Skip to main content

ஏசியில் வேலை செய்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'புற்று மண் குளியல்'-நம்மாழ்வார் பிறந்தநாளில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு!!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

sand bath held on the eve of Nammazhvar's birthday

 

நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுமண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில், வைத்தியநாத சுவாமி கோவில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதில் இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மண் குளியல் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

 

இதுகுறித்து கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், “இந்த வெயிலுக்கு, உடலுக்கு நல்ல சிகிச்சையாகவும், மேலும் எளிமையான மருத்துவமும் கூட. எல்லோரும் செய்து பலன் பெறலாம். கரையான் புற்றுமண், களிமண் அல்லது செம்மண் எதுவாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் முதல் நாளே தண்ணீர் விட்டு கொழ கொழப்பாக இருப்பதுபோல பக்குவமாக தயார் செய்து காலை இளம் வெயிலில் உடல் முழுவதும் பூசிக்கொள்ள, உடலில் இறந்த செல்கள் வெளியேறும். புதிய செல்கள் உருவாகும்” என்றார்.

 

மேலும், “புற்றுமண் குளியலில் உள்ள நன்மைகள், புற்றுமண் மருத்துவம் - பயன்கள்,  புற்றுமண் மருத்துவம் என இயற்கை நமக்கு கொடுத்த மருந்துகள் ஏராளம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் முழுமையாக இயற்கை வைத்தியத்தை சார்ந்து இருக்க முடியாது. முழுமையாக ஆங்கில மருத்துவத்தையும் சார்ந்து இருக்க முடியாது. தேவைப்படும்போது இயற்கை மருத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று நாம் பார்க்க இருப்பது மண் குளியலைப் பற்றித்தான். நாம் அனேக இடங்களில் கரையான் புற்றுகளைப் பார்த்திருப்போம். இந்த கரையான் புற்றுமண் உடலுக்கு மிகவும் நல்லது.

 

இடிந்துபோன புற்றில் உள்ள அந்த மண்ணை எடுத்து வைத்து, இரவு நேரத்தில் ஒரு பாட்டிலில் அந்த மண்ணை சேகரித்து, தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த மண்ணை உடலில் பூசிக்கொண்டு, இளம் சூடான வெயிலில் 45 நிமிடங்கள் உடலைக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் தோலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம். உடலில் தேங்கியிருக்கும் இறந்துபோன செல்களை அகற்றுகிறது. உடலில் பல நாட்களாக தங்கியுள்ள அழுக்குகளை நீக்குகிறது. 

 

வியர்வை வெளியேறுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு வியர்வை என்பதே இருக்காது. இப்படிப்பட்ட நபர்களுக்கு இந்த மண் குளியல் மிகவும் சிறந்தது. வியர்வை மூலம் தேவையற்ற அழுக்குகளை வெளியேற்ற முடியும். உடலில் உள்ள யூரியா அளவை சரி செய்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் இந்தக் குளியலை அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரையான் புற்றுமண்ணை சேகரித்துக்கொண்டு, இதனுடன் சிறிது பூண்டு, சிறிது கல் உப்பு சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அரைத்து வைத்த இந்தக் கலவையை இளம் சூடாக காய்ச்ச வேண்டும். இளம் சூடாக இருக்கும் இந்தக் கலவையை மூட்டுவலி உள்ளவர்கள் தங்களது மூட்டில் வைத்து பற்று போடலாம். 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கிவிடும். உடலில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த வைத்தியத்தை மேற்கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டெல்லியில் விவசாயி கொலை; அரியலூரில் பதட்டம்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Hariyana farmer passes away tens in Ariyalur

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 வயதான விவசாயி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்றைய தினம் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி ஆகிய இருவரும், விவசாயி  கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Hariyana farmer passes away tens in Ariyalur

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமானூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோசலராமன், அரியலூர் தாசில்தார் ஆனந்தவேல் ஆகியோர், இரு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக தரும்படி தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு வழியாக மூன்று மணி நேரம் போராடிய விவசாயிகளை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கீழே இறக்கினர்.

அதன்பிறகு விவசாயிகள், டெல்லியில் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிக்கு ஒரு கோடி இழப்பீடு தர வேண்டும். துப்பாக்கிச் சூட்டினை நிறுத்த வேண்டும். கண்ணீர் புகை குண்டு வீசுவதனை உடனடியாக நிறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்தபடி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அறவழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டத்தைப் போன்று கொச்சைப்படுத்துதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறினர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு முதலுதவி செய்து, பழச்சாறு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த மொத்த நிகழ்வும் முடியும் வரை அரியலூர் தாசில்தார் உடனிருந்தார். இரு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.