Skip to main content

சசி வீட்டில் ரகசிய பூஜை! - ஜெயா டி.வி.யைக்கூட அனுமதிக்கவில்லை!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

sasikala

 

சிறையில் இருந்து ரிலீஸ் ஆன சசிகலாவால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர் பார்ப்பும் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த 27ஆம் தேதியோடு சிறைவாழ்க்கையை முடித்துக்கொண்ட சசிகலா, ஒருவாரம் பெங்களூரில் ரெஸ்ட் எடுத்த நிலையில் அங்கிருந்து 8-ஆம் தேதி புறப்பட்டு, திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியுடன், டிராபிக் ஜாம் ஏற்படுத்தி 9-ந் தேதி அதிகாலை சென்னையை வந்தடைந்தார்.

 

சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிற்கு வந்த அவர், காரை விட்டு கீழே இறங்காமல் உள்ளேயே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அந்த வீட்டின் முன்பு பூவினால் அலங்கரிக்கப்பட்ட கோலம் போடப்பட்டு, செவளை நிறத்தில் பசுவும், கன்றும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, காரை விட்டு இறங்காமல் எல்லாவற்றையும் அவர் கவனித்தபடியே இருந்தார்.

 

அப்போது, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் வைத்து, அவர்களுக்கு எல்லா விதமான பூஜைகளையும் வழக்கமாகச் செய்தவரான அகஸ்தியர் கோவில் அர்ச்சகர் வேதாந்தி, பயபக்தியோடு வந்து, அந்தப் பசுவையும் கன்றையும் சசிகலாவின் முகம் பார்க்க வைத்தார். அதன் பிறகு அவற்றை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

 

அதன்பின் காரை விட்டு மெதுவாக இறங்கிய சசிகலாவை, மலர் கோலத்தின் மீது, வடக்குத் திசை நோக்கி நிற்க வைத்து பூசணிக்காய், எலுமிச்சை உள்ளிட்டவற்றை வைத்து சாங்கியம் செய்த பிறகு, தயார் நிலையில் இருந்த 5 சுமங்கலியான மங்கள பெண்கள் அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

 

அங்கே ஹாலில் 20 நிமிடம் வரை அமர்ந்திருந்த சசிகலா, சுடச்சுட பாலை அருந்தினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர், அ.ம.மு.க.வின் மாநில நிர்வாகிகளான ரெங்கசாமி, மனோகரன், செந்தமிழன் மற்றும் பதவி பறிப்புக்கு ஆளான அவர்கள் தரப்பு முன்னால் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து 15 நிமிடம் உரையாடினார்.

 

sasikala

 

ஒரு புதுமனை புகு விழாவிற்குச் செய்யப்படும் கணபதி ஹோமம் உள்ளிட்ட அனைத்து விதமான சடங்குகளும், சாங்கியங்களும் சசிகலா வருகைக்காக அந்த வீட்டில் செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் எதுவும் கட்சியினருக்கோ, டி.டி.வி. தினகரனுக்கோ கூட தெரியாத அளவுக்கு மிகவும் ரகசியமாக செய்யப்பட்டிருந்தது. அதனால், அங்கே ஒளிபரப்புக்காக வந்த ஜெயா தொலைக்காட்சியின் செய்தியாளர்களைக் கூட, அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

 

கட்சிப் பிரமுகர்களிடம் பேசி, அவர்களை அனுப்பி வைத்த சசிகலா, வீட்டிற்குள் நுழைந்த பின், அனைத்துக் கதவுகளும் தாழிடப்பட்ட நிலையில் மேலும் சில சடங்கு சம்பிரதாயங்கள் அங்கே நடந்திருக்கின்றன. மீண்டும் பவர் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட சடங்குகள் சசிகலாவுக்கு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.