Skip to main content

'நான் சங்கியா..?" கோபத்தில் காலணியை கழட்டிய சீமான்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

fdg


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் எப்போதும் தடாலடி கருத்துகளைக் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தற்போது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியிருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நம் தம்பிகளைத் தற்போது கைது செய்துவருகிறார்கள். இந்தக் கைதில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? துரைமுருகனை கைது செய்தார்கள், எவனும் வாய் திறக்கவில்லை.

 

4 மாதம் பிணை கூட தராமல் இருந்தார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொன்றாகக் குறைகூறி நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால் இது, மாரிதாஸை கைது செய்தபோது எங்கே போனது? 4 நாட்களிலேயே வழக்கை உடைத்து வெளியே வந்தாரே, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து வாய் திறக்கவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா, யார் உண்மையான சங்கி என்று. நானாடா சங்கி? சங்கிப் பசங்களா, யாரைப் பார்த்து யார் சங்கி என்று சொல்றீங்க? (காலணியைக் கையில் எடுத்து காட்டுகிறார்). அமைதியாக இருக்கும் என்னை வெறிபிடிக்க வைத்துவிடாதீர்கள். நானும் கோபத்தை அடக்கி, அடக்கி, அடக்கி எவ்வளவோ முயன்று பார்க்கிறேன், என்னால் முடியவில்லை. என் மனைவி என்னை மறுபடியும் கராத்தே கிளாஸ்க்கு போகச் சொல்கிறாள். 

 

என்னைப் பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கு எந்த வீட்டிலும் கஞ்சி ஊத்த மாட்டார்கள். அதற்காக எதையாவது எப்போதும் உளறிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் புலி என்பதால் உங்களை எல்லாம் ஒரே அடியாகப் போட வேண்டும். ஆனால் உங்களை எல்லாம் அடித்துப் பார்க்கவா என்னைப் பெத்து வளர்த்திருக்கிறார்கள். என்னைத் திட்டி பிழைப்பு ஓட்ட வேண்டும் என்றால் செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள். எனக்கு இது பழகிவிட்டது. தம்பிகள் எல்லாம் என்னைப் பற்றி அடுத்தவர்கள் தவறாகப் பேசினால் கொதிக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் அந்தக் கொதிப்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அது வெகுவாக குறைந்துவிட்டது.

 

உங்களுக்கும் இன்னும் பத்து ஆண்டுகளில் அது புரிய ஆரம்பித்துவிடும். நீங்களே அப்போது இதைக் கடந்து போவீர்கள். அண்ணனைத் திட்டிவிட்டார்கள் என்று கோவப்பட்டு 400 பேர் கூட பார்க்காத வீடியோவை 40 ஆயிரம் பேர் பார்க்க வைக்கிறதும் நீங்கள்தான்! எதுவாக இருந்தாலும் என் முகம் இருக்கிறது. நான் அந்த செய்தியிலேயே இல்லையே, என் படத்தை எதற்கு வைத்தார்கள் என்ற குழப்பம் நம்மை ஆட்டிப் பிடிக்கிறது. விஷத்திலும் போடுறான், ரசத்திலும் என் போட்டோவ போடுறான், ஒரு மண்ணும் புரிய மாட்டேங்கிறது. தொலைந்து போறான் என்று விட்டுவிட வேண்டியதுதான்" என்றார்.

 

 

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.