Skip to main content

தினகரனை அவமானப்படுத்திய சசிகலா! டென்ஷனில் தினகரன்!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச் செல்வன் அ.ம.மு.க.விலிருந்து விலகினார் என சசிகலாவிடம் விளக்குவதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சசிகலாவிடம் "நான்கு பேர் உங்களை சந்திக்க வந்துள்ளனர்' என சொல்லப்பட்டது. "அந்த மூன்று பேர் எதற்கு' என சசிகலா கேட்டார். "அவர்கள் விளக்கம் சொல்லி பேச வருகிறார்கள்' என சொல்லப்பட, "எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். அவர்களை போகச் சொல்லுங்கள்'' என வாசலிலேயே துரத்தி விட்டார் சசிகலா. தினகரனை மட்டும் வரச் சொல்'' என கோபம் கொப்பளிக்க சசிகலா அழைக்க தினகரன் உள்ளே சென்றார்.

 

ammk



சசிகலாவை நாற்பது நிமிடம் சந்தித்து விட்டு வந்த தினகரனின் முகம் வாடியிருந்தது. "அண்ணே அப்படி என்னண்ணே சொன்னாங்க?'' என கேட்ட புகழேந்தியிடமும், பழனியப்பனிடமும் ஒன்றுமே பேசாமல் முகத்தை துடைத்தபடியே வந்தார் தினகரன். "அண்ணன் ஏன் பேசாம வந்தார்' என பெங்களூருவில் தங்கியிருந்த ஹோட்டல் வரை கவலைப்பட்டபடியே வந்தார்கள் இருவரும். ஆனால் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட தினகரன் சென்னை வரும் வரை எதுவுமே பேசவில்லை. அடையாறு வீட்டுக்கு வந்த பிறகு மனைவி அனுராதாவிடம் மட்டும் உடைந்த குரலில், ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க என தினகரன் வருத்தப்பட்டார் என்கிறார்கள் தினகரனுக்கு மிக நெருக்கமானவர்கள்.

 

ammk



அப்படி என்ன அவமானத்தை சசிகலா தினகரனுக்கு தந்தார் என அவரது சொந்தங்களிடம் கேட்டோம். அ.ம.மு.க.விலிருந்து நாளொரு நிர்வாகிகள் விலகிப் போன சூழலில் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக முத்துசாமியை மாவட்ட பொறுப்பாளராக்கியது அடங்கிய நிர்வாக பட்டியலை பார்த்ததுமே டென்ஷன் ஆனார் சசி. அ.ம.மு.க.வில் தலைவர் பதவியை மட்டுமே எனக்கு காலியாக வச்சிருக்க. அ.தி.மு.க.வில் மதுசூதனன் மாதிரிதானே அ.ம.மு.க.விற்கு நான் இருக்கிறேன். அதிகாரம் மிக்க பொதுச்செயலாளர் பதவியை நீ தானே வச்சிருக்க. அப்புறம் எதுக்கு நிர்வாகிகள் பட்டியலை எனக்கு காட்டுறே? இதில் நான் என்ன செய்ய முடியும்?'' என்பதுதான் சசி கோபத்துடன் கேட்ட முதல் கேள்வி.

 

ammk



உறவுகளைப் பொறுத்தவரை, வனிதா மணி குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தின கரனுக்கும் டாக்டர் வெங்கடேசுக்கும் சசிகலா திடீரென முக்கியத்துவம் கொடுத்தது பிடிக்க வில்லை. டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கியதும் ஓ.பி.எஸ்.சை முதல்வர் பதவியிலிருந்து எடுத்ததையும் உயிரோடிருக்கும் வரை நடராஜனும் இன்றைய நாள் வரை  திவாகரனும் சசிகலாவிடம் சண்டை போடும் விவகாரங்களில் ஒன்று. ஓ.பி.எஸ்.சை நீக்கியதால் அவரை பா.ஜ.க. கையிலெடுத்தது. அதற்குப் போட்டியாக இ.பி.எஸ்.சை சசிகலா கையிலெடுத்தார். அன்று முதல் இன்று வரை சசிகலாவிடம் தினகரன் அவரது மனைவி அனுராதாவின் நடவடிக்கைகளை போட்டுக் கொடுத்து கொண்டுதான் சொந்தபந்தங்கள் இயங்கி வருகின்றன.

 

ammk



குறிப்பாக சசிகலாவுடன் 24 மணி நேரமும் சிறை வாசம் அனுபவிக்கும் இளவரசிக்கும் சுதாகரனுக்கும் ஒத்துவரவில்லை. இளவரசியின் மகன் விவேக்கிற்கு திவாகரன் மகன் ஜெய் ஆனந்திற்கு மதிப்பு கொடுக்காதது போலவே முக்கியத்துவம் எதையும் தினகரன் கொடுக்க மறுத்தார். அத்துடன் ஜெயா டி.வி.யின் செய்திப் பிரிவையும் தனது ஆட்களால் ஆக்கிரமித்து விவேக்கிற்கு குடைச்சல் கொடுத்தார். போதாக் குறைக்கு சசிகலா குடும்பத்தின் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு விவேக் மட்டும்தான் நிர்வாகியா என்றதோடு, அடிக்கடி சசிகலாவுக்கு வியாபார ரீதியில் பணம் தர வேண்டியவர்களை மிரட்டி அ.ம.மு.க. செலவுகளுக்கு பணம் கேட்டார். இதெல்லாம் இளவரசி, தினகரன் மீது வைக்கும் புகார்கள்.

இதுதான் தினகரன்-சசிகலா சந்திப்பில் அடுத்த மோதலாக வெடித்தது. அ.ம.மு.க.வை நீ நடத்து, என்ன வேணுமானாலும் செய். அதன் செலவுகளுக்காக விவேக்கிடம் மோதாதே. அவன் எனக்காக தொழில் நடத்துகிறான். ஏற்கனவே தேர்தல் செலவுக்காக கொடுத்த 1,500 கோடிக்கு கணக்கு வரலை. இன்னும் எதுக்கு உனக்கு பணம்? ஒழுங்கா கணக்க செட்டில் பண்ணு'' என எகிறிய சசிகலாவை தினகரன் சமாதானப் படுத்த முயன்றார். சசிகலா அடங்கவில்லை.  எல்லோரும் உன்னை விட்டு ஓடுறான். அதுக்கென்ன காரணம்னு நீ யோசிச்சியா? உன்னை விட்டு போன தங்க.தமிழ்ச்செல்வன், இரத்தினசபாபதி எம்.எல்.ஏ., இவங்கள்லாம் இன்னிக்கும் திவாகரன்கிட்ட பேசிக்கிட்டிருக்காங்க. கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நீ எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன்னு சொன்னதால போனேன்னு சொல்றாரு. நீ இன்னிக்குதான் திடீரென்று எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன்னு சொன்னியா? போறவனுக்கு ஒரு காரணம் வேணும். அவங்கள்லாம் எனக்கு விசுவாசமானவங்க. எத்தனை கோடி கொடுத்தாலும் என்னை விட்டு போக மாட்டாங்க. அவங்க விட்டுட்டு போறாங்கன்னா, நீ நடந்துக்குற முறை அப்படி.

நீயும் உன் குடும்பமும் உன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கிட்டு உங்களுக்கு புடிச்சவங்கள வச்சு சர்க்கஸ் வித்தை நடத்துற மாதிரி கட்சி நடத்துறீங்க. உங்களை நம்பி லட்சக்கணக்குல செலவு செய்யுறவங்களை நீங்க அவமானப்படுத்துவீங்க. எவன் உங்க கூட இருப்பான். இதுல உன்னோட கீழ்த்தரமான செய்கைகள் வேறு. டி.வி. மைக்குகளில் பேசிட்டா பெரிய தலைவரா? அக்காவை விட பெரிய ஆளா? என்ன நினைச்சுக்கிட்டிருக்கே என ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார் சசிகலா'' என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம்.


சசிகலாவை பொறுத்தவரை டி.டி.வி. தினகரன் மீது நம்பிக்கையில்லை. ஆனால் அ.ம. மு.க.வை முற்றிலுமாக அவர் இழக்க விரும்பவில்லை. பா.ஜ.க. அரசு சசிகலா குடும்பத்தினரிடம் நடத்திய வருமான வரி சோதனைகளை சேகர் ரெட்டி பாணியில் எதிர்கொண்டு வெளியே வர நினைக்கிறார். இதுவரை வருமான வரித் துறை சசி குடும்பத்தின்மீது அதிக அளவு ஆக்ஷ னில் இறங்கவில்லை. விவேக் சென்னையில் கட்டி வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் மற்ற விவகாரங்களும் எந்த வித சேதாரமும் இல்லாமல் நடப்பதை பா.ஜ.க. அளிக்கும் பாசிட்டிவ் சிக்னலாகத்தான் சசிகலா உணர்கிறார்.


அதேபோல ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவரும் சசிகலாவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அதனால் தன்னை சந்திக்க வந்தது தினகரனிடம், ஒரு ஆணியும் நீ பிடுங்க வேண்டாம் என்ற ரீதியில் சொல்லிவிட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து சசி வெளி வரும்போது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அ.ம.மு.க., திவாகரனின் அ.தி.க. என அனைத்தும் ஒன்றாகிவிடும். பா.ஜ.க., ரஜினி, ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்போது, அ.தி.மு.க.வில் தீர்மானிக்க கூடிய இடத்தில் தான் இருப்போம், இப்படி கணக்கு போடுகிறார் சசி.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.