Skip to main content

''இந்தப் பிறப்பே மற்றவர்களுக்கு உதவத்தான்!'' பேரிடர்கள் உருவாக்கிய நாயகன்!! 

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

salem district government employee peoples lockdown foods


''சமுதாயத்தில் பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் புயலிலும், வெள்ளத்திலும் தத்தளிக்கும் மக்களுக்கு நன்கொடை கேட்டால் பத்து பைசா தர மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் நான் யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை, என்னால் முடிந்தவரை நான் ஈட்டும் பொருள் அனைத்தும் இயலாத மக்களுக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன். அதில்தான் எனக்கு முழு திருப்தியும் கிடைக்கிறது,'' என்கிறார் விஜய்குமார். 


வாழ்வில் கொடுந்துயரங்கள் எப்போதும் யாருக்கும் நேரக்கூடாது என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருக்கிறது. அத்துயரிலும் ஒருவித நன்மையும் இருக்கிறது. நமக்காக உடன் வருபவர்களைப் பேரிடர்களே அடையாளம் காட்டுகின்றன. அப்படி, இயற்கை பேரிடர்களால் அடையாளம் காட்டப்பட்ட நாயகர்களுள் ஒருவர்தான், விஜய் என்கிற விஜய்குமார் (30). 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம்தான் சொந்த ஊர். பி.ஹெச்டி., முடித்துள்ள விஜய்குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக (சைக்கியாட்ரிஸ்ட்) பணியாற்றி வருகிறார். ஓர் அரசு ஊழியர் என்பதைக் காட்டிலும், தன்னை ஓர் இயற்கை விவசாயியாக அறியப்படவே விரும்புகிறார். மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான் அவருக்கும் ஊக்கி. அதனாலேயே உள்ளூரில் 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பகலில் மன நல ஆலோசகர்; மாலை 06.00 மணிக்கு மேல் இயற்கை விவசாயி. இவை மட்டுமே அவரின் அடையாளங்கள் அல்ல. 
 

salem district government employee peoples lockdown foods


கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. பொதுமுடக்கம் உள்ள நேரத்தில் காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் என முழுவீச்சில் களத்தில் இறங்கி கடமையாற்றினர். ஊர் காக்கும் அவர்களின் நலன் காக்கவும் களமிறங்கினார் விஜய். நாள்தோறும் வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல் வரை கரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதைச் சேவையாகச் செய்து வந்தார். சாலையோரத்தில் ஒடுங்கிய வயிறும், ஒட்டிய தேகமுமாக ஆதரவற்றுக் கிடந்தோருக்கும் உணவுப்பொட்டலங்களை வழங்கத் தவறவில்லை.


ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதம் இந்த சேவையை வழங்கினார். நாள்தோறும் 1,200 பேருக்கு உணவு. வெஜிடேபிள் பிரியாணி, தக்காளி, எலுமிச்சை சோறு, தயிர் சோறு என அவருடைய சமையல் கூடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசில் கலவை உணவு தயாரானது. சமையலையும் அவரே செய்கிறார். 

''காவல்துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் நமக்காகத்தான் நேரங்காலம் பார்க்காமல் பணியாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிட்டார்களா என்று கூட யாரும் கேட்பதில்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் பசியோடு இருக்கும் நேரத்திற்கு அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உணவுப் பொட்டலங்களை வழங்கினேன்.
 

salem district government employee peoples lockdown foods


உணவுக்குத் தேவையான காய்கறிகளை இரவு 11.00 மணியளவில் நறுக்கி வைத்து விடுவேன். அதன்பின்னர் மூன்று மணி நேரம் தூக்கம். அதிகாலை 03.00 மணி முதல் 04.00 மணிக்குள் சமையல் வேலைகளை முடித்து விடுவேன். உணவுப் பொட்டலங்களை ஃபாயில் பெட்டிகளில் பேக்கிங் செய்யும் பணிகளில் பத்து நண்பர்கள் உதவியாக இருந்தனர். காலை பத்து... பத்தரைக்குள் 1,200 உணவுப் பொட்டலங்களையும் விநியோகம் செய்து விடுவோம். அதுதான் பலருக்குக் காலை அல்லது மதிய ஆகாரமாக இருக்கும்,'' என்கிறார் விஜய்குமார்.

உணவு மட்டுமின்றி 2,000 பேருக்கு கபசுர குடிநீர், 3,000 முகக் கவசங்கள், 5,000 கையுறைகளும் வழங்கியிருக்கிறார். உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக மட்டும் ஒரே மாதத்தில், தன் சொந்தப்பணம் 2.36 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார் இந்த இளைஞர். மொத்த சேமிப்பும் கரைந்து போய்விடவே, உணவுப் பொட்டலம் விநியோகத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

''உங்கள் சேவைகளைப் பார்த்த பிறகும் யாரும் உங்களுக்கு நன்கொடை அளிக்க முன்வரவில்லையா?,'' எனக் கேட்டோம். ''நல்ல கேள்விதான் அண்ணா. ஆனால், கடந்த காலங்களில் நன்கொடைக்காக சிலரை அணுகியதில் கசப்பான அனுபவங்கள் கிடைத்திருந்தன. எனக்குத் தெரிந்த கோடீஸ்வர சகோதரர்களை ஒரு பேரிடரின்போது நன்கொடைக்காக அணுகினேன். தம்பியிடம் கேட்டால், அண்ணன் வரட்டும் என்பார். அண்ணனிடம் கேட்டால், தம்பியிடம் கேளுங்கள் என்பார். இருவரும் இருக்கும்போது கேட்டபோது, வெறும் 100 ரூபாய் நன்கொடை கொடுத்து அனுப்பினார்கள். நண்பர்கள் சிலருக்கு வேறு வேறிடங்களில் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கு. அப்போதே முடிவு செய்துவிட்டேன்... உதவி தேவைப்படுவோருக்கு என்னால் முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிடுவது என்று. 
 

salem district government employee peoples lockdown foods

 

இங்கே பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர் புயலிலும், வெள்ளத்திலும் தத்தளிக்கும் மக்களுக்கு நன்கொடை கேட்டால் பத்து பைசா தர மாட்டேன்கிறார்கள். அதனால்தான் நான் யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை. என்னால் முடிந்த வரை நான் ஈட்டும் பொருள் அனைத்தும் இயலாத மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன். அதில்தான் எனக்கு முழு மன நிறைவும் கிடைக்கிறது. இந்தப் பிறப்பே மற்றவர்களுக்கு உதவத்தான் என நினைக்கிறேன்.,'' என்கிறார்.

கரோனா நிவாரண உதவிகள் மட்டுமின்றி கடந்த ஈராண்டுக்கு முன், கேரளா மாநில மக்கள் வெள்ளத்தால் தத்தளித்தபோதும், அம்மக்களின் அழுகுரல் அவரை தூங்கச் செய்யவிடவில்லை. நண்பர்கள் இருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு பத்தினம்திட்டா மாவட்டத்திற்குப் புறப்பட்டு விட்டார். பெண்களுக்கான நைட்டிகள், சேலைகள், சானிடரி நாப்கின்கள் மற்றும் துண்டுகள், லுங்கிகள், பெட்ஷீட், பால் பவுடர், பிஸ்கட் என 2.30 லட்சம் ரூபாய்க்கு, தவிக்கும் மக்களின் தேவையறிந்து பார்த்துப் பார்த்து நிவாரண பொருள்களை நேரில் கொண்டு சென்று வழங்கியிருக்கிறார். ''அப்போதும் யாரிடமும் ஒத்த பைசா வாங்கவில்லை. அத்தனையும் என் வியர்வையில் சேர்த்த காசுண்ணே,'' என்கிறார்.

கேரளா மக்களுக்கே ஓடோடிச் சென்று உதவியவர், கஜா புயலில் வீடிழந்து, அடிப்படை வாழ்விழந்து தவிக்கும் விவசாயிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருப்பாரா என்ன? கஜா புயல், புதுக்கோட்டை மாவட்டத்தையே புரட்டி எடுத்துவிட்டிருந்த நேரம் அது. சாலைகளில், வயல்வெளிகளில் அத்தனை தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன. ஊரின் பசிபோக்கிய விவசாயிகள், பசியோடு தவித்துக் கிடந்தார்கள்.
 

salem district government employee peoples lockdown foods


''கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சூரப்பள்ளம் என்ற பகுதி ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தது. முறிந்து விழுந்த மரங்களை அறுத்தெடுக்க வசதியாக கட்டிங் மெஷின்கள் கொண்டு சென்றேன். அரிசி, மெழுகுவர்த்திகள், கொசுவத்தி சுருள்கள், காய்கறிகள், சோப்பு, பல்பொடி, டூத்பேஸ்ட், சோலார் விளக்குகள் என 3.70 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருள்களை வாகனத்தில் கொண்டு சென்றேன். அப்போது என்னிடம் சேமிப்பில் அவ்வளவுதான் இருந்தது. அதற்கு மேல் இருந்திருந்தாலும் அதையும் அவர்களுக்கு நிவாரண உதவியாக செலவிட்டிருப்பேன். அப்போது அப்படியான மனநிலையில்தான் இருந்தேன்.
 

http://onelink.to/nknapp


அந்த ஊரில் எனக்குத் தெரிந்த இயற்கை விவசாயி ஒருவர் இருக்கிறார். அவருடைய வயலில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் புயலில் வேரோடு சாய்ந்துவிட்டன. அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்குக் கூட பத்து வருஷம் ஆகும். கஜா புயல், அங்குள்ள ஒவ்வொரு விவசாயியின் வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்கி இருந்தது. அந்தக் காட்சிகளை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.
 

salem district government employee peoples lockdown foods


பல பேரு, அட்வைஸ்ங்கிற பேர்ல, எதுக்கு தம்பீ ஓடி ஓடி ஹெல்ப் பண்றீங்க? அரசாங்க உத்தியோகத்துல இருக்கீங்க... கல்யாணம், சொந்த வீடுனு செட்டில் ஆகுங்க. மத்தத அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்மேல இருக்கற அக்கறையில்தான் அப்படிச் சொல்றாங்கனு வெச்சிக்கிட்டாலும், பசியால் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அப்போதே சோறிடுவதுதானே சரியாக இருக்க முடியும்?,'' எனத் தத்துவார்த்தமாக முடித்தார் விஜய்குமார்.

இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டியதிருக்கிறது. கஜா புயல், கேரளா வெள்ளம், கரோனா நிவாரண உதவிகள் உள்பட அவரின் எந்த ஒரு சேவைப்பணிகள் தொடர்பாகவும் அவரிடம் புகைப்படங்கள் இல்லை என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். இரண்டு வாழைப்பழங்களை நான்கு பேர் சேர்ந்து கொடுத்துவிட்டு, அதையும் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பப்ளிசிட்டி தேடும் உலகில், அவருடைய அணுகுமுறை ஆச்சர்யம் அளித்தது. நம் வற்புறுத்தலால் உணவுப்பொட்டலங்கள் தயாராகும் படங்களை எடுத்து அனுப்பினார். 

பிறரின் துயரைக் கண்டு எவனொருவன் கண்ணீர் சிந்துகிறானோ அவனை மனிதன் என்ற சட்டகத்திற்குள் மட்டும் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. அவன், அதற்கும் மேலானவன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெளியே வரமாட்டோம்...' -ஊரடங்கு முடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராத குடும்பத்தினர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Shocking incident in Kumari where the family did not come out of the house even after the corona lockdown

 

வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

50க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது; 7000 போலீசார் குவிப்பு - பரபரப்பில் கடலூர் மாவட்டம் 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மின்சார உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, மும்முடிச்சோழன் ஆகிய கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் 2006 ஆம் ஆண்டில் என்.எல்.சியால் ஒப்பந்தம் போடப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதேசமயம் விவசாயிகள் அந்த விளைநிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

இதனிடையே புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களையும் கையகப்படுத்த என்.எல்.சி முயன்று வருகிறது. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, நிலம் கொடுக்கும் குடும்பத்தவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் பணி மற்றும் சில நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் நிலங்களை கொடுப்போம் என அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேசமயம் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே என்.எல்.சி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

இதேபோல் '2006-ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வெறும் 6 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கியது போதாது' தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்குவது போல 25 லட்சம் என சமமான இழப்பீடு வழங்க வேண்டும்',  'வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்'  என வலியுறுத்தி ஏற்கனவே நிலங்கள் கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்ட விவசாயிகளும் தற்போது நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதையடுத்து ஏற்கனவே 6 லட்சம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு கருணைத் தொகையாக மேலும் 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் இதனை ஏற்காமல் சமமான இழப்பீடு வழங்கினால் தான் நிலங்களை ஒப்படைப்போம் என கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் கம்மாபுரம் அருகே உள்ள வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம்  உள்ளிட்ட கிராமங்களில், கடந்த  2006 ஆம் ஆண்டு நிலங்கள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலப்பரப்புகளை கையகப்படுத்துவதற்காக  என்.எல்.சி நிறுவனம் தற்போது சமப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட  பா.ம.கவினர் மற்றும்  விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி, மிரட்டி  நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க அறிவித்தது. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க தகுந்த காவல்துறை பாதுகாப்புடன்  பேருந்துகள் இயங்கும், கடைகள் திறக்கப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர்,  விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய  நகரங்களில் மருந்தகங்கள், தேநீர் கடைகள் தவிர்த்து 75% கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் காவல்துறையினர் பாதுகாப்புடன் 100% அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 50% மட்டுமே இயக்கப்படுகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும் செல்லும் தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய பாமகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.