Skip to main content

680 கோடிக்கு செருப்பு... 274 ஹேண்ட் பேக்... இன்னொரு போயஸ் கார்டன்?!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

அளவுக்கு அதிகமாக ஆசைப்படுற ஆம்பளை மட்டுமல்ல பெண்களும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை என்பதை சிலருடைய சரித்திரம் நிரூபிக்கிறது. இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர்.

 

rosma mansor



அர்ஜென்டினா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இஸபெல் பெரோன், பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கைதான் இதுவரை சாதனையாக இருந்தது. 

மலேசியாவின் ரோஸ்மா சாதாரண ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். அப்துல் அஜிஸ் நோங் சிக் என்பவரை திருமணம் செய்து, இரு குழந்தைகளைப் பெற்றவர். 1987-ஆம் ஆண்டு, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மலேசியாவின் கலாச்சார அமைச்சரான நஜிப் ரஸாக்கை திருமணம் செய்தார்.


அப்போது தொடங்கிய ரோஸ்மாவின் ஆடம்பரவாழ்க்கை, 2009-ஆம் ஆண்டு நஜிப் மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு எல்லையைக் கடந்தது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் கணவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெரைட்டியான விலை மதிப்புள்ள நகைகளை வாங்கிக் குவித்தார். 

 

 

najib rosma



22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் மனைவியை எளிமையின் சின்னமாக கூறுகிறார்கள். ஆனால், ரோஸ்மா உலகின் மிக முக்கியமான நகைக்கடைகளை தேடித்தேடி போய் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விதவிதமான நகைகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அவருடைய ஆடம்பரக் கூத்துகளை பிரதமர் நஜிப் கண்டுகொள்ளவே இல்லை.

 

 


மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் என்ற முதலீட்டு நிறுவனத்தை அரசு சார்பில் தொடங்கிய நஜிப், ஆறு ஆண்டுகளில் இந்த நிறுவனத்திலிருந்து மக்கள் பணம் சுமார் 450 கோடி ரூபாயை தனது சொந்தக் கணக்குகளுக்கு மாற்றியிருப்பதாக வால்ஸ்ட்ரீட் பேப்பர் அம்பலப்படுத்தியது. அப்போது தொடங்கியது நஜிபின் வீழ்ச்சி.

"ஒரு தலைவரின் மனைவி என்ற வகையில் நான் என்னை அலங்காரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது தோற்றத்தை பராமரிக்க வேண்டியிருக்கிறது. நான் என்னை அலங்காரம் செய்துகொள்ளத் தவறினால் அதுவும் விமர்சிக்கப்படும்'’ என்று தனது ஆடம்பர வாழ்க்கைக்கு ரோஸ்மா விளக்கம் சொல்வது வழக்கம்.

  malaysia raid



கணவன் மனைவியின் கூத்து போதாது என்று ரோஸ்மாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் தனது பங்கிற்கு கொள்ளையடித்திருக்கிறார். இதையடுத்தே, இவர்களுடைய அட்டூழியத்தை கட்டுப்படுத்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் தலைமையிலான கட்சியும், சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மலேசிய பொதுத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டன. மே 9 ஆம் தேதி நடைபெற்ற மலேசிய தேர்தலில் நஜிப் படுதோல்வி அடைந்தார்.

தோல்வியைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் வெளிநாடு தப்பத்  திட்டமிட்டனர். ஆனால், அரசு அவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது. அதன்பிறகு அவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டன. இந்தச் சோதனையில்தான் பணமாகவும், தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட விலையுயர்ந்த நகைகளாகவும் குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

 

handbags



72 சூட்கேஸ்களில் இருந்த இந்தக் குவியலை போலீஸார் பறிமுதல் செய்தனர். லண்டன், ஹவாய், நியூயார்க், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற நகைக்கடைகளில் இவை வாங்கப்பட்டிருந்தன. இந்த நகைகளின் மதிப்பு சுமார் 40 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும்.

2008 முதல் 2015 ஆம் ஆண்டுவரை இவர் அலங்காரப் பொருட்களுக்கு மட்டும் 54 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட முதுமையை தடுக்கும் மாத்திரைகளை வாங்கியிருக்கிறார். உருக்குப் பெண்மணி என்று கூறிக்கொள்ளும் இவர், 680 கோடி ரூபாய்க்கு ஆடம்பர செருப்புகளையும், உடைகளையும் வாங்கியிருக்கிறார்.

 

 


விலையுயர்ந்த ஆடம்பரமான முதலைத் தோலில் வைரம், தங்கம் கலந்து செய்யப்பட்ட 274 ஹேண்ட்பேக்குகள் கைப்பற்றப்பட்டன. இவை 10 லட்சம் ரூபாய் முதல் 81 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளவை. தனது வருமானத்துக்கு ரோஸ்மா தனது சுயசரிதையில் கூறியுள்ள சோர்ஸ் என்ன தெரியுமா?

"எனது பாடல்கள் அடங்கிய ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டேன். அதில் கிடைத்த வருமானத்தில்தான் எனக்குத் தேவையான நகைகளையும் உடைகளையும் வாங்கினேன்' என்கிறார்.’’

இது உண்மையா என்றால் உண்மைதான். ஆனால், இவர் வெளியிட்ட இசை ஆல்பத்தை வாங்கியவர்கள் அனைவருமே, மலேசிய அமைச்சரவையில் இவருடைய பாடலுக்கு ரசிகர்களாக இருந்த அமைச்சர்கள்தானாம்!




 

 

 

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.

Next Story

முதல்வர் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் வெளியிட்ட எம்.பி.

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Allegation of sensationalism against Chief Minister's wife Published with evidence by M.P

 

அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெளரவ் கோகாய், “உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலமைச்சரின் மனைவியின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு ரூ. 10 கோடி மானியத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கவும்” என்று கூறி மானியம் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ஹிமந்த பிஸ்வா, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.