Skip to main content

கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்!!!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக புதிதாக ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கப்பட இருக்கிறது. சென்னை நெம்மேலியிலுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தில் இது செயல்பட இருக்கிறது.

 

sea water purification


இந்த நிலையத்திற்கான அடிக்கல்லை இன்று முதல்வர் எடப்பாடி. பழனிசாமி நாட்டினார். இதன்மூலம் 15 கோடி லிட்டர் நீர் சென்னைக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே 10 கோடி லிட்டர், இந்த ஆலை தொடங்கப்பட்டால் மேலும் 15 கோடி லிட்டர் தண்ணீர் மொத்தம் 25 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு 20க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கவேண்டும் எனக்கோரியுள்ளார். இவற்றை கேட்கும்போது மிகநன்றாகத்தான் இருக்கும், இதற்குபின் இருக்கும் பேராபத்து புரியாதவரை. என்ன, எது கொண்டுவந்தாலும், என்ன செஞ்சாலும் தப்புனு சொன்னா என்னதான் பண்றது என கேட்கிறீர்களா.

உலகநாடுகளில் மிக அதிகமாக கடல்நீரை குடிநீராக்குவது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்றவைதான். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ள மொத்த நாடுகளில் 55 சதவீதம் அவர்களின் பங்குதான். அவர்களுக்கு வேறுவழி இல்லையென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதைத்தவிர்த்த மற்ற நாடுகளில் பெரும்பாலனவை இந்த திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளது, அப்படி தொடர்ந்து செயல்படும் இடங்களில் எங்களுக்கு வேண்டாம் என போராட்டம் நடக்கிறது. 

அதற்கு பின்னால் காரணம் இருக்கிறது. கடலின் ஆழத்திலிருக்கும் குளிர்ந்த நீரை கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும்போது அதில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. தவிர, லார்வா, முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன. அதில் கலக்கப்படும் பூச்சிக்கொல்லி, குளோரைடு போன்ற அமிலங்களால் அந்த நீர் உயிர்கள் வாழ தகுதியற்றதாகிறது. மேலும் அந்த நீர் 10 டிகிரி அதிக வெப்பத்துடன் வெளியேற்றப்படுகிறது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும்போது அதில் பாதி கழிவாக வெளியேறும், அது சாதாரண கழிவாக வெளியேறுவதில்லை. பொதுவாக கடல்நீரில் மூன்று சதவீதம் உப்பு இருக்கும், ஆனால் இந்த கழிவில் ஆறு சதவீதம் உப்பு இருக்கும். மேலும், சுத்திகரிப்பின்போது கலக்கப்படும் வேதிபொருட்களும் கலந்து வெளிவரும். 
 

 

sea water purification


இதனால் கடல் ஓரத்தின் உப்பு தன்மை அதிகரிக்கும். அதுவே தொடர்ந்தால் அப்படியே குறிப்பிட்ட தூரம்வரை உப்பு அதிகரித்து அந்தப் பகுதி உயிரிழந்த கடலாகும் (dead sea). உயிரிழந்த கடல் என்றால் அந்தப் பகுதியில் எந்த ஒரு உயிரும் வாழாது, அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும். உணவு சங்கிலியின் முக்கிய உறுப்பான நுண்ணிய உயிர்கள் அழியும், முற்றிலும் உப்பு மிகுந்த நீராக மாறும். அது அப்படியே கடல் ஓரங்களில் பரவும், கடலோர மாவட்டங்களின் நிலத்தடி நீர் உப்பாகும். கடலரிப்பு, கடல்வெப்பம் அதிகரிப்பு காரணமாக புவி வெப்பம் அதிகரிக்கும் இப்படியாக பல்வேறு ஆபத்துகள் நிகழும். ஆரம்பத்தில் நீர் கிடைக்கிறது என மக்கள் வரவேற்றாலும், இப்போது எங்கள் வாழ்விடமே நாசமாக போகிறது என போராடி வருகின்றனர். சென்னை நெம்மேலியில் மட்டுமே நொடிக்கு 2000 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அந்தப் பகுதிகளிலும் மேற்கூறிய விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. அவர்கள் ஏற்கனவே உள்ள நிலையத்தை மூடவேண்டும் என போராடி வருகின்றனர். 

 

sea water purification



குடிநீருக்கு எந்த வழியும் இல்லாத நாடுகளே அதை வேறுவழியின்றிதான் உபயோகிக்கின்றன. ஆனால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவமழைகள், ஆறுகளின் கழிமுகங்கள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை என அனைத்தும் இருந்தும் நாம் இந்த திட்டத்தை கையிலெடுத்ததுதான் வருத்தத்திற்குரிய சூழல். முழு உரிமையுள்ள காவிரி நீரை விட்டுவிட்டு, கிருஷ்ணா, கோதாவரியை பற்றி பேசுவது, நதிநீர் இணைப்பு என மாயைக் காட்டுவது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்றவற்றை கொண்டுவருவோம் எனக் கூறுவது, புயல்களால் அழிந்த மரங்களுக்கு மாற்றை உருவாக்காமல், எட்டுவழிச்சாலையை கொண்டுவருவோம் என தொடர்ந்து தெரிவிப்பது இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இயற்கையாக நீரை மீட்டெடுக்க வேண்டும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், நீரியல் மேலாண்மை மற்றும் ஆய்வாளர்களின் ஆலோசனைப்படி நடப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஏரிகளை தூர்வாரி மழை வரும்போது வடிகால் அமைத்து பாதுகாக்க வேண்டும். இப்படியாக பல வழிகள் இருக்கின்றன. அரசு தற்போது எதாவது ஒன்றை செய்தால் போதும் என்றில்லாமல், நீண்டகால திட்டங்களாக வகுத்து, சரியான திட்டங்களை தரமாக அமைத்தாலே குடிநீர் பிரச்சனை தீரும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவும் ஏற்படாது. 

சென்னையில் மட்டும் 3,600 ஏரிகள் பயன்பாட்டில் இருந்தன... ஆண்டுக்குச் சராசரியாக 1000 மி.மீ மழை பொழிகிறது... 

 

 

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.