Skip to main content

சனாதனம்.. தேர்தல் தோல்வி..! - சுப. வீரபாண்டியன்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Sanathanam.. election failure..! - Suba.  Veerapandian

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது என்றும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. மக்களில் ஒரு பகுதியினரும் அதனை நம்புகின்றனர். ஐந்து மாநிலங்களில், மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை வைத்து இப்படி விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சில உண்மைகளை வேறு சில கோணங்களில் பார்த்தால்தான், உண்மை நமக்கு புரியும் என்கிறார் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன்.

மேலும் அவர், இந்தத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்யும் வலதுசாரிகள், இது பா.ஜ.க.வின் வெற்றி என்றும், காங்கிரஸின் தோல்வி என்றும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், சனாதனம் பற்றி உதயநிதி பேசியதால்தான் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள். அங்குதான் இருக்கிறது ஒரு நுட்பமான பஞ்சகம். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தேர்தல்களில் கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் பார்க்காமல், அவை பெற்ற வாக்குகளையும் நாம் கொஞ்சம் பார்க்கலாம்!

இதோ அந்தப் புள்ளி விவரம், வாக்குகளின் எண்ணிக்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால், சில உண்மைகள் நமக்குப் புரியும்!

தெலங்கானா, மிசோரம் இரண்டு மாநிலங்களையும் விட்டுவிட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் மட்டும் இரண்டு கட்சிகளும் (பா.ஜ.க., காங்கிரஸ்) பெற்றிருக்கும் வாக்குகள் 4.48 கோடியும், 3.98 கோடியும் ஆகும். அதாவது பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலுமாகச் சேர்த்து 50 லட்சம் வாக்குகள் மிகுதியாக பெற்றிருக்கிறது. இது பெரிய வெற்றிதான், நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகளையும் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும். மிசோரமிலாவது இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலங்கானாவில் அப்படி இல்லை. எனவே தெலங்கானாவில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளை மட்டுமாவது நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

அப்படிப் பார்க்கும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 92 லட்சம் வாக்குகளையும், பா.ஜ.க. வெறும் 32 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையில் 60 லட்சம் வாக்குகள் வித்தியாசம். இப்போது நான்கு மாநிலத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் பா.ஜ.க.வைவிட கூடுதலாகப் பெற்றிருப்பது புலப்படும். மிசோரமில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மேலும் கூடுதலாக ஆகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது, காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படி முழு உண்மை ஆகும்?

இவற்றைத் தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத உதயநிதியை உள்ளே இழுத்துக்கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது என்று, வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்கின்றனர். அதாவது, சனாதனத்தின் மீது ஒரு சிறு விமர்சனத்தை முன்வைத்தால் கூட, மக்கள் எதிராகத் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்பது போன்ற ஓர் அச்சுறுத்தலை உருவாக்குவதுதான் அதன் உள்நோக்கம்.

சனாதனத்தை விமர்சித்ததால் தான் இப்படித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்னும் முழுப் பொய்யை, உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, சனாதனத்தை எதிர்த்த உதயநிதி ஆதரித்த காங்கிரஸ் கட்சி தானே 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அப்படியானால், சனாதனத்தை எதிர்ப்பதைத்தான் பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாமா?

சனாதன ஆதரவோ, எதிர்ப்போ இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. பிறகு ஏன் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றனர்? அங்குதான் அவர்களின் உள்நோக்கமும், மத அடிப்படையிலான பாசிசமும் தொக்கி நிற்கின்றன. கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் ஆகியனவெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, வாழ்க்கைச் சூழல், அனுபவத்தைப் பொறுத்தவை. ஆனால் பா.ஜ.க., திட்டமிட்டு மத அடிப்படையிலான அரசியலை இங்கு கட்டமைக்க விரும்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கான கட்சி தங்களின் கட்சி மட்டும் தான் என்பது போலவும், பிற கட்சிகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்பது போலவும் ஒரு கருத்தை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வதன் மூலம், பெரும்பான்மையினரின் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.

இந்த மதவாத அரசியலைத் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு செலுத்திவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை இங்கு அவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துகளைச் சொல்லும் தி.மு.க.வும், தமிழ்நாடு அரசின் முதல்வரும் ஏன் தீபாவளி உள்ளிட்ட இந்து மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதுதான் அந்த கேள்வி. நீண்ட நெடுநாட்களாக இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த கேள்விக்கான உண்மையான விடையை, உள்நோக்கமுடைய அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பொது மக்களுக்கு நாம் சொல்லியாக வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற மத விழாக்கள் எல்லாம், அவர்களின் இறைத்தூதர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும்போது, தீபாவளி என்பது ஒருவரைக் கொன்ற நாளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அடுத்தவன் சாவைக் கொண்டாடும் அந்தப் பழக்கம் எப்போதும் தமிழர்களிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழாக்களில் பெரும்பான்மையானவை, தேவ - அசுர யுத்தம் என்னும் கற்பனையில் உருவானவையாகவே உள்ளன.

தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகின்றவர்கள் யார் என்னும் வினாவிற்கு, அவர்களால் உண்மையான, தெளிவான விடையை ஒரு நாளும் சொல்ல முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போரினையே அவர்கள் தேவ அசுர யுத்தம் என்கின்றனர். இதை ஆரிய திராவிடப் போர் என்பார் ஜவஹர்லால் நேரு.

இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். இயேசுநாதர், நபிகள் ஆகியோர் வரலாற்று மனிதர்கள். பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ஆகியோர் புராணப் பாத்திரங்கள். இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு என்பது உண்மை, புராணம் என்பது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது, நாகரிகமும் இல்லை - ஜனநாயகமும் இல்லை.

இறுதியாக, "சூத்திரர்கள் யார்?' என்னும் நூலில், அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள சில வரிகளோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம். "மேலை மதங்களின் பிரபஞ்சத் தோற்றம் குறித்த கருத்தாக்கத்தில், மனிதன் முக்கியத்துவம் பெறுகிறான். ஆனால் இங்கோ, ஒரு வருணம் அல்லது சாதி தான் அடிப்படை அலகாக இருக்கிறது'' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆம்! இந்து மதம் என்பது கடவுளை விட, மதத்தை விட, வழிபாட்டு முறைகளை விட வருணத்தையும், சாதியையும்தான் தூக்கிப் பிடிக்கிறது. சாதி அடுக்குகளைக் கொண்டே, இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். அதை உணரும்போதுதான், பா.ஜ.க. என்பது பாசிசத்தின் மறுவடிவம் என்பதையும் நம்மால் உணர முடியும். 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.