Skip to main content

“காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர் ரேவதி! நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி!” -எஸ்.எஸ்.சிவசங்கர்

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
sathankulam lockup death

 

“சாத்தான்குளம் கொலை வழக்கின் குற்றவாளிகள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற முறையில் ஒரு புறம் அவமானம் என்றாலும், காவலர் ரேவதி தைரியமாக வழக்கில் அளித்துள்ள சாட்சியம் காவல்துறைக்கு பெருமை சேர்க்கிறது.

தைரியமாக சாட்சி சொல்லி இருந்தாலும், பெரும் பயத்தோடே இருக்கிறார் ரேவதி. அதை சாட்சி சொன்ன அன்றே நீதிபதி பாரதிதாசன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அது நீதிபதியின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பயத்தின் காரணமாக, தன் பெயரை பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அவர். 

ஆனால் முக்கிய வழக்கின் சாட்சி என்ற முறையில், அவர் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் இடம் பெற வேண்டிய சூழல். நீதிமன்ற ஆவணம் பொது ஆவணம் என்ற வகையில் வெளிவந்து விட்டது. பெயர் வெளியில் தெரிந்தது அவரது பாதுகாப்புக்கு ஆபத்து, இருப்பினும் நீதிமன்ற ஆணைப்படி அவரது வீட்டிற்கு காவல் போடப்பட்டுள்ளது.

அவரது கணவர் சந்தோசம், தன் மனைவியின் நிலைபாட்டிற்கு ஆதரவாக நிற்பது ஆறுதல். வேலை போனாலும் பரவாயில்லை, உண்மையை சொல்வோம் என உறுதியாக தெரிவிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளும், காவலர் ரேவதியை அலைபேசியில் தொடர்பு கொண்டு, தைரியம் அளித்துள்ளனர்.

காவலர் ரேவதி, ஒரு மாத விடுப்பு கோரி, அதுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சி காவலர் ரேவதிதான் என்பதால், அவருக்கு எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும். நேரடியாக இல்லை என்றாலும் கடும் நெருக்கடிகள் வரும். அவரை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை.

காவலர் ரேவதியின்  நேர்மையான நிலைபாட்டிற்காக, அவரது விருப்பம் அறிந்து, காவல்துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றி அவருக்கு பணி அளிக்க வேண்டும். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட அலுவலகத்தில், (உதாரணத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் போல) பணி வழங்கி பாதுகாக்க வேண்டும்.

இது வழக்கு முடியும் வரை அல்ல, அவரது பணி காலம் முழுமைக்கும். வழக்கு முடிந்த பிறகும், அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். காரணம், வழக்கில் குற்றவாளிகளாக உள்ள ஒவ்வொருவரின் முன்வரலாறும் அப்படி இருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தன் சொந்த மருமகளை வரதட்சணைக்காக கொலை செய்ய முயற்சித்தார் என்று தேனி, வைகை அணை காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாம். அவரது துறை அனுபவத்திற்கு, வழக்கை எப்படியும் திசை திருப்பும் ஆற்றல் உள்ளவராக இருப்பார்.

எஸ்.அய். ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் இருவரது கடந்தகால காவல்நிலைய தாக்குதல் வரலாறுகள் அச்சமூட்டுகின்றன. தினம், தினம் புதிதாக செய்திகள் வருகின்றன.

உலகமே உற்று நோக்கும் நேரத்திலேயே டி.எஸ்.பி., நீதிபதியை மிரட்டும் உடல்மொழியை வெளிப்படுத்தினார். ஒரு காவலர் அவமானப்படுத்தினார் என்றால், மற்ற பிரச்சனைகள் தலைதூக்கி, ஊடக கவனம் இந்த வழக்கின் மீது குறையும் நேரத்தில், இவர்கள் தங்கள் திறமையை காட்டுவார்கள். வழக்கை தோற்கடிக்க எல்லா முயற்சியையும் எடுப்பார்கள். 

இந்த இரட்டை கொலை வழக்கில் உயர்நீதிமன்ற அழுத்தத்தாலும், எதிர்கட்சிகள் நெருக்கடியாலும், மக்கள் கொந்தளிப்பாலும், தற்போது கொலைக் குற்றவாளிகள்  கைது நடைபெற்றுள்ளது.

இனிதான் முக்கிய கட்டம். பரபரப்பான வழக்குகளில், துவக்கத்தில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்கள் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்கப்படும். பின்னர், படிப்படியாக வழக்கை நீர்த்து போக செய்ய வழிவகைக் காணப்படும்.

இந்த வழக்கில் குற்றவாளிகளே காவல்துறையில் பணிபுரிபவர்கள். வழக்கு காவல்துறைக்கு அவமானம் ஏற்படுத்தக் கூடியது என துறையினர் நினைக்க வாய்ப்பு உண்டு. வழக்கின் போக்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியது. எனவே வழக்கை திசை திருப்ப, குற்றவாளிகளை தப்ப செய்ய ஒரு தரப்பு முயற்சி எடுக்க வாய்ப்பு உண்டு.

வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தாலும், சி.பி.ஐ. விசாரித்தாலும், இந்த வழக்கை சிறப்பு வழக்காக கருதி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் யார் என்பதை, இனி தேடி கண்டுபிடிக்க வேண்டிய வழக்கல்ல இது.  பட்டியல் தயாராக உள்ளது. வழக்கை நிரூபிக்க தேவையான குறைந்தபட்ச சாட்சியங்கள் இப்போதே தயார். எல்லாவற்றையும் இணைத்து சட்டப்பூர்வமாக வழக்கை நடத்த வேண்டும். அவ்வளவே.

எனவே வழக்கை நடத்த ஒரு கால நிர்ணயம் செய்து, விரைவாக வழக்கை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஆவன செய்ய வேண்டும். அது கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு வழங்கும் நீதி மட்டுமல்ல, குற்றவாளிகளை தப்ப விடாமல் செய்யும் வழிமுறையும் ஆகும். காவலர் ரேவதி போன்ற சாட்சிகளுக்கு வழங்கும் பாதுகாப்பும் ஆகும்.

# நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி !”

எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்


 

Next Story

“திருமாவளவன் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காகப் போராடுகிறார்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் திங்கள் கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், ‘நம்மை திசை திருப்ப பல்வேறு பொய்ச்செய்திகள் வரும். நாம் திசை திரும்பாமல் தேர்தல் பணியாற்ற‌ வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறிக்க முயன்றபோது தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காக போராடுகிறார். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் சமூகநீதியின் குரலாக இருக்கிறார். தனது வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்தவர். அவரின் உடல்நலத்தை பாதுகாக்கும் அளவிற்காகவாவது ஓய்வு கொடுங்கள். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த கூட்டணியாக இருக்கவும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருப்பவர் திருமாவளவன்” எனப் பேசினார்.

Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இதனைத் தொடர்ந்து பேசிய சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமாவளவன், “27 ஆம் தேதி நான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய‌ இருக்கிறேன். குறுகிய கால இடைவெளியில் நாம் சிறப்பாக செயல்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். வரும் 22 நாட்கள் திமுக தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நமது கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடாமல் என்னை பார்க்க கட்சியினர் வந்தால் ஏமாற்றுகின்றனர் என்று பொருள். விசிக கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் தான். எனவே தங்களுக்கு கூட்டணி அளிக்கும் பணியை சரியாக செயல்படுத்த வேண்டும்.

எதிர் அணியினர் திட்டமிட்டு நம்மை சீண்டுவார்கள். நாம் இந்த சூதில் இரையாகி விடக்கூடாது. நாம் நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவின் சாதனைகளை பரப்பலாம். ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற வைக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. இந்தியாவை யார் ஆள வேண்டுமென்பதே கேள்வி. தமிழ்நாட்டை போல கேரளா, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார் எனப் பல்வேறு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியினர் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. இந்தியா கூட்டணியின் கட்சியினர் தங்களின் மாநிலங்களில் வெற்றி பெற்றால் பாஜகவை தூக்கி ஏறிய முடியும். இதை முதலில் கணித்து வியூகத்தை வகுத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே தான் விசிக தொடர்ந்து திமுகவுடன் பயணிக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணம், திமுக - விசிக உறவு என்பதை கொள்கை சார்ந்த கூட்டணி என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். விசிகவிற்கு மட்டும்தான் கலைஞர் இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த கூட்டணி 2018 காவிரி போராட்டத்தில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

2009ம் ஆண்டு என்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல மணி நேரம் பேசினார்கள். நான் அப்போது தனி ஒருவனாக சிக்கினேன். ஆனால் கலைஞரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தேன். எவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதும் இந்த கூட்டணி 28 தொகுதிகளை வென்றது. திமுக தோல்விக்கு காரணம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் கலைஞர் அதற்கு பதிலளித்து பேசுகையில் விசிக வாக்குகளால் தான் கடலூரில் 5/9 தொகுதிகளை வென்றோம் என்று தெரிவித்தார். இதனை திமுக தலைவர் உள்ளிட்ட அனைவரும் நன்கு அறிவர்.

நானும் மு.க. ஸ்டாலினும் சமூகநீதிக்காக கை கோர்த்து இருக்கிறோம். பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை கட்டமைத்ததில் விசிகவின் பங்கு கணிசமானது. இந்த நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர் மற்றும் திமுகவினர் பேசினர். கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.