Skip to main content

"கலைஞர் வசனம் எழுதிய படத்தில் வாய்ப்பு வழங்கியது பெரியார் தான்" - சத்யராஜ் பகிரும் சுவாரசியம்!

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

கலைஞர் வசனம் எழுதிய படத்தில் வாய்ப்பு வழங்கியது பெரியார் தான் - சத்யராஜ் பகிரும் சுவாரசியம்

 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், சமூக செயற்பாட்டாளர் அருள்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

அதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “நான் 1986 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் உருவான பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் தந்தை பெரியார் தான். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டே நம்மை விட்டு மறைந்துவிட்டார். அப்படி இருக்கையில் எப்படி அந்த வாய்ப்பை தந்திருக்கக் கூடும் என்று நீங்கள் எண்ணலாம். வாய்ப்பு அளித்தது என்றால் தந்தை பெரியாரின் உருவம் அல்ல, அவருடைய கொள்கைகள் தான் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தன.

 

1986 ஆம் ஆண்டில் நானும் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் அதிக படங்கள் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் தான் இருக்கும். அச்சமயம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஒரு நாளில் இயக்குநர் மணிவண்ணன் என்னிடம் வந்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் கைகோர்க்கலாம் என்று சொன்னார். நானும், அதற்கென்ன.. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும் சொல்லுங்கள், வருகிறேன் என்றேன். ஆனால், அந்த படத்தில் கலைஞர் வசனம் எழுதும்  சிறப்பு இருக்கிறது என்றார்.

 

அவருடைய வசனத்தை பேசித்தானே சினிமாவிற்கு வந்தோம் என்று எண்ணி உடனே சரி என்று சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் நான் பெரியார் கொள்கைக்காரன் என்றோ எம்.ஜி.ஆர் ரசிகன் என்றோ யாருக்கும் தெரியாது. நான் கலைஞர் வசனத்தில் நடிப்பதை என்னை சுற்றி இருந்தவர்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நான் நடிப்பதை தடுக்க பல பேர் முயற்சி செய்தார்கள். நான் இந்த படத்தில் நடித்தால் என்னை திமுககாரன் என்று பேர் குத்தி விடுவார்கள் என்று சொன்னார்கள்.

 

நானும், எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுடைய முதல் படம் கலைஞர் வசனத்தில் உருவான படம் தான். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்றேன். என்னிடம் இருந்த உதவியாளர் நான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகக் கேட்டார். அதற்கும் கலைஞரின் பூம்புகார் நிறுவனம் சரி என்றது. அதற்கு ஒரு படி மேல் என்னிடம் இருந்தவர், ‘கலைஞர் வசனம் எழுதி சில படம் சரியாக ஓடவில்லை. கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அதனால் அவருக்கு நேரம் சரியில்லை. இந்த நேரத்தில் நீங்கள் நடிக்கனுமா?’ என்று கேட்டார்.

 

அப்போதுதான் நான் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்கனும் என்றேன். நான் ஒரு பெரியாரியவாதி. அதனால் இது போன்ற நம்பிக்கை இல்லை என்று அப்போதுதான் முதல் முதலில் சொன்னேன். எதற்கும் பயப்படாதவன் இந்த நேர காலத்திற்கு பயப்படுவான். அதனால்தான் கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் தந்தை பெரியார் தான்.

 

அப்படி அந்த பாலைவன ரோஜாக்கள் படத்தின் படப்பிடிப்பு முரசொலி அலுவலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. 4 ஆம் நாள் படப்பிடிப்பின்போது நானும் மணிவண்ணனும் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது கலைஞர் வருகிறார் என்ற செய்தி கேட்டவுடன் உடனே சிகரெட்டை கீழே போட்டுவிட்டு கலைஞரிடம் போய் பேசினேன். அப்போது ஏற்பட்ட பழக்கம் அடுத்து அவர் எழுதிய மண்ணின் மைந்தன் படத்திலும் நான் நடித்தேன். பெரியார் படத்தில் நான் நடித்த போது கூட கலைஞர் என்னிடம் மிகவும் நெருக்கமாகப் பழகினார்.

 

மேலும், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை முதல் முதலில் அமலாக்கியவர் கலைஞர் தான். ஆனால், அந்த நேரத்தில் நமக்கு நேர்மாறாக இருந்தவர்கள் பலரும் இதை எதிர்த்தார்கள். இதற்காகவே பெண்கள் அனைவரும் கலைஞரின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை கொடுத்துவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு முழுமையான விடுதலையை அடைவார்கள். இன்றும் பல முதலமைச்சர்கள் கொடி ஏற்றுவதற்கு நமது கலைஞர்தான் காரணம். மத்திய அரசில் ஆட்சி செய்த மோடி கூட குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது கொடி ஏற்றுகிறார் என்றால் அதற்கும் கலைஞர் தான் காரணம். இந்த துணிச்சலான அரசாங்கத்தை பத்து பக்கம் வசனத்தோடு காட்டத் தெரியும். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய புன்னகையிலும் காட்டத் தெரியும்.

 

திராவிடம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது பெரும் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்குள் உள்ளே போனவர்கள் வெளியே வர முடியாது. ஒரு தனி மனிதனின் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் ஒரு சித்தாந்தத்தில் குறையே சொல்ல முடியாது என்றால் அது தான் திராவிடச் சித்தாந்தம். ஏனென்றால் அனைவரின் சம உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்புக்காகவும் உரிமை கொடுக்கும் இயக்கம் இந்த திராவிட மாடல் இயக்கம் தான். ஒரு வாரிசு என்பதற்காக அவரை குறை சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் தன்னுடைய 15 வயதில் மிதிவண்டியில் கொடியைக் கட்டிக்கொண்டு சென்று மிசாவில் அதிக அடக்குமுறைகளுக்கு ஆளானவர். இந்த திராவிட அரசியலில் துணிச்சல் மிக்க தலைவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

 

கலைஞர் வசனத்தில் நான் நடித்த இரண்டு படங்களுமே கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்த சமயம் தான். அவர் முதலமைச்சராக இருந்த போது என்னை அவர் வசனத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது நடிக்கீறிங்க. முதலமைச்சராக இருந்தபோது நடிக்க மாட்டிக்கிறீங்க, ஏன்? என்று கலைஞர் கேட்டார். அதற்கு நான் அந்த தயாரிப்பாளர் சம்பளத்தை கொடுக்க மாட்டார் என்று சொல்லிவிட்டேன். முதலமைச்சராக இருந்தால் இதையெல்லாம் எப்படி வாங்கிக் கொடுக்க முடியும் என்று கலைஞர் சிரித்த முகத்தோடு சொன்னார். இப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அந்த ஒவ்வொரு சிரிப்புக்குள்ளும் அவருடைய சித்தாந்தம் இருக்கும்” எனக் கூறினார்.

 

 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.