Skip to main content

"சசிகலா பேச்சு என்பது தொண்டர்களுக்கு ஊக்க மாத்திரை; தலைவர்களுக்கு அழைப்பு சிக்னல்.." - உடைத்து பேசும் வழக்கறிஞர் பாலு!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

v

 

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அமைதியாக இருந்த சசிகலா, கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கடந்த 5 ஆண்டுகளாக மனிதல் இருந்த பாரத்தை தற்போது இறக்கிவைத்துள்ளேன். அதிமுகவை தலைவரும், அம்மாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் நான் இங்கிருந்து புறப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு உள் அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

"நான் புறப்படுகிறேன் என்று அவர் கூறியதாக சொன்னீர்கள், அதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. நான் வந்திருக்கிறேன் என்று அவர் கூறியதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். விஜயகாந்த் படத்தில் ஒரு வசனம் சொல்லப்பட்டிருக்கும், நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக வர வேண்டும் என்று, அதைப் போல அவர்களின் பேச்சு இருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஜெயலலிதாவோடு வழக்கில் சேர்க்கப்பட்டு, தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டதால் இவர் சிறைக்குச் சென்று திரும்பியுள்ளார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூட அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. 

 

அன்றிருந்த அரசியல் சூழ்நிலை அதை திசை திருப்பிய நிலையில், அப்போது இருந்த முதல்வரும், அமைச்சர்களும் அந்த சம்பவமே நடைபெறாதது போல பார்த்துக்கொண்டார்கள். இவ்வளவு காலம் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக நாம் பார்க்க தேவையில்லை. தனக்கான நேரத்தை இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எடுத்துக்கொண்டார் என்ற அளவிலே அதனை நாம் பார்க்க வேண்டும். அப்போதும் கூட அவர் தொண்டர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தார். தான் இருக்கிறேன் என்பதை அவர் வாய்ப்பு கிடைத்த இடத்தில் அனைத்தும் நிரூபித்துக்கொண்டுதான் இருந்தார். நான் கூட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கட்சியினருக்கு அவர் அறிவித்துள்ளார். அவர் அங்கு பேசிய வார்த்தைகளையும் நாம் கவனிக்க வேண்டும். மிகவும் மெச்சூரான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர் பேசியுள்ளார். இது கட்சியினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. அவரின் பேச்சு என்பது தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஊக்க மாத்திரை, தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அழைப்பு என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது" என்றார்.

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.