Skip to main content

"மக்களுக்கு எதிராக யார் நின்றாலும் நாங்கள் எதிர்த்து நிற்போம்" - விசிக சங்கத்தமிழன்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

 Sangathamizhan Interview 

 

பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய வீரியமான பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரல். பல்வேறு கருத்துகளை அந்த மேடையில் அவர் தெரிவித்தார். அவை குறித்து விசிகவின் இளைஞரணிச் செயலாளர் சங்கத்தமிழனிடம் ஒரு நேர்காணல்...

 

விசிகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி அல்ல, விசிகவுக்கும் தடா பெரியசாமிக்கும் தான் போட்டி என்று சொல்கிறாரே அண்ணாமலை?

2004 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர் தான் தடா பெரியசாமி. அதே ஆண்டு எங்கள் தலைவரின் காலிலும் விழுந்தார். அவரைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்பதே தவறு. இந்தியாவில் பலரும் பயந்து கொண்டிருக்கும்போது, மோடியையும் அமித்ஷாவையும் தைரியமாக எதிர்க்கும் கட்சி விசிக. 

 

பாஜகவை இங்கு கடுமையாக எதிர்க்கும் திருமாவளவன், நாடாளுமன்றத்தில் பிரதமரையும் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும்போது ஏன் பவ்யமாக இருக்கிறார்?

ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் இருக்கிறது. எங்கள் தலைவர் மாண்பு மிக்கவர். அனைவரிடமும் அவர் அன்பாக இருப்பார். எங்களுடைய யுத்தம் கோட்பாட்டு யுத்தம். தனிப்பட்ட நபர்களின் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது. புரட்சியாளர் அம்பேத்கரும் அப்படிப்பட்டவர் தான். கோட்பாட்டு யுத்தங்களின் போது எங்கள் தலைவரை எழுச்சியுடன் பார்க்கலாம்.

 

பாஜகவும் பாமகவும் இருக்கும் அணியில் நான் இருக்க மாட்டேன் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் திருமாவளவன். இது திமுகவுக்கு விடுக்கும் எச்சரிக்கையா?

நாங்கள் யாருக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது, சனாதனம் இங்கு வேரூன்றி விடக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். நாங்கள் மக்களை அரசியல்படுத்துகிறோம். 2024 ஆம் ஆண்டு ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்து விடுவார்கள். 

 

மருத்துவர் ராமதாசுடன் நல்ல உறவில் இருந்த திருமாவளவன் பொதுமேடைகளில் அவரை விரோதி போல் பாவித்துப் பேசுவது ஏன்?

முதலில் அவரோடு இணைந்து தான் நாங்கள் பயணித்தோம். தமிழ் குடிதாங்கி என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கினோம். தலித்துகளுக்கும் தலித் இளைஞர்களுக்கும் எதிராக அவர்கள் தொடர்ந்து பேசினார்கள், செயல்பட்டார்கள். அதன் பிறகு தான் அவர்களுக்கு எதிராக நாங்கள் திரும்பினோம்.

 

ஆனால் விசிக பெரிதும் மதிக்கும் தலைவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே?

அந்தக் காலகட்டத்தில் ஈழம்தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அதனால் காங்கிரசை எதிர்த்தோம். அப்போது பாஜக வளரவில்லை. இருவருமே ஈழத்துக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸை விடப் பல மடங்கு ஆபத்தானது பாஜக. வெறுப்பு அரசியலால் நான் என்னுடைய தந்தையை இழந்தேன், ஆனால் இந்த தேசத்தை இழக்க மாட்டேன் என்கிறார் ராகுல் காந்தி. மிகப்பெரிய பக்குவம் இது. காங்கிரஸிடம் நிகழ்ந்த மாற்றம் இது. கொள்கை ரீதியாக தான் ஒரு தமிழன் என்கிறார் ராகுல் காந்தி. அவர்களை நாம் ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

 

தலித் விரோதி என்று பாமக எப்போதும் சொல்லவில்லையே?

தர்மபுரியில் ஒரு கிராமத்தையே அழித்தார்கள். காதல் ஜோடியைப் பிரித்து காதலனையே கொலை செய்தார்கள். தலித் இளைஞர்கள் தான் அனைத்திற்கும் காரணம் என்பது போல் பரப்பினார்கள். வன்னிய மக்கள் எங்களுடைய தோழர்கள். ஆனால் பாமக சாதிய வன்மத்தோடு செயல்படுகிறது. பாஜக மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது. பாமக சாதியை வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது. அவர்கள் மாறாதவரை நாங்களும் மாற மாட்டோம். 

 

பாஜகவுக்கு எதிராகவோ, ஆளுநருக்கு எதிராகவோ போராட்டம் நடத்தச் சொல்லி விசிகவைத் தூண்டிவிட்டு விட்டு திமுக அவர்களோடு நட்பு பாராட்டுகிறதா?

நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. யாருக்கும் அடியாள் வேலை செய்ய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். மக்கள் நலனுக்காகக் கூட அவர் பிரதமரை சந்தித்திருக்கலாம். அவருடைய சந்திப்பு பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் இங்கு வந்த நாளிலிருந்து அவரை எதிர்த்து வருகிறோம். அவர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ் ரவி என்று தொடர்ந்து சொல்லி வருபவர் எங்கள் தலைவர். நாங்கள் சுயமாக சிந்தித்து செயல்படுகிறோம்.

 

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படத்தைத் தமிழில் மொழிபெயர்த்து விசிக வெளியிட்டது. ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதைச் செய்யவில்லையே?

மிக நல்ல கேள்வி இது. உங்களோடு சேர்ந்து நானும் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். மோடியின் முகத்திரையை பிபிசி கிழித்துவிட்டது. இதை அவர்களுடைய தொலைக்காட்சிகள் மூலம் இந்தியா முழுக்கக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலேயே அதைச் செய்த ஒரே கட்சி விசிக தான். 

 

பதவி எனக்கு முக்கியமில்லை என்கிறார் திருமாவளவன். சென்ற முறை ரவிக்குமார் திமுக சின்னத்திலும், திருமாவளவன் தனிச் சின்னத்திலும் நின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை எப்படி இருக்கும்?

பதவியைப் பெரிதாக மதிக்காதவர் தான் எங்கள் தலைவர். இதற்கு முன்பு ஒரு முறை தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா செய்தவர். கூட்டணி என்பது மக்கள் நலனுக்காகத் தான். மக்களுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை நாங்கள் எதிர்த்து நிற்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...