Skip to main content

சேலத்தில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாக பல கோடி ரூபாய் சுருட்டிய கணவன், மனைவி கைது!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சேலத்தில், முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு தொகை திருப்பித்தரப்படும் என்று ஆசை வலை விரித்து பல கோடி ரூபாயை நூதன முறையில் சுருட்டிய கணவன், மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.


சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (38). இவருடைய மனைவி இந்துமதி (32). மணிவண்ணன், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன்பார்க் அவென்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பில் ஆர்எம்வி குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார்.

 Salem pays twice as much money  Husband and wife arrested


தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், 100 நாள்களில் முதலீட்டுத் தொகையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்காக திருப்பித் தரப்படும் என்றார். அத்துடன், தான் நடத்தி வரும் மசாலா, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு பகுதிவாரியாக முகவர் உரிமை வழங்கப்படும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆணை பெற்றுத்தரப்படும் என்றெல்லாம் ஆசை வலை விரித்தார். இரட்டிப்பு மடங்கு தொகையுடன் கூடுதலாக 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மணிவண்ணனின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பிய பலர், அவருடைய நிறுவனத்தில் போட்டிப்போட்டு முதலீடுகளைக் கொட்டினர்.


இது தொடர்பாக அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தியும், பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் செய்து வந்தார். இவற்றின்மூலம் சமூகத்தில் தன்னை ஒரு பெரிய மனிதராக சித்தரித்துக் கொண்டார். இந்நிலையில், சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2017ல் மணிவண்ணன் நடத்தி வந்த நிறுவனத்தில் 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் மணிவண்ணன் உறுதி அளித்தபடி அந்தப் பெண்ணுக்கு இரட்டிப்பு மடங்கு தொகையோ, விற்பனை உரிமையோ வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.


காவல்துறை விசாரணையில் மணிவண்ணன் நிறுவனத்தில் மேலும் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து இருப்பதும் தெரிய வந்தது. சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவர் 2.82 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவரையும் ஏமாற்றி இருக்கிறார் மணிவண்ணன். குகை பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வரும் கார்த்திகேயன் என்பவர், 3.53 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அவரிடம் மணிவண்ணன் 120 நாள்களில் முதலீட்டைக் காட்டிலும் இரு மடங்கு பணம் தருவதாகவும், மாதந்தோறும் லாபத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதி அளித்து இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டு கார்த்திகேயன் நெருக்கடி கொடுக்கவே, மணிவண்ணன் கூலிப்படை கும்பலை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.
 

 Salem pays twice as much money  Husband and wife arrested


சேலம் 5 சாலை அருகே அச்சகம் நடத்தி வரும் ஒருவரிடம் தன்னுடைய நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனம் என்று கூறி, 34.60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதில் ஒருவழியாக போராடி, அந்த முதலீட்டாளர் 7 லட்சம் ரூபாயை வசூலித்து விட்ட நிலையில், 27.60 லட்சம் ரூபாயை மணிவண்ணன் கடைசி வரை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நூதன மோசடி எல்லாவற்றிலும் மணிவண்ணன் மட்டுமின்றி அவருடைய மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி மற்றும் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, மோசடி தம்பதியினரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (அக். 18) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், 13 செல்போன்கள், பிஎம்டபுள்யூ, ஹோண்டா ஜாஸ் ஆகிய இரு சொகுசு கார்கள், பத்து பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில போலி ஆவணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மணிவண்ணன் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 350 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முதலீடு செய்தவர்களில் சிலர், பணம் திரும்பக் கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளன. மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததும், நட்சத்திர ஹோட்டல்களில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.


சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், இதுபோன்ற போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளைக் கண்டு முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் குமார் (அன்னதானப்பட்டி), விஜயகுமாரி (மத்திய குற்றப்பிரிவு), சதீஸ் (கொடுங்குற்றப்பிரிவு), உதவி ஆணையர் சரவணன் (வடக்கு சரகம்) மற்றும் காவலர்களை ஆணையர் பாராட்டியுள்ளார்.


 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.