Skip to main content

சசிகலாவை திணறடித்த தினகரன்! - அவசரகதியில் அறிக்கை!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

 AIADMK

 

‘என்னை எதிர்த்தால் மீண்டும் 1989’ என்பதில் உறுதியாக இருந்த சசிகலா, ‘அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து..’ என அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது ஏன்? என்ற நமது கேள்விக்கு சற்று விரிவாகவே பதிலளித்தார் அந்த ‘சின்னம்மா’ விசுவாசி –

 

“ஜெயலலிதாம்மா சொல்லாததையா சின்னம்மா சொல்லிட்டாங்க? 1989-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா அம்மா இருந்தப்ப.. அவர் எழுதிய ராஜினாமா கடிதம் ‘லீக்’ ஆகி பரபரப்பாச்சு.. அந்த லெட்டரில் என்ன சொல்லிருந்தாங்க? ‘அரசியலில்,  எனது ஏழாண்டு கால பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் – அவமானமும் கீழ்த்தரமான இழிசொற்களும்தான். அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக, இதுவரை வேறு எந்தப் பெண்ணிற்கும் நேர்ந்திராத கொடுமையெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது.’ என்று தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, ‘அரசியலைவிட்டு விலகுகிறேன்’ என்று எழுதியிருந்தாங்க. அம்மா அரசியலை விட்டு விலகவா செய்தார்கள்? சாகும் வரையிலும் முதலமைச்சராக அல்லவா இருந்தார்கள்?

 

 AIADMK

 

சின்னம்மாவுக்கும் அந்தமாதிரி ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் இருக்காங்க. மனுஷன்னா சூழ்நிலைக்கு ஏற்ப மனசு மாறும் இல்லையா? அதுதான் நடந்திருக்கிறது. அறிக்கை வெளியிடறதுக்கு முன்னால சின்னம்மா வீட்டு வாசல்ல எந்த போலீசும் நிற்கல. இப்ப பாருங்க.. நூற்றுக்கணக்குல போலீஸை குவிச்சிருக்காங்க. 

 

ஜாதி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நான் தேவருன்னு சொல்லிக்கிட்டு, மக்கள்ட்ட ஓட்டு கேட்டுப் போறதுல, சின்னம்மாவுக்கு சுத்தமா விருப்பம் இல்ல. அதிமுகவுக்கு போறதும் நடக்கிற மாதிரியில்ல. தினகரனுக்குப் பின்னாலயோ, முன்னாலயோ போனா, அதிமுக தோற்றதுக்கு காரணம் சசிகலாதான்னு ஊரு உலகம் பேசும். அம்மா இறந்தப்ப.. கட்சியோட பொதுச்செயலாளரா இருக்கேன்னு சின்னம்மா சொன்னாங்க. தினகரன்தான் சின்னம்மாவ முதலமைச்சர் ஆயிடலாம்னு மண்டைய குழப்பினாரு. இப்ப தினகரனுக்கு முதலமைச்சர் ஆகணும்கிற வெறி வந்திருச்சு. 

 

‘எனக்கு ஓட்டு கேட்டு களத்துக்கு வரணும். இல்லைன்னா வெளிப்படையா எங்களுக்கு (அமமுக) ஆதரவு தெரிவிச்சு அறிக்கை விடணும். ஆளும்கட்சியா இருந்தும் அதிமுகவுல ஏழு நாள்ல 6,000 பேர் கூட விருப்பமனு கொடுக்கல. எனக்காக ஒரு தடவை நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும். 234 தொகுதிக்கும் இருபதாயிரம் பேரை விருப்பமனு கொடுக்க வைக்கிறேன்.’ என்று டிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடியில், சின்னம்மாவால் என்ன பண்ண முடியும்? ஒதுக்கியிருந்து அதிமுக வெற்றிக்காகப் பிரார்த்தனை பண்ணுறேன்னு அவசர அவசரமா அறிக்கை வெளியிட்டுட்டாங்க. 

 

 AIADMK

 

அமமுகவுக்கு சசிகலா ஓட்டு கேட்டதுனால அதிமுக தோற்றுப்போச்சுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதுல்ல. அதே நேரத்துல, சசிகலாவ அதிமுகவுல சேர்த்துக்கிடாததுனால, அந்தக் கட்சி தோற்றுப்போனதுன்னு வரலாறு பதிவு பண்ணுறதுதான் சரியா இருக்கும்கிற மனநிலைலதான் சின்னம்மா இருக்காங்க.   

 

நேற்று (3-ஆம் தேதி) வீட்டுக்குள்ள சின்னம்மாவோட கடுமையா டிடிவி சண்டை போட்டாரு. வீட்ல சசிகலா - பொதுச் செயலாளர்ங்கிற லெட்டர் பேடு இருக்கு. அதுல எக்ஸ்-ன்னு போட்டுகூட அறிக்கை விட்டிருக்கலாம். ஆனாலும், கடகடன்னு டைப் அடிக்க வச்சி, வெள்ளை பேப்பர்ல சின்னம்மா அறிக்கை தயார் பண்ணுனாங்க. அதுவும் கீழேயிருந்து மேல வர்ற மாதிரி, அவசர அவசரமா அறிக்கை வாசகத்த அவங்களே சொன்னாங்க.    

 AIADMK


 
எடப்பாடி மேல கோபமும் விரக்தியும் சின்னம்மாவுக்கு ரொம்ப இருக்கு. ஆனாலும்.. அக்கா வளர்த்த கட்சியேன்னு பார்க்கிறாங்க. சின்னம்மா வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிக்கிட்ட எடப்பாடியால தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகக்கூட முடியாது. அந்த தொகுதில அதற்கான வேலையெல்லாம் சத்தமில்லாம நடந்துக்கிட்டிருக்கு. 

 

 AIADMK

மொத்தத்துல அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்னு சின்னம்மாகிட்ட இருந்து அறிக்கை வந்ததுக்கு காரணமே டிடிவி-தான். ஒதுங்கிறேன்னு சொல்லிருக்காங்க. விலகுறேன்னு சொல்ல. தேர்தல் முடிவுகள் வெளியானதும், என்னென்ன நடக்கப்போகுதுன்னு பார்க்கத்தானே போறோம். அதுவரைக்கும், தன்னுடைய கோபதாபங்களை உள்ளுக்குள்ளே அடக்கிவைத்து, தான் நினைத்தது நிறைவேறுவதற்காக, கடுமையான பிரார்த்தனையில் சின்னம்மா ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்.” என்று பெருமூச்சுவிட்டார். 

 

‘அக்கா’ ஆசி சசிகலாவுக்கு கிடைக்குமா? வேண்டுதல் நிறைவேறுமா? 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.