Skip to main content

சேலத்தில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாக பல கோடி ரூபாய் சுருட்டிய கணவன், மனைவி கைது!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சேலத்தில், முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு தொகை திருப்பித்தரப்படும் என்று ஆசை வலை விரித்து பல கோடி ரூபாயை நூதன முறையில் சுருட்டிய கணவன், மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.


சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (38). இவருடைய மனைவி இந்துமதி (32). மணிவண்ணன், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன்பார்க் அவென்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பில் ஆர்எம்வி குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார்.

 Salem pays twice as much money  Husband and wife arrested


தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், 100 நாள்களில் முதலீட்டுத் தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்காக திருப்பித் தரப்படும் என்றார். அத்துடன், தான் நடத்தி வரும் மசாலா, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு பகுதிவாரியாக முகவர் உரிமை வழங்கப்படும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆணை பெற்றுத்தரப்படும் என்றெல்லாம் ஆசை வலை விரித்தார். இரட்டிப்பு மடங்கு தொகையுடன் கூடுதலாக 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மணிவண்ணனின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பிய பலர், அவருடைய நிறுவனத்தில் போட்டிப்போட்டு முதலீடுகளைக் கொட்டினர்.


இது தொடர்பாக அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தியும், பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் செய்து வந்தார். இவற்றின்மூலம் சமூகத்தில் தன்னை ஒரு பெரிய மனிதராக சித்தரித்துக் கொண்டார். இந்நிலையில், சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2017ல் மணிவண்ணன் நடத்தி வந்த நிறுவனத்தில் 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் மணிவண்ணன் உறுதி அளித்தபடி அந்தப் பெண்ணுக்கு இரட்டிப்பு மடங்கு தொகையோ, விற்பனை உரிமையோ வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.


காவல்துறை விசாரணையில் மணிவண்ணன் நிறுவனத்தில் மேலும் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து இருப்பதும் தெரிய வந்தது. சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவர் 2.82 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவரையும் ஏமாற்றி இருக்கிறார் மணிவண்ணன். குகை பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வரும் கார்த்திகேயன் என்பவர், 3.53 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அவரிடம் மணிவண்ணன் 120 நாள்களில் முதலீட்டைக் காட்டிலும் இரு மடங்கு பணம் தருவதாகவும், மாதந்தோறும் லாபத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதி அளித்து இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டு கார்த்திகேயன் நெருக்கடி கொடுக்கவே, மணிவண்ணன் கூலிப்படை கும்பலை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.
 

 Salem pays twice as much money  Husband and wife arrested


சேலம் 5 சாலை அருகே அச்சகம் நடத்தி வரும் ஒருவரிடம் தன்னுடைய நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனம் என்று கூறி, 34.60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதில் ஒருவழியாக போராடி, அந்த முதலீட்டாளர் 7 லட்சம் ரூபாயை வசூலித்து விட்ட நிலையில், 27.60 லட்சம் ரூபாயை மணிவண்ணன் கடைசி வரை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நூதன மோசடி எல்லாவற்றிலும் மணிவண்ணன் மட்டுமின்றி அவருடைய மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி மற்றும் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, மோசடி தம்பதியினரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (அக். 18) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், 13 செல்போன்கள், பிஎம்டபுள்யூ, ஹோண்டா ஜாஸ் ஆகிய இரு சொகுசு கார்கள், பத்து பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில போலி ஆவணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மணிவண்ணன் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 350 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முதலீடு செய்தவர்களில் சிலர், பணம் திரும்பக் கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளன. மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததும், நட்சத்திர ஹோட்டல்களில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.


சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், இதுபோன்ற போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளைக் கண்டு முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் குமார் (அன்னதானப்பட்டி), விஜயகுமாரி (மத்திய குற்றப்பிரிவு), சதீஸ் (கொடுங்குற்றப்பிரிவு), உதவி ஆணையர் சரவணன் (வடக்கு சரகம்) மற்றும் காவலர்களை ஆணையர் பாராட்டியுள்ளார்.


 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.