Skip to main content

தினகரன் நினைப்பதை சசிகலா நம்பத் தயாராக இல்லை!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

300 பூத்களில் அ.ம.மு.க.வுக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. பூத் ஏஜெண்ட்டுகள் கூடவா போடவில்லை' என வேதனை கலந்த சந்தேகத்தை ஊடகங்கள் முன் எழுப்பினார் டி.டி.வி.தினகரன். 1000 கோடி ரூபாயை ஒழுங்காக செலவழித்திருந்தால் இந்த சந்தேகம் வருமா என தினகரனிடம் கேட்கிறார்கள் சசிகலாவும் அவரது சொந்தங்களும்.

 

ttv



வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய அரசு சசிகலா வகையறாக்களை கண்கொத்தி பாம்பு போல கண்காணித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், தேர்தல் செலவுக்காக தினகரன் கேட்ட தொகையை இளவரசியின் மகன் விவேக் மூலம் ஒவ்வொரு கட்டமாக வழங்க ஏற்பாடு செய்தார் சசிகலா. குஜராத் மார்க்கெட்டில் வைரங்களை விற்றது மற்றும் தனக்கு தெரிந்த தொழிலதிபர்களிடம் வாங்கியது உள்பட ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். இடைத்தேர்தல் நடந்த ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு கட்டங்களாக தலா 5 "சி' தரப்பட்டுள்ளது. கடைசிக் கட்டத்தில் 15 "சி' கேட்டு வாங்கினாராம் தினகரன். தங்கதமிழ்செல்வன் போட்டியிட்ட தேனி தொகுதியின் கௌரவம் கருதி 25 "சி' அளவுக்குத் தாராளம் காட்டப்பட்டது. இதுபோக அ.ம.மு.க. சட்டமன்ற வேட்பாளர்கள் தங்கள் கையில் இருந்து ஐந்து கோடியும், நாடாளுமன்ற வேட்பாளர்கள் 10 கோடியும் செலவு செய்யவேண்டும் என்றும் சசியிடம் தினகரன் சொல்லியிருக்கிறார். 

 

sasikala



இந்த பணவிநியோக விவரம் தினகரன், அவரது மனைவி அனுராதா, அவரது உதவியாளர் ஜனா தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. கொடுத்த வேட்பாளர்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் தினகரன் அமைத்திருந்தார். திருச்சி வேட்பாளரான சாருபாலா தொண்டை மான் 15 "சி'யில் 2 "சி'யை செலவழிக்கவில்லை எனத் தெரிந்து, அடியாள் படை அனுப்பி, அதை வசூலித்த தினகரன், பக்கத்திலுள்ள பெரம்பலூர் எம்.பி.வேட்பாளர்  தொட்டியம் ராஜ சேகரும் அதேபோலத்தான் செயல்பட்டார் எனப் புகார் வந்தும் கண்டுகொள்ளவில்லை. வாக்காளர்களுக்கும் பெரியளவில் பட்டுவாடா நடக்கவில்லை. பூத் கமிட்டியில் இருந்தவர்களுக்கு தினமும் 1000 ரூபாய் என்பதுதான் முக்கிய செலவு. ஆனால், அ.ம.மு.க.வுக்குத் தொடர்பில்லாத பலர் பூத் ஏஜெண்டுகளாக இருந்தனர். தி.மு.க. உள்ளிட்ட வேறு கட்சியினரையும் பூத் ஏஜெண்டாக்கியதால்தான் அ.ம.மு.க.வுக்கு ஓட்டு விழவில்லை என்ற உண்மை தற்போது சசிகலா வரை சென்றுள்ளது. 

 

sasikala



தேர்தல் முடியும்வரை காத்திருந்த சசி தம்பி திவாகரனும் மற்ற சொந்தங்களும் தினகரனை எதிர்த்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். தினகரன் ஒரு செல்லாக்காசு என திவாகரன் கட்சியினர் பேசுகின்றனர். சசிகலா கொடுத்த ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்காமல் அமுக்கிவிட்டு, கட்சியினர் செலவிலேயே தேர்தல் பயணத்தை நடத்தியிருக்கிறார் தினகரன் என்கிறார்கள். தேர்தல் செலவுக்காக, தினகரனிடம் காசு பெற்றவர்கள் அவர்களுக்கு இருந்த சொந்த கடனை அடைத்து கொண்டார்கள் என்கிறார்கள் அ.ம.மு.கவினர். இதனால் ஜெயிலில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க தினகரன் தயங்குகிறாராம்.


தேர்தல் தோல்வியைத் தாண்டி, அ.ம.மு.க.வை அரசியல் சக்தியாக நிலை நிறுத்த முடியும் என தினகரன் நினைப்பதை சசிகலா நம்பத் தயாராக இல்லை. சசிகலா தன் பணத்தை விவேக் மூலம் மட்டும் செலவழிப்பதை மற்ற சொந்தங்கள் விரும்புவதில்லை. சசிகலா ஜெயிலில் உள்ள நிலையில், தினகரன் இல்லையென்றால், தங்கள் ஆதரவாளர்களை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இழுத்துவிடுவார்கள் என தினகரனுக்காக சிலர் சசியிடம் பரிந்து பேசியுள்ளனர். அதற்காகத்தானே பணம் கொடுத்தேன், அப்புறமும் ஏன் ஓட்டுவாங்கவில்லை' என்பது சசியின் கேள்வி. அவர்களின் சமூகம் இருந்த தென்மாவட்டங்களில் மட்டும் வாக்குகள் கிடைத்துள்ளன. 

மற்ற இடங்களில் வெற்றி மீது நம்பிக்கை இல்லாததால் அ.ம.மு.க. வேட் பாளர்களும் செலவழிக்கவில்லை, ஆதரவாளர்களும் வாக்களிக்கவில்லை'' என்கிறார்கள் அ.ம.மு.க. நிர் வாகிகள்.  சசியும் தினகரனும் சந்திக்கும் போது இந்த ஆயிரம் கோடி விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள். 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.