Skip to main content

இந்த இனத்திற்காக பல புலிக்குட்டிகள் தயாராகி வருகின்றன - சத்யராஜ் ஆவேசப்பேச்சு 

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான 'நீட்' தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு, சென்னை காமராசர் அரங்கத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

saththya raj speech

 

இது மாதிரி இன்னொரு மேடை அமையுமா என்பது தெரியவில்லை. இதுபோன்ற மேடையை அமைத்துக்கொடுத்தற்கு உலக தமிழ் கூட்டமைப்புக்கும், இயக்குனர் கௌதமன் மற்றும் அவரது தம்பிகள் இளம் சிங்ககளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழைப்பவர்கள் அழைத்தால் அனைவரும் வருவார்கள் என்பது தெரிகிறது. இது என்ன ஒரு அருமையான மேடை. ஒருவருக்கொருவர்  உணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள  மொழி  ஒரு தடை அல்ல. வங்கத்து சிங்கம் சட்டர்ஜி  எவ்வளவு அருமையாக பேசினார். அவர் வங்கத்து மொழியில்தான் பேசினார் அதனை தோழர். தியாகு மொழிபெயர்த்தார். நாமெல்லாம் எவ்வளவு அருமையாக உள்வாங்கி ரசித்தோம். அந்த உணர்வுள்ளவர்கள் இதேபோல் எதிர்காலத்தில் அகில இந்திய அளவில் இதுபோல் ஒரு மேடை உருவாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நீதி அரசர் ஹரி பரந்தாமன் பேசுகையில் சொன்னார் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டு ஒரு விஷயத்தை நடத்துவார்கள் அது சட்டமாக இருந்தாலும் சரி, திட்டமாக இருந்தாலும் சரி ஏற்கனேவ முடிவு செய்யப்பட்டுவிடும்.

சினிமாவில் கூட கதை எழுதிவிட்டு அதற்கு க்ளைமாக்ஸ் இது தான் என்று முடிவு செய்துவிடுவோம். நீதியரசர் அதைத்தான் சொன்னார் சினிமாவில் கூட க்ளைமாக்சில் கதைப்படி கடைசியில் ஹீரோதான் ஜெயிப்பார் என்று திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஆனால் இங்கு வில்லனுக்கு கதை எழுதிவிட்டு அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைப்பதுதான் இங்கு மிகவும் கொடுமையாக உள்ளது. இங்கு அனைத்து தோழர்களும் அதைத்தான் புட்டு, புட்டு வைத்தார்கள். நான் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை கூறுகிறேன். நான் அனிதாவின் துயர சம்பவம் நடைபெற்றபொழுது  படப்பிடிப்பில் இருந்தேன். வந்தபிறகு  தம்பி பேரறிவாளன் அவர்களின் வீட்டிற்கும், அங்கிருந்து நேராக அனிதாவின் வீட்டிற்கும் சென்றேன். அங்கு அனிதாவின் தந்தையும், அண்ணன் மணிரத்தினமும் இருந்தார்கள். 


அங்கு ஒரு சோகமான சூழ்நிலை இருந்தது அந்த தருணத்திலும் அவர்களது மன உறுதியும், கொள்கைப்பிடிப்பும் எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த சோகமான சூழலில் மணிரத்தினம் என்னிடம் வந்து அண்ணா அனிதாவிற்கு இந்தப் புத்தகத்தைதான் அளித்தேன் என்று காண்பித்தார். அதை திறந்தவுடன் கடவுள் இல்லை என்று பெரியாரின் தத்துவத்தை எழுதி வைத்துள்ளார்கள். அது காலம்காலமாக கடவுள் இல்லை என்று நிரூபணம் ஆகித்தான் வருகிறது. தற்போது காஷ்மீரில்இல்லவே இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. 


என் அனுபவத்தில் சொல்கிறேன் நான் நான்காவதுதலைமுறை  என் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் கற்றேன். நல்ல மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக தேர்ச்சிபெற்று கல்லுரியில் ஆங்கில வழியில் கற்கவேண்டிய சூழல். சேர்ந்தபோது முதல் மாணவனாக இருந்தவன் ஜஸ்ட் பாஸ் ஏன் தேர்ச்சியில் தோல்வியும்  அடைந்தேன். இவ்வளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்த நான் இவ்வளவு பெரிய பின்னடைவு அடைந்துள்ளேன் என்றால். தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அனிதாவினால் எப்படி போட்டிபோட முடியும். ஒரு மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பரீட்சை எழுதச் சொல்வது என்பது, தமிழ் சினிமா வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பொழுது அங்கு தெலுங்கு படமாக இருந்தால் என்ன செய்வது அதுபோலதான். 


நாம் படித்த பாடத்திலிருந்து வரும் என நம்பி தேர்வெழுத சென்றால் அங்கு அது இல்லை. அதற்கு என்ன வழி அதற்கென்று தனி டியூசன் சென்டர் உள்ளது ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள். தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்பதால்தான் பெருந்தலைவர் காமராஜர் சத்துணவு திட்டமெல்லாம் கொண்டுவந்தார். எப்பொழுதும் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடும் சமூகம்தான் நல்ல பண்பட்ட சமூகம். இல்லை கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடாமல்  மேலும், மேலும் மிதிப்பது  நாகரிகமான சமூகமா. இதுபோன்ற ஒரு மேடையில் அனைத்து பேச்சாளர்களும் அருமையாக பேசினார்கள். செந்தமிழன் சீமான் அமைதிப்படையில் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில், அந்தப் புலி இன்னும் எந்த அளவிற்கு வேகமாக இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். இந்த இனத்திற்காக பல புலிக்குட்டிகள் தயாராகி வருகின்றன.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்