Skip to main content

கள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர் நடமாட்டம்! கிரிமினல்களுடன் கரம் கோக்கும் காவல்துறை! புட்டு புட்டு வைத்தார் 'சஸ்பெண்ட்' அதிகாரி!!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
inspector rama andavar

                                                         இன்ஸ்பெக்டர் ராம.ஆண்டவர்



சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர் (57). வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன்னீர்செல்வம், 'ஏற்கனவே மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் ஏன் வண்டியை மடக்கினீர்கள்?,' என்று கேட்கிறார். அதற்கு ராம.ஆண்டவர், 'இப்போது கடும் நெருக்கடி இருக்கிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள்,' என்று பதில் கூறி இருந்தார்.


சர்ச்சையை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு வாழப்பாடி டிஎஸ்பிக்கு, எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டார். கரோனா ஊரடங்கில் இதுவும் கடந்து போகும் என்று அசால்ட்டாக இருந்த ஆய்வாளர் ராம.ஆண்டவரை, மே 8ம் தேதி திடீரென்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார். தமிழ்நாடு காவல்துறை துணைசேவைகள் விதிகள் பிரிவு 3 (இ)-ன் கீழ் பொதுநலன் கருதி அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராம.ஆண்டவர், மாவட்ட எஸ்பிக்கு அனுப்பிய விளக்கத்தில், சேலம் மாவட்ட காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்களை புட்டு புட்டு வைத்திருந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பத்து நாள்கள் கழித்து, அவருடைய குண்டக்க மண்டக்க விளக்கக் கடிதமும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் எடப்பாடி மாவட்டத்தில் லாட்டரி, கள்ளச்சாராயம், போதை பவுடர் என சகலவிதமான இத்யாதிகளும் தாராளமாக புழங்குவதும், குற்றவாளிகளும் காவல்துறையும் கைகோத்து செயல்படுவதும் அவருடைய குற்றச்சாட்டின் சாராம்சம். 

 

inspector rama andavar letter


ஆய்வாளர் ராம.ஆண்டவர் உயர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்திலிருந்து...


''கூலிக்காரன், போலீஸ்காரனாக இருக்கலாம். அதிகாரியாக ஆசைப்படக்கூடாது. சேலம் மாவட்டம் மட்டுமல்ல. தமிழ்நாடு போலீஸ் முழுவதும் கிளப், லாட்டரி, மணல், மண், ஜல்லி, சந்துக்கடை, சூதாட்டக்காரர்களிடம் வசூல் செய்வதும், இரவு ரோந்து செல்லும் எஸ்.ஐ., பீட் காவலர்கள் வாகனத்தை வழிமறித்து பணம் வாங்குவதும் உலகத்திற்கே தெரிந்ததுதான். 


வீரகனூர் லத்துவாடி பன்னீர்செல்வம் என்பவர், எனக்குப் மாமூல் கொடுத்து இருந்தார் எனில், அவர் ஏன் என்னிடம் பலமுறை பணம் கொடுப்பது தொடர்பாக பேச வேண்டும்? மணல் கடத்தல்காரர் ஒருவர் மீது குண்டாஸ் வழக்கு போட, கடத்தல் வாகனத்தைப் பிடிக்க முயன்றபோது சேலம் மாவட்ட தனிப்பிரிவு ஏட்டு மல்லப்பனும், தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜனும் தடுத்தார்கள். 


மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றும் ஒவ்வொருவரும் கையூட்டின் ஆணிவேராக இருக்கிறார்கள். பனை மரத்தில் கள் இறக்குவோரிடம்கூட தனிப்பிரிவு ஆய்வாளர், ஆத்தூர் டிஎஸ்பி வரை மாமூல் வசூலித்துக் கொள்கின்றனர். கள் இறக்கி, போதை மாத்திரை, போதை பவுடரை கலந்து குடித்து, யாருக்காவது உயிர்ச்சேதம் ஏற்பட்டால் என் மீது எப்ஐஆர் ஆகி விடுமோ என்று நான் பயந்து கிடந்தேன். 


என் குடும்பத்தாருக்கு நான் வாங்கும் சம்பளப் பணத்தைத் தவிர வேறு எந்த வித பணமும் தெரியாது. ஆனால், மற்ற காவல்நிலையங்களில் பெட்டிஷன் விசாரணை முதல் சிஎஸ்ஆர் பதிவு செய்வது வரை பணம் வாங்கப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது. தனிப்பிரிவு ஆய்வாளர், டிஎஸ்பி ஆகியோர் தனிப்பிரிவு காவலர்கள் மூலம் மாதந்தோறும் பணம் வசூலிப்பது மேலிடத்திற்கு எப்படி தெரியாமல் போனது? 


காவல்துறையில் கையூட்டு கலாச்சாரம் இருப்பதால்தான் டிஎஸ்பி முதல் பலரும் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுகிறார்கள். கரோனாவால் கையூட்டு தடைபட்டபோதும் தனிப்பிரிவு ஏட்டு சீனிவாசன், அண்ணாமலை போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விட்டதன் உண்மை புரியவில்லை. 


கையூட்டுக்கார டிஎஸ்பி, தனிப்பிரிவு ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்களை கட்டுப்படுத்தாமல், பினாமி பெயரில் எந்த சொத்தும் வாங்காத என்னை புறமுதுகு காட்டி ஓடச்செய்யும் இந்த அவல நிலை கண்டு, மனம் குமுறி வெளியேறுகிறேன். பென்ஷன் தொகை, உள்பட என் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட எந்த தொகையும் எனக்கு வேண்டவே வேண்டாம். கையூட்டு இல்லாத மாவட்டம் எனத் தெரிய வரும்போது என் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என்று மனம் நொந்து போய் விளக்கக் கடிதத்தில் எழுதியிருந்தார் ராம.ஆண்டவர். 


பணிக்காலத்தில் இவருடைய செயல்பாடுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்திருப்பது தெரிய வந்தது. தேனி மாவட்டம்தான் சொந்த ஊர். ஆனால், தென் தமிழகத்தைவிட கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என வட மாவட்டங்களில்தான் நீண்ட காலம் பணியாற்றி வந்திருக்கிறார்.


கடந்த 2017ல், தர்மபுரி மாவட்டம் மத்தூரில் பணியாற்றி வந்தபோது உதவி ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பில் காவல்நிலையத்திலேயே அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார் ராம.ஆண்டவர். அச்சம்பவத்திற்குப் பிறகு அவர் மாவட்ட ஆயுதப்படைக்கு இரண்டாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார். 2016ல் பொம்மிடியில் ஆய்வாளராக இருந்தபோது சொந்த உபயோகத்திற்காக காவல்துறை ஜீப்பை நாமக்கல் மாவட்டத்திற்கு அவரே ஓட்டிச்சென்றிருக்கிறார். திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்த மல்லூரில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார். சாலை மறியல், காவல் வாகனம் உடைப்பு வரை பரபரப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிகள் அதிகரிக்கவே, அவர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு, கன மழையால் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பந்தோபஸ்து பணிக்காக செல்லுமாறு ராம.ஆண்டவரிடம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டபோது, 'ஏன் என்னை விட்டால் இங்கே வேறு யாரும் இன்ஸ்பெக்டர்களே கிடையாதா? அதெல்லாம் போக முடியாது,' என்று திறந்த மைக்கிலேயே அலட்சியமாக கூறியிருக்கிறார்.


இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த ராம.ஆண்டவர், ஓய்வு பெறும் காலம் நெருங்கியதை அடுத்து, புதிதாக வரும் சர்ச்சைக்குரிய எந்த புகார் மனுக்களையும் விசாரிக்காமல் கவனமாக தவிர்த்து வந்திருக்கிறார் என்கிறார்கள் உளவுப்பிரிவினர். அதேநேரம், பெரிய அளவில் லஞ்ச வேட்டை புகார்களில் சிக்காவிட்டாலும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் சொல்லி விடமுடியாது என்கிறார்கள் தனிப்பிரிவினர்.


காவல்துறை மீது விமர்சனம் செய்து எழுதப்பட்ட கடிதம் சமூக ஊடங்களில் வெளியானதன் பின்னணியில் ஐஜேகே கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், அவர்தான் இப்போதைக்கு ராம.ஆண்டவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஒருதரப்பு சொல்கிறது.


இதுபற்றி ராம.ஆண்டவரிடம் பேசினோம்.


''எங்க எஸ்பி, டிஐஜி, ஐஜி அய்யா எல்லாரும் தங்கமான அதிகாரிங்கதான். கொழந்த மனசுக்காரங்க. போலீசை கெடுக்கணும்னு நினைக்க மாட்டாங்க. மேடம் கூட, பெரிய தப்பு பண்ணினாலும் டிரான்ஸ்பர்தான் பண்ணுவாங்க. மக்கள்கிட்டயும் எனக்கு நல்ல பேரு இருக்கு. இத்தனைக்கும் ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ் என்பதால் கெட்டப்பெயர் வந்துடும்னு பெட்டிஷன்கூட விசாரிக்க மாட்டேன். அப்படி இருந்தும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். 

 

DIG pradeep kumar

                                                                          டிஐஜி பிரதீப்குமார்


சஸ்பெண்ட் செய்த பிறகு எஸ்பியையும், டிஐஜியையும் பார்த்து பேசியிருக்கணும். ரெண்டையும் கைவிட்டுட்டேன். அப்படி செய்திருந்தால் ஒருவேளை என்னை மன்னிச்சிக்கூட விட்டிருப்பாங்க. ஐஜி அய்யாகிட்ட கூட நான் எஸ்ஐ ஆக மூன்று வருஷம் வேலை செய்திருக்கேன். மாமூல் புகார் தொடர்பாக பேசிய பன்னீர்செல்வமும் நானும் அதற்கு முன்பு பேசியதில்லை. ஐஜேகே கட்சி பிரமுகர் பற்றி கேட்கிறீர்கள். அவர் என் மீதுள்ள மரியாதைக்காக உதவி செய்கிறார்,'' என்று மேலோட்டமாக பதில் சொன்னார் ராம.ஆண்டவர்.

                                 

salem district sp  deepa ganiger

                                             சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகர்
 


இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகரின் கருத்தறிய பலமுறை முயற்சித்தோம். பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் 'கன்மேன்' ஒருவரே அழைப்பை எடுத்துப் பேசினார். எதுவாக இருந்தாலும் தனிப்பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறு நமக்குச் சொல்லப்பட்டது. 


அதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜிடம் கேட்டபோது, ''ராம.ஆண்டவர் மீது எத்தனையோ முறை புகார்கள் வந்துள்ளன. அவர் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி இருக்கிறோம். இப்போதுகூட மாமூல் ஆடியோ குறித்து புகார் வந்து மூன்று மாதங்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருமுறைகூட அவர் நேரில் வந்து பார்க்கவில்லை. அவர் இஷ்டத்திற்கு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர் தன்னுடைய பணிக்காலத்தில் எந்த ஸ்டேஷனிலும் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்து பணியாற்றியது கிடையாது. எல்லா இடத்திலும் புகாரின்பேரில்தான் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்,'' என்றார்.


மாமூல் புகாரில் பணியிடைநீக்க நடவடிக்கை என்பது காவல்துறையில் சகஜம் என்பது ஒருபுறம் இருந்தாலும், முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்ட கிளப், போதை குற்றங்கள் தலைவிரித்தாடுவதும், கிரிமினல்களுடன் காவல்துறையினர் கரம் கோத்து செயல்படுவதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 


 

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.