Skip to main content

சாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் 'EXCLUSIVE'...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sathankulam

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப்பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களின் வட்டாரத்தில் இருந்து கிடைத்தது.

 

உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் உடற்கூறாய்வில் தடய அறிவியல் துறை பேராசிரியர், அதே துறையைச் சார்ந்த இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர், உதவி பேராசிரியர் என இருவர் மட்டுமே இருந்தனர். இணை பேராசிரியர், ஒரு பெண் மருத்துவர். அவர் கடைசி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யும் குழுவில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மதுரை மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இருந்து தடய அறிவியல் துறை இணை பேராசிரியர் ஒருவரை இடம் பெற வைத்திருக்கலாம். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவரை வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ எடுக்கப்பட்ட உடற்கூறாய்வில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மரணங்களை உடற்கூறாய்வு செய்யும்போது பின் பற்றவேண்டிய டிஜிட்டல் அட்டாப்சி எனப்படும் நவீன உடற்கூறாய்வு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இறந்தவரது சடலத்தை சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினால் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் தெளிவாகத் தெரியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முறையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியும். அவர் எதனால் இறந்தார் எனத் தெளிவாக தெரிந்துவிடும். அந்தப் பதிவுகள் எலக்ட்ரானிக் முறையில் அழிக்கப்பட முடியாத வகையில் இருக்கும்.

 

இங்கிலாந்தில் சமீபத்தில் சந்தேகப்படக்கூடிய விதத்தில் நடந்த மரணங்களை 'டிஜிட்டல் அட்டாப்சி' முறையில் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அதில் மரணத்திற்கான காரணம், மரணம் அடைந்தபோது இருந்த உடல்நிலை ஆகியவை மிகத் தெளிவாக தெரிந்தது. அந்த முறையில் இந்த இருவரது உடற்கூறாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

 

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வின் அடிப்படையில் இருவரது மரணத்திற்கான காரணம் (Homicide due to prolonged physical and psychological torture) நீண்ட நேரம் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மூலமாக மரணம் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தங்களது ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்களது பின்தொடை மற்றும் ஆசன வாயிலுக்கு அருகே உள்ள பகுதி மற்றும் ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.(Multiple contusions all over the gluteal and rectum region and in the upper and middle part of thigh). rectum எனப்படும் குடலின் கடைசிப் பகுதியான 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் எனப்படும் ஆசனவாய் வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. (rectal bleeding) இதனால் அவர்களுக்கு ரத்தக் கசிவு அதிர்ச்சி (Haemorrhagic shock) ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர்களது ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இதுபற்றி நம்மிடம் பேசிய உடற்கூறாய்வு மருத்துவ நிபுணர் ஒருவர், "அவர்களது விதைப்பை, ஆணுறுப்பு (scrotum, penis) ஆகிய பகுதிகளில் காயங்கள் இல்லை. அவர்களது வயிறு மற்றும் மார்பு கூட்டிற்குள் (abdomen, thorax) எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தக் காயமும் இல்லை. மரணத்திற்கான காரணம் அவரது இடுப்புப் பகுதியில் இருந்த ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட ரத்தப்போக்குதான்'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

நாம் இதுபற்றி கருத்தறிய புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கருணாநிதியிடம் கேட்டோம். "இந்த ரிப்போர்ட்டின்படி மரணம் நிகழ்ந்திருக்குமானால் இது கொடுமையான, சித்ரவதையினால் ஏற்பட்ட மரணம். இதைச் செய்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் இதில் உண்மைகள் வரும் என்றார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார்.

 

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பதில், டாக்டர் கருணாநிதி போன்றவர்களின் நியாயக் குரலும் அடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.