Skip to main content

சசிபெருமாளை நினைவிருக்கிறதா 'குடி'மக்களே..!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

மது ஒழிப்புக்காக போராடி உயிர் விட்ட சசிபெருமாள் இறந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், அவர் எந்த நோக்கத்துக்காக உயிரிழந்தாரோ அந்த எண்ணம் நிறைவேறியதா என்றால், இல்லை என்பதே எல்லோருடைய பதிலாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி  போராட்டம் நடத்தினார் சசி பெருமாள். 6 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரில் இருந்த அவர், ரத்தவாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார். அதுவரை அவரின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக ஊடகங்களும், அரசியல்கட்சிகளும் அவருடைய இறப்புக்கு பிறகு அடுத்த சில தினங்களுக்கு மது விலக்கு பற்றிய விவாதங்களை தொலைக்காட்சிகளும், அரசியல் கட்சிகள் மதுவிலக்கு பற்றிய உறுதி மொழிகளையும் மறக்காமல் அளித்தனர். ஆனால், சில தினங்களிலேயே அந்த உறுதிமொழிகள் காற்றில் பறந்தது.

 

Sasi Perumal Memorial Day




தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை வைக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே துச்சமாக மதித்த மாநில அரசு, ஒரு தனிப்பட்ட மனிதரின் உயிரிழப்பை பெரிதுபடுத்துமா என்று நமக்கு நாமே கேள்வி எழுப்பி கொள்ளலாமே தவிர, இதை ஆள்பவரிடம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. இல்லை என்றால், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அமைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சில நாட்களில், அத்தகைய நெடுஞ்சாலைகளை எல்லாம் மாநில சாலைகளாக மாற்றி  'வரலாறு படைக்க' நிச்சயம் அவர்களுக்கு மனது வந்திருக்காது. ஆனால், வரவை மட்டும் எதிர்பார்க்கும் அவர்களிடம் மனிதத்தையும், உயிர்களின் மதிப்புகளை பற்றி பேசினால் நிச்சயம் தவறு கேட்பவர்களையே சாரும். அந்த வகையில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாயை தரும் அந்த தொழிலை கடந்த 40 ஆண்டுகளாக எதோ ஒரு வகையில் நடத்த மாநில அரசுகள் அனுமதி தந்துள்ளது. தற்போது, மாநில அரசே அதனை நடத்தி வருவதுதான் வேதனையின் உச்சமாக இருகிறது என்கிறார்கள் மதுவை எதிர்த்து போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்கள். இதுதொடர்பாக பல்வேறு வினாக்களை அவர்கள் எழுப்பினாலும், அது ஆள்பவர்களின் கவனத்தை பெறவில்லை. அப்படி பெற்றாலும் அடுத்த சில தினங்களில் அவர்கள் வேலூருக்கோ, பாளையங்கோட்டைக்கோ அனுப்பபடுகிறார்கள்.
 

 Sasi Perumal Memorial Day


அரசியல் கட்சிகள் மதுவுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாக கூறினாலும், எந்த அரசியல் கட்சிகளும் மது குடிப்பவர்களை தங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கூறவில்லை. அல்லது குறைந்தபட்சம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூட சொல்லவில்லை. கட்சி ஆரம்பித்ததில் இருந்து மதுவுக்காக போராடும் கட்சி நாங்கள் தான் என்று கூறும் கட்சிகள் கூட, மாநாடுகளுக்கு தொண்டர்களை அழைத்து வரும்போது பிரியாணியும், பாட்டிலும் உண்டு என்ற உறுதிமொழியை கொடுத்தே அவர்களை வாகனங்களில் ஏற்றுகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மதுவை ஒழித்துவிடும் என்பதெல்லாம் தண்ணீரில் கோலம் போடுவதை போன்றுதான். அதிமுக ஆட்சியை பாஜக கலைப்பது கூட நடக்கலாம், ஆனால், ஒரு காலும் மதுவை புறந்தள்ள அரசியல் கட்சிகள் முயற்சிக்காது என்பதே கடந்த கால வரலாறு சொல்லும் உண்மை. கட்சிகள் அந்த நிலைக்கு வந்தது உண்மை என்றாலும், அவ்வாறு வருவதற்கு வாய்ப்புகளை யார் உருவாக்கி கொடுத்தார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.


ஒட்டுக்கு பணம் கொடுப்பதை போலத்தான் இதுவும். முதல் முறை மக்களுக்கு பழக்கம் காட்டியதால்தான் இன்று பணம் கொடுக்கவில்லை என்றால் வேட்பாளர்களின் வீட்டுக்கு வந்து பொதுமக்கள் வசூல் செய்துவிட்டு போகும் நிலைக்கு ஜனநாயகம் அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுகுறித்து தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் சூனியமாகும் என்பதே உண்மை. மதுவால் வரும் வருமானத்தை வைத்து என்ன பெரிய மக்கள் நலத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடம் வாங்கும் பணத்தை வைத்து குடிகாரர்கள் மறுவாழ்வு மையங்களை வேண்டுமானால் அதிகரிக்கலாமே அன்றி, மக்களின் உயிரை எடுத்து, அதில் வரும் வருவாயை வைத்து எந்த காரியத்தையும் செய்ய இயலாது என்பதை அரசுகள் உணர வேண்டும். அருகில் இருக்கும் கேரளா அதனை சாதித்து காட்டியுள்ளது. இந்தியாவிலேயே படிப்பறிவு குறைவாக உள்ள பிகாரில் கூட அதனை அரசுகள் சாதித்துக்காட்டியுள்ளது. மிகப்பெரிய இளைஞர் படையை வைத்துள்ள தமிழகம், கடந்த சில வருடங்களாக மதுவின் படியில் சிக்கி சீரழிவதை அரசாங்கம் தடுக்க வேண்டும். இதற்கான முன் முயற்சிகளை இப்போதே எடுக்காவிட்டால், சில ஆண்டுகளில் மதுகடைகள் இருக்கும், ஆனால் மது குடிக்க ஆட்கள் இல்லாமல் போவார்கள்.


மதுக்குடிப்பதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்று ஆளும் தரப்பை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலாக கூறினார். பொதுமக்கள் லாட்டரி சீட்டு வாங்குவதை எப்படி தடுத்தீர்களோ அப்படிதான் இதையும் தடுக்க வேண்டும் என்பதை அவருக்கு யாராவது ஞாபகப்படுத்த வேண்டும். ஏனென்றால் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு, மது குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது. அரசாங்கங்கள் நெறி தவறும்போது பொதுமக்களிடம் அந்த நெறியை எதிர்பார்த்து பயனில்லை. ஆனால், உயிர் நம்முடையது என்ற எண்ணம் அவர்களுக்கு வரும் வரையில் டாஸ்மாக் வருமானம் விண்ணைத்தொடும் என்பதே உண்மை. ஒரு சசி பெருமாளோ அல்லது நந்தினியோ மதுவை எதிர்த்து போராடினால் மட்டுமே போதாது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் அந்த எண்ணம் வரும் போதே பூரண மதுவிலக்கு சாத்தியப்படும். அதுவே சசிபெருமாளுக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும்.

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.