Skip to main content

"சரத்குமார் சொல்லித்தான் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்களா? அப்புறம் எதுக்கு ஓட்டு மட்டும் போடமாட்டேங்குறாங்க..." - நடிகர் சரத்குமார் ஆதங்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

 

ரகத

 

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாகத் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் போதைப் பொருட்கள் மிக அதிகமாக அனைவர் கைகளிலும் கிடைக்கிறது. இது மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதுதொடர்பாக தீவிரமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் எனப் பலரும் போதைக்கு அடிமையாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி அவர்களை நல் வழிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது. 

 

சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நான்கு மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிய வர அவர்களைக் கண்டித்துள்ளார்கள். இதனால் கோபமான ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். படிக்கும் வயதில் மாணவர் போதைக்கு அடிமையாகி தற்கொலை வரை செல்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரம். அதனை நாம் இத்தனை நாட்களாக அனுமதித்து வந்துள்ளோம். இனியும் காலதாமதம் செய்தோமானால் எண்ணற்ற மாணவச் செல்வங்களை நாம் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். எனவே நாம் இப்போதே விழிப்புடன் இருந்து அதனைத் தடுக்க வேண்டும்.

 

அரசியல் கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரத்தில் வருவதைப் பற்றி என்னிடம் தொடர்ந்து கேட்கிறீர்கள், இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளிலும் சூதாட்டம் இருக்கிறது என்கிறார்கள். இணையத்தில் அனைத்தும் கிடைக்கிறது. தேவையானவற்றைத் தேவையான அனைவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வந்துள்ளது. ஏற்கனவே போர்னோ கிராபி பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவில் அதனைத் தடை செய்துள்ளார்களா? இதுவரை ஏன் தடை செய்யவில்லை. 

 

துபாயில் மூன்று முறை அதை ஓப்பன் செய்தால் ஐபி அட்ரசை வைத்து காவல்துறை உங்களைத் தூக்கிச் சென்றுவிடும். அந்த அளவுக்கு நவீன டெக்னாலஜி வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதனைத் தடை செய்ய வேண்டும் என்று யாராவது குரல் கொடுக்கிறீர்களா? ஆன்லைன் ரம்மி தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருபவர்கள் இது சமூகத்துக்கு கேடு தருவதை அனுமதிக்கச் சொல்கிறார்களா? இதைப் பற்றிப் பேச மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை.

 

நான் சொல்லிவிட்டேன் என்று ஆன்லைன் ரம்மி விளையாடச் செல்கிறேன் என்று யாராவது கூறியுள்ளார்களா? நான் மட்டுமா இந்த விளம்பரத்தில் நடக்கிறேன், பலரும் ஏன் இந்தியாவில் பெரிய அளவில் புகழில் இருப்பவர்கள் கூட இந்த விளம்பரத்தில் நடத்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் ஏன் விமர்சனம் செய்யவில்லை என்று கூறுங்கள். என்னை நோக்கியே எப்போதும் கேள்வி எழுப்புகிறீர்கள், அதற்கான நோக்கம்தான் இன்னும் எனக்குத் தெரியவில்லை, என்னைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர இதில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

 

நான் விளம்பரத்தில் நடித்தால் அதைப் பார்த்துவிட்டு விளையாடுவார்கள் என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளேன், எனக்கு இதுவரை வாக்களித்துள்ளார்களா? வாக்களிக்கப் பணம் வாங்காதீர்கள் என்று கூறியுள்ளோம். ஆனால் அவ்வாறு பணம் வாங்காமல் இதுவரை இருக்கிறார்களா? தனிமனிதனும், அரசாங்கமும் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் விளம்பரத்தில் நடிப்பவர்களை எல்லாம் குறை சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.

 

 

Next Story

விருதுநகர் தொகுதியில் ராதிகாவுடன் பைக் சவாரி! சின்ராசாக மாறிய சரத்குமார்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சார அனல் கடுமையாக வீசுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்ட வேட்பாளராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

ராதிகா செல்லுமிடமெல்லாம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. சூர்யவம்சம் சின்ராசு என்று பிரச்சாரத்தில் தன் கணவர் சரத்குமாரைப் பெருமிதமாகச் சொல்லிவந்தார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும்,  தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே  பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

திரையுலக நட்சத்திரங்களாக இருந்தும், சாதாரண மனிதர்களைப்போல், பொதுவெளியில் ராதிகாவும் சரத்குமாரும் டூ வீலரில்  செல்வது, விருதுநகர் தொகுதி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

Next Story

ராதிகாவும் ரசிகையும்..! பாயின்டுக்குப் பாயின்ட் ஷூட்டிங்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Radhika and Rasikai had a conversation during the campaign

விருதுநகர் அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தில்  பொது மக்களிடம் வாக்கு சேகரித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரிடம்,  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைப் பாடிக்காட்டினார், மூதாட்டியான பவுனுத்தாய். சினிமா ரசிகையான பவுனுத்தாய், ராதிகா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், சினிமா மற்றும்  நடிப்பைப் பற்றியே பேசினார்.

பிரச்சார வாகனத்தில் ராதிகாவைப் பார்த்த பவுனுத்தாய், கிழக்குச் சீமையிலே  திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய  கத்தாழங் காட்டு வழி எனத் துவங்கும் பாடலின் வரியான ‘உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா’ என்று பாடினார். அவர் பாடியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, தான் பிரச்சாரம் செய்ய வந்ததையே மறந்தவராக,  மைக்கை பவுனுத்தாயிடம் நீட்டி  நேர்காணலே நடத்தினார் ராதிகா.

“ராதிகாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை..”என்றார் பவுனுத்தாய். “எதற்காக?” எனக் கேட்டார் ராதிகா. “சினிமாவ ரொம்பவும் பார்ப்பேன். உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும்.” எனப் பதிலளித்தார் பவுனுத்தாய். “எந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்?” என ராதிகா கேள்வி கேட்க,“கிழக்குச் சீமையிலே” என பதிலளித்தார் பவுனுத்தாய். வந்த வேலையை மறந்துவிட்டு வாக்காளர் ஒருவரிடம் ஏதேதோ பேசுகிறோமே என்று சுதாரித்த ராதிகா  “நான் உங்ககிட்ட ஓட்டு கேட்க  வந்திருக்கேன். அது பிடிக்கிறதா?” என்று கேட்க, பவுனுத்தாய் “பிடிக்கும்..” என்றார். 

அவரை விட்டுவிட மனமில்லாத ராதிகா “நான் நன்றாகச் செயல்படுவேன் என்று நம்புகிறீர்களா?” என்று கொக்கி போட்டார். “உங்க மனசப் பொருத்தது..”   சாதுர்யமாகப் பேசினார் பவுனுத்தாய். “அப்படி ஒரு எண்ணம், என் முகத்தில்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதா?” பரிதவிப்புடன் கேட்டார் ராதிகா. ராதிகாவின் கேள்விக்கு  நேரடியாகப்  பதில் கூறாத பவுனுத்தாய், “உழுதபுழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா..” என்று  மீண்டும் பாடினார். “அப்படின்னா? உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல..” எனக் கேட்டார் ராதிகா. அதற்கு பவுனுத்தாய்  “எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், ஆட்சிக்கு வர்றவுங்களுக்கு இருக்கணும்.” என்று கூற, இதை எதிர்பார்க்காத ராதிகா சிரித்து மழுப்பினார்.

தொடர்ந்து ராதிகா “உறுதியாக  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, “வருவார்..” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தார் பவுனுத்தாய். அது தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு நின்றவர்களைப்பார்த்து “பாகு உன்னாரா?” என்று கேட்டார் ராதிகா. அதாவது, தெலுங்குமொழியில் நலம் விசாரித்தார். பவுனுத்தாயையும் விட்டுவிட மனமில்லாமல், அவர் பக்கம் திரும்பி “சரத்குமாரைப் பார்க்க வேண்டுமா?”  என்று கேட்டார்.

உடனே பவுனுத்தாய் “சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம்.” என்று முகம் மலர்ந்தார். “அந்தப் படத்துல நானும் நடிச்சிருக்கேன்.” என்று குஷியாகச் சொன்ன ராதிகா  “சரத்குமார் திருமங்கலத்துல பிரச்சாரம் பண்ணுறார்.” என்று கூறிவிட்டு, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார்.

பிரச்சாரம் செய்வதற்கு ஒவ்வொரு வேட்பாளராக, ஒவ்வொரு கட்சியினராக, ஒவ்வொரு பகுதிக்கும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். பலரது உப்புச்சப்பில்லாத பிரச்சார உரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வாக்காளர்களுக்கு, ராதிகா என்ற சினிமா பிரபலத்தின் முகத்தைப் பார்த்ததும், அவங்களுடன் நேரில் பேசியதும், ஒரு சினிமா ஷூட்டிங்கைப் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கும் என்றால் மிகையில்லை என்றனர்,  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.