Skip to main content

பாசிச பாஜக ஒழிக என்றால் தேசத்துரோக குற்றமா?

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

பாஜகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கூறுவது வழக்கமான காரியமாகிவிட்டது. தமிழ்நாடு அரசாங்கமும் மத்திய பாஜக அரசாங்கமும் மக்களின் விருப்பங்களுக்கு மாறான பல காரியங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கையை தொடர்கிறது.
 

tamilisai



சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தலைவர்  தமிழிசை பயணித்திருக்கிறார். அவருடன் பயணித்த சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி, 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்டிருக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய தமிழிசை அந்த மாணவியுடன் படு மோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த மாணவி தனது பேச்சுரிமை என்று கூறியதையே தவறு என்று கூறுகிறார்.

பேச்சுரிமை என்றதால்தான் அந்த மாணவியின் பின்புலம் குறித்து சந்தகேம் வருவதாக தமிழிசை கூறியிருப்பதால், உரிமைக்காக போராடுகிறவர்கள் அனைவரும் தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் என்ற முடிவுக்கு பாஜக போயிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில்தான் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சதி செய்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ் உள்ளிட்ட 5 இடதுசாரிச் சிந்தனையாளர்களை மத்திய அரசு கைது செய்தது. அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றமே மறுத்து விளக்கம் கேட்டிருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டிருக்கிறார் என்றால், அவருடைய ஆத்திரத்துக்கு பின்னணி என்ன என்று தமிழிசை பார்த்திருக்க வேண்டுமே தவிர பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல சின்ன விஷயத்தை பூதாகரமாக்கி, போலீஸ் கைது என்கிற அளவுக்கு போயிருக்க வேண்டியதில்லை.

 

sofia



தனது ஊரை நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூகவிரோதிகள் என்று கூறி கேவலப்படுத்திய பாஜகவை பாசிச பாஜக என்று சோபியா கோஷம் போட்டிருக்கிறார். இதை எளிதில் கடந்து சென்றிருக்கலாம். அல்லது, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறி பிரச்சனையை முடித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தமிழிசையின் சகிப்புத் தன்மையை பாராட்டியிருப்பார்கள். ஆனால், ஒரு மாணவிக்கு எதிரான தமிழிசையின் இந்த நடவடிக்கை அவருடைய பதற்றமா, மத்திய அரசு இருக்கிறது என்ற ஆணவமா? என்று விவாதிக்கிற நிலையை உருவாக்கிவிட்டது.

2011 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை. தேர்தல் முடிவுகளை கொண்டாடிய அதிமுகவினர் கலைஞர் வீட்டு முன் வெடி போடுகிறார்கள். கலைஞருக்கு இனிப்புத் தரவேண்டும் என்கிறார்கள். கீழே சத்தத்தைக் கேட்டு இண்டர்காமில் விசாரித்த கலைஞர், நான்கு பேரை மட்டும் மேலே வரச்சொல்லி, அவர்களை உட்காரவைத்து, லட்டு எடுத்துக் கொள்கிறார். பிறகு, அந்தப் பகுதியில் உள்ள பழைய அதிமுகவினர் சிலரை விசாரிக்கிறார். கடைசியாக, அந்த அம்மாவைப் பார்த்தீங்கன்னா என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்கய்யா என்று அனுப்பி வைக்கிறார்.

இதுதான் அரசியலில் சகிப்புத்தன்மை என்பதற்கு உதாரணம். கலைஞரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தமிழிசை முன்வர வேண்டும். தமிழிசையோ அந்த மாணவியை கைதுசெய்யும்படி புகார் கொடுக்கிறார். பாஜகவின் இன்னொரு தலைவரோ, அந்த மாணவிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார். அவர்களுடைய பதற்றம் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.

 

sterlite



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாட்ஸாப்பில் பேசிய துணை நடிகை நிலானியை நீலகிரி வரை தேடிச்சென்று கைது செய்கிறார்கள். மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்களை தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர். மீத்தேன் வாயு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக வழக்கறிஞர் திவ்யபாரதியை கொடூரமாக மிரட்டினார்கள். அவருடைய வீட்டை ரெய்டு செய்தனர். பாஜகவுக்கு எதிராக பேசுகிறவர்கள் அனைவரையும் ஆண்ட்டி இண்டியன் என்கிற அளவுக்கு மோசமான நிலையை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வழியில் குறுக்கிட்டதற்காக 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எட்டுவழிச் சாலை என்ற ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கிற எல்லோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து மிரட்டும் போக்கு நீடிக்கிறது.

அதேசமயம், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை படுமோசமாக விமர்சனம் செய்துவிட்டு, நீதிமன்றத்தின் கண்டனங்களை அலட்சியம் செய்துவிட்டு, போலீஸ் பாதுகாப்பிலேயே சுற்றிய எஸ்.வீ.சேகரையும், பெரியார் சிலை குறித்தும், கவிஞர் கனிமொழி குறித்தும் கடுமையான கருத்தை தெரிவித்த எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்ததை மக்கள் மறக்கவில்லை. நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் தனிப்பட்ட வகையிலும், அரசியல்ரீதியாகவும் கருத்துத் தெரிவிக்க பாஜகவினருக்கு மட்டும்தான் உரிமை இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி நீண்டகாலம் நீடிக்காது என்பதை பாஜகவினர் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.

மத்திய பாஜக அரசு மீது டெல்லியிலிருந்து சென்னை வரை மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. அந்த தோற்றத்தை மாற்ற மோடியை கொல்ல யாரோ சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டார்கள். தமிழ்நாட்டிலோ அரசாங்கத்தைக் கவிழ்க்க சமூகவிரோதிகள் சதி செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆனால், மொத்தத்தில் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளுக்கு எதிராக மக்களின் கோபம் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. அதன் சாட்சியே சோபியாக்களின் முழக்கம் என்பதை பாஜகவும் அதிமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு மாணவியே கைது நடவடிக்கைக்கு பயப்படாத நிலை இருக்கிறது. உண்மையை உணராமல் மக்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்றால், மிகப்பெரிய எழுச்சியாக வெடித்தே தீரும்.

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.