Skip to main content

கனிமொழியின் வளர்ச்சியைத் தடுக்கக் களமிறக்கப்பட்டாரா உதயநிதி?

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

kanimozhi

 

சாத்தான் குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனிமொழியும், உதயநிதியும் அடுத்தடுத்து சென்று வந்த சம்பவம் தி.மு.க.-வில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது. 

 

சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் மனசாட்சி உள்ள மனிதர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்தும், ஜெயராஜ் குடும்பத்துக்கு நீதி கேட்டும் உடனடியாகக் களத்தில் குதித்தது தி.மு.க.!                  

 

தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் சாத்தான் குளம் பிரச்சனைனையைக் கையிலெடுத்த கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டு, களத்தில் இறங்கினார். தமிழக காவல்துறை தலைவர் திரிபாதியைச் சந்தித்து முறையிட்டார். மத்திய உள்துறை அமைசகம் வரை பிரச்சனையை எடுத்துச் சென்றார் கனிமொழி. 

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியை தங்கள் கட்சி நிதியிலிருந்து ஒதுக்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த நிதியை ஜெயராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வருமாறு கனிமொழிக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து நிதி உதவியை வழங்கியதோடு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் கனிமொழி.    

 

kanimozhi

 

அவர் சென்று வந்த மறுநாள் திடீரென சாத்தான்குளம் புறப்பட்டு சென்ற தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எப்போதும் இருக்கும் என உறுதி கொடுத்துவிட்டு திரும்பினார்.                    

 

கனிமொழி சென்று வந்த மறுநாள் உதயநிதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தது, தி.மு.க.-வில் சலசலப்பைச் சத்தமில்லாமல் ஏற்படுத்தியிருகிறது. கனிமொழியின் வளர்ச்சிக்கு உதயநிதி மூலம் தடை போடப்படுகிறதா? என தி.மு.க.-வில் உள்ள மற்ற அணிகளின் நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்கிறது. மூத்த மா.செ.க்கள் பலரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் போது, இந்தச் சம்பவங்களைத்தான் அசை போடுகிறார்கள். 

 

udhayanidhi stalin


தி.மு.க.-வில் சத்தமில்லாமல் எழுந்துள்ள இந்தச் சலசலப்புகள் குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’தி.மு.க.-வில் ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழியின் செயல்பாடுகள்தான் தமிழக அரசியலில் பேசப்படுகிறது. அவரின் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து அவர் வைக்கும் கோரிக்கைகளுக்கும் மரியாதை கிடைக்கிறது. தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார், முதல் ஆளாகக் களத்தில் நிற்கிறார். அதே ரீதியில்தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பத்திலும் காவல்துறைக்கு எதிராகவும்; தமிழக அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறார். இது, தென் மாவட்டங்களில் தி.மு.க.-வுக்கு நற்பெயரை கொடுத்துள்ளது. கனிமொழியின் செயல்பாடுகள் பரபரப்பாகவும் ஊடகங்கள் மத்தியில் எதிரொலித்தன.

 

இவைகள் தி.மு.க.-வில் உள்ள சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே கனிமொழியின் வேகத்துக்குத் தடை விதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உதயநிதியை வைத்து அதனை நிறைவேற்ற அவரை களத்தில் இறக்கினர். அதன்படி அமைந்ததுதான் உதயநிதியின் சாத்தான்குளம் பயணம். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தொகுதி எம்.பி.என்கிற வகையில், கனிமொழியை இயக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். அவரின் உத்தரவுப்படியே கனிமொழியும் நடந்து கொள்கிறார். அப்படியிருக்க, மறுநாளே உதயநிதி சாத்தான் குளம் போக வேண்டிய அவசியம் எதற்கு? அதனால்தான் கனிமொழியின் வளர்ச்சி இளைஞரணிக்கு பிடிக்கவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட அரசியல்கள் தி.மு.க.-வை பாதிக்கும்‘’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய மாநில நிர்வாகிகள்.                          

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ’’சாத்தான்குளம் சம்பவம் எப்படிப் பார்த்தாலும் ஜீரணிக்க முடியாதவை. தி.மு.க. இளைஞரணி இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. காவல்துறையின் கொடூர தாக்குதலால் இரண்டு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதை உதயநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார்.  தி.மு.க. இளைஞரணி சார்பில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது தமக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்தார் உதயநிதி. அந்த நினைப்புதான் அவரை சாத்தான் குளத்துக்கு அனுப்பி வைத்தது. அப்படியிருக்கும் போது அவர் போய் வந்தததற்கு உள் நோக்கம் கற்பிப்பது தேவையற்ற அரசியல்! மேலும், கனிமொழி வேறு யாரோ கிடையாது. உதயநிதியின் அத்தை. அவரது வளர்ச்சி கட்சியின் வளர்ச்சியாகத் தான் பார்க்கப்படுகிறதே ஒழிய அவர் மீது உதயநிதி பொறாமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இளைஞரணியின் அரசியல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத்தான் உதயநிதி திட்டமிடுகிறார். குடும்பத்திற்கு கலகத்தை உருவாக்க இப்படிப்பட்ட செய்திகளை கட்சியின் சீனியர்களே பரப்புவதுதான் கவலையளிப்பதாக இருகிறது‘’ என்கிறார்கள் வருத்தமாக!

 

இதற்கிடையே ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி கேட்டு முகக் கவச பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் கனிமொழி!

 

 

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.