Skip to main content

சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் மூவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...  கே.சி.பியால் இப்படி ஒரு சிக்கலா? வெளிவந்த தகவல்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யும் எம்.ஜி.ஆர்.காலத்து அரசியல்வாதியுமான கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவகாரம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

admk



அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட சூலூர் போலீசார் கைது செய்திருக்கின்றனர். 11 செக்சன்கள் அவர் மீது பாய்ந்துள்ளன.

திடீரென அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, "சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோதும், பிறகு மீண்டும் கட்சியில் இணைந்த போதும் ஓ.பி. எஸ்.சின் ஆதரவாளராகவே இருந்தார் கே.சி.பி.! அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை ஒழித்துவிட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என சட்டவிதிகளில் திருத்தம் செய்ததையும் எதிர்த்து ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக 2018-ல் உருவான பிரச்சனையின் போது, "பா.ஜ.க.வுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்' என கே.சி.பி. பேசியதை அடுத்து கட்சியிலிருந்து அவரை நீக்கினார் எடப்பாடி.

 

admk



இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையத்தில் அவர் போட்ட வழக்கு அப்படியே நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, விரைந்து முடிவை அறிவிக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் கே.சி.பி.!. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்திலும், டெல்லி உயர்நீதி மன்றத்திலுமுள்ள கே.சி.பி.யின் வழக்கால் சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். மூவருக்கும் சிக்கல் என்பதை எடப்பாடிக்கு வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு கே.சி.பி.யை வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்க எடப்பாடி வலியுறுத்த அதனை மறுத்துவிட்டார் கே.சி.பி.!


இப்படிப்பட்ட சூழலில், டெல்லி உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்கிலும் தேர்தல் ஆணைய வழக்கிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் கே.சி.பி.! டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.


அதனையொட்டி, வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென அழுத்தமும் மிரட்டலும் கே.சி.பி.யைத் துரத்தியது. அவர் மறுக்கவே, கைது வில்லங்கம் அவர் மீது பாய்ந்துள்ளது'' என சொல்கிறார்கள் கே.சி.பி.க்கு ஆதரவான அ.தி.மு.க.வினர்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.