Skip to main content

கொலை வழக்கில் ஓட்டை! உயர்மட்ட சதி ஆலோசனை! -அ.தி.மு.க. வழக்கறிஞர்களே விமர்சனம்!!!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

sathankulam jayaraj fenix

 

நெஞ்சு வலியாலும் மூச்சுத் திணறலாலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தார்கள் எனச் சொன்னவர் முதல்வர் எடப்பாடி. ஜூன் 19ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்திற்கு ஜூலை மாதம் 1ஆம் தேதிதான் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.-யினர் பதிவு செய்கிறார்கள்.

 

இந்தக் கொலை வழக்கைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒரு ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. டி.ஜி.பி. திரிபாதி, எடப்பாடி ஆலோசகர் சத்தியமூர்த்தி, உளவுத்துறை ஐ.ஜி. மற்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். முதலில் உளவுத்துறையின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

 

சாத்தான்குள சம்பவத்தில் மக்களது போராட்டங்களைப் பலர் தூண்டிவிடுகிறார்கள். அந்தச் சம்பவம் நடந்தபோது, தற்பொழுது போலீசுக்கு எதிராக பேசும் ரேவதிதான் பாரா காவலராக இருந்தார். அந்தக் காவல்நிலையத்தில் இதுபோல சம்பவம் நடந்தது என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரேவதி தெரிவிக்க தவறிவிட்டார். அதேபோல் இந்தச் சம்பவத்தில் வி.வி. மினரல் வைகுண்டராஜன், ஹரி நாடார் போன்றவர்கள் சாதீய ரீதியாக போராட்டங்களைத் தூண்டி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் அதிகாரிகள் சிலர் சம்பவம் நடந்த சமயத்தில் காவல்நிலையத்தில் இல்லை.

 

வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி, சி.பி.ஐ.-க்கு வழக்கை மாற்றிய அரசின் உத்தரவை ஏற்கவில்லை. சி.பி.சி.ஐ.டி.-க்கு பரிந்துரைத்ததுடன், ஒருபடி மேலேபோய் இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்யத் தேவையான முகாந்திரம் இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். அதனடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என உளவுத்துறை கொடுத்த பரிந்துரை விவாதிக்கப்படுகிறது. உளவுத்துறையின் இந்த அறிக்கையை அட்வகேட் ஜெனரல் மற்றும் அவருடன் இருந்த வழக்கறிஞர்கள் எதிர்க்கிறார்கள். நேரடியாகக் கொலை வழக்கு என 302ஆவது செக்சனில் பதிவு செய்யாமல் 304/1, 304/2 என்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யலாம் எனச் சொல்கிறார்கள். 304/1-இன் பிரிவின் படி, ஒரு தாக்குதல் நடக்கிறது அது கொலையாக முடிகிறது. 304/2 செக்ஷன்படி நடைபெற்ற தாக்குதல் கொலை செய்வதற்காகவே நடக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளின் கீழ்தான் காவல்துறை லாக்கப்பில் நடக்கக்கூடிய மரணங்கள் வரும் எனச் சொன்னார்கள்.

 

sathankulam jayaraj fenix tripathy

 

அதைப் பற்றி அங்கிருந்தபடியே முதல்வர் எடப்பாடி தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடம் விவாதித்தார். அவர்கள் உயர்நீதிமன்றம் கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது எனச் சொன்ன பிறகு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டும் எனச் சொன்னதால் டி.ஜி.பி. திரிபாதியிடம் சாத்தான்குளம் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார்மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுமாறு எடப்பாடி கூறுகிறார். உடனே சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான சங்கருக்கு திரிபாதி உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்.

 

ஏற்கனவே மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சி..பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான சங்கர், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். அவரது உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததினால், சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டார். அவரிடம் அமைச்சர் வேலுமணி சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பேசுகிறார். இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை மட்டும் பிடிக்க வேண்டும். லாக்கப்பில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் யார் மீதும் கை வைக்கக்கூடாது. அவர்களைக் கைது செய்தால் காவல்துறையினர் போலீஸ் அல்லாத சமூக விரோதிகளை வைத்து காவல்நிலையத்தில் கொலை செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டு வரும் என டி.ஜி.பி. திரிபாதியிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி.யான சங்கருக்கும், எஸ்.பி.யான ஜெயக்குமாருக்கும் உத்தரவுகள் பறக்கிறது. அதன்பிறகே கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தவிர மற்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் சிலருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலையிட்டுக் காப்பாற்றுவதற்கான முயற்சியும் நடந்தது. அதையும் மீறி ஐ.ஜி சங்கரும், எஸ்.பி. ஜெயக்குமாரும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்தனர்.

 

http://onelink.to/nknapp

 

போலீசார் மீது போடப்பட்ட இந்தக் கொலை வழக்கில் பல ஓட்டைகள் இருக்கிறது என்கிற விமர்சனத்தை அ.தி.மு.க.-வைச் சேர்ந்த வழக்கறிஞர்களே முன் வைக்கிறார்கள். இந்நிலையில், தி.மு.க. எம்.பி.-யும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோவனிடம் இதுபற்றி கேட்டோம். "கொலை வழக்குப் போட்டது என்பது மிகவும் சரியான நடவடிக்கை. இதுபோன்ற குற்றங்களில் கொலை வழக்குப் போட வேண்டும் எனப் பல தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கிறது. 304/1, 302 ஆகிய சட்டப்பிரிவுகளுக்கு இடையே ஒரு சிறிய வித்தியாசம்தான் இருக்கிறது. ஆகவே லாக்கப்பில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்துக் காயப்படுத்தி மரணத்திற்குள்ளாக்கிய காவலர்களைக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தி.மு.க.-வும், உயர்நீதிமன்றமும் பொதுமக்களும் எழுப்பிய கோரிக்கையின் விளைவாகவே இந்த வழக்குப் பதிவு நடந்துள்ளது'' என்றார்.

 

 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.