பெருந்தலைவர் படிக்கவில்லை, படிக்க விடவில்லை. ஆனால் தனக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் எண்ணவில்லை. தனக்கு கிடைக்காத கல்வி தன் தேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். படிக்க வைத்தால் நம் பிள்ளைகள் நாட்டை முன்னேற்றிவிடுவார்கள் என்று அவர் நம்பினார். ஆனால் தற்போது இருப்பவர்கள் எல்லாம் படித்தும், கொள்ளை அடிப்பது எப்படி என்று சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். படிக்காதவன் நாட்டுக்கு சோறு போடுகிறான், படித்தவர்கள் நாட்டை கூறுபோடுகிறார்கள். ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை என்றால் துள்ளிக் குதிக்கிறார்கள். எப்படி ஆடு மாடு மேய்க்கச் சொல்கிறீர்கள் என்று. எல்லாரும் கலெக்டராக ஆக முடியும். கலெக்டருக்கும் நாமதான் கஞ்சி ஊத்த வேண்டும். நாட்டின் பிரதமர் ஆனாலும், இல்லை அமெரிக்க அதிபர் ஆனாலும், கஞ்சி விவசாயிதான் தர முடியும். பல பேர், சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துவிடும் என்கிறார்கள். எனக்கு வாக்களித்தால் பிஜேபி எப்படி வரும். நான்தான் வெற்றிபெறுவேன். எனவே வெற்றிக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்றார். 

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்