Skip to main content

சோறு போடறதெல்லாம் சரிதான்... சோசியல் டிஸ்டன்சிங் இல்லையே... சேலத்தில்தான் இந்தக் கூத்து!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

SALEM DISTRICT BJP PEOPLES FOOD LOCKDOWN CORONAVIRUS


சேலத்தில், பாஜக சார்பில் ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யும் முகாமில், மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் முண்டியடித்து நின்றதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குத் தற்போது வரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் மலேரியா பாதிப்புக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மாத்திரைகள், கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீள நல்ல பலன் தருவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாகப் பொதுவெளிகளில் ஒருவருக்கொருவர் மூன்று அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதும், தனித்திருத்தலும் அவசியம் என்கிறது சுகாதாரத்துறை.

இது ஒருபுறம் இருக்க, கரோனாவால் விளிம்பு நிலை மக்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் வேலை மற்றும் வருவாய் இழந்துள்ளதால், அன்றாட உணவும் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக வீடற்ற, சாலையோரவாசிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளும், தன்னார்வ அமைப்பினரும் இவர்களைத் தேடிச் சென்று இலவசமாக உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறனர். 
 

 

SALEM DISTRICT BJP PEOPLES FOOD LOCKDOWN CORONAVIRUS


சேலத்தில் பாஜகவினர், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏழை மக்களுக்கு நாள்தோறும் உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இதற்காக தினமும் 7 ஆயிரம் பேருக்கான உணவுப்பொட்டலங்களைத் தயார் செய்கின்றனர். தக்காளி சோறு, வெஜிடேபிள் பிரியாணி, நெய் சோறு எனப் பெரும்பாலும் கலவை வகையறாக்களே வழங்குகின்றனர். பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோயில் பகுதி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் வருகைக்காகவே மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் பாக்குமட்டை தட்டுகளில் உணவுப்பொருள்களை வழங்கி வந்தனர். பாக்குமட்டை தட்டுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்ததை அடுத்து, ஃபாயில் பைகளில் உணவுகளை வழங்குகின்றனர். இதில், ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமான தேசிய சேவா சமிதி இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, உணவுப்பொட்டலங்களை வழங்கினர். 
 

SALEM DISTRICT BJP PEOPLES FOOD LOCKDOWN CORONAVIRUS


இந்நிலையில், வியாழனன்று (ஏப். 30) சேலம் பொன்னம்மாபேட்டை கேட் அருகில் வீராணம் முதன்மைச் சாலையில் பாஜகவினர் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருத்தனர். பாஜகவினர் சிலர் அவர்களிடம், மற்றொரு பகுதியில் உணவு விநியோகம் நடந்து வருவதால், அங்குப் பணிகளை முடித்து விட்டு விரைவில் வந்து விடுவார்கள் எனக் கூறிக்கொண்டிருந்தனர். 

பின்னர் தண்ணீர்த் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகில் உணவுப் பொட்டலங்களுடன் பாஜகவினர் ஜீப் ஒன்று வருவதைப் பார்த்ததும் பலர் திவ்ய தரிசனம் கிடைத்துவிட்ட பரவசத்தில் 'ஹே... வண்டி வந்துடுச்சு... வண்டி வந்துடுச்சு...' என்று உரக்கக் கத்திக்கொண்டே, அதுவரை சாலையில் அங்கும் இங்கும் நின்றவர்கள்கூட வரிசையில் ஓடிச்சென்று நின்றனர். இதனால் வரிசையில் நிற்பவர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். பலர் முகக்கவசங்களையும் அணிந்திருக்கவில்லை. 
 

SALEM DISTRICT BJP PEOPLES FOOD LOCKDOWN CORONAVIRUS


ஆனால் ஜீப்பில் இருந்து இறங்கிய இளைஞர்களோ, 25- க்கும் குறைவான உணவுப்பொட்டலங்களை மட்டுமே கொண்டு வந்திருந்ததால் ஏழை மக்கள் பலரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அந்தப் பொட்டலங்களும் ஒரு நிமிடத்திற்குள் கொடுத்து முடிக்கப்பட அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். வரிசையில் வெயிலில் காத்துநின்ற மக்களும் காய்ந்த வயிறுடன் வீடு திரும்பினர். 

இதற்கிடையே, நாம் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், தலையில் சுமையுடன் நடந்து வந்த ஒரு மூதாட்டி கையை நீட்டியபடி 'சாப்பாடு...' என்று கேட்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. பின்னர் அவர்களில் ஒருவர் ஓடிச்சென்று யாரிடம் இருந்தோ ஒரே ஒரு பொட்டலம் மட்டும் வாங்கி வந்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து பசியாற்றினர். அதன்பிறகும் ஒரு மூதாட்டி கையில் தடி ஊன்றியபடி வந்து பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 

இயலாதோர்க்கும், இல்லாதோருக்கும் உணவளிப்பதில் தவறேதும் இல்லை. ஆனாலும், ஒரு மாதத்திற்கு மேலாக இந்தச் சேவையைத் தொடர்ந்து வரும் பாஜகவினர், போதிய எண்ணிக்கையில் உணவுப்பொட்டலங்களை கொண்டு வந்திருந்தால், பலர் பட்டினியுடன் திரும்பிச் செல்வதை தடுத்திருக்க முடியும். அவர்களுக்கு கொடுத்து பழக்கி விட்டார்கள். மக்களும் வாங்கிப் பழகிவிட்டனர்.
 

SALEM DISTRICT BJP PEOPLES FOOD LOCKDOWN CORONAVIRUS

 

இது ஒருபுறம் இருப்பினும், கடந்த சில நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த வித அறிகுறிகளும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இப்படியொரு அபாயமான சூழலில், சேலம் பொன்னம்மாபேட்டை மக்களோ சமூக விலகல் பற்றிய புரிதலோ அல்லது நோய்த்தொற்று குறித்த எச்சரிக்கை உணர்வோ இல்லாமல்தான் வரிசையில் ஒருவர் மீது ஒருவர் தொற்றிக்கொண்டு நின்றனர். இத்தனைக்கும் பாதுகாப்புக்கு வந்த காவலர் ஒருவர் கையில் லட்டியை வைத்துக்கொண்டு வெறுமனே நின்றாரே தவிர, சமூக விலகலுடன் மக்களை நிற்கும்படி வலியுறுத்தவோ அல்லது உணவு வழங்கும் பாஜகவினர் அவ்விதியைப் பின்பற்றவோ சொல்லவில்லை. 

இப்படியான சம்பவங்கள் ஒருநாள் இருநாள் அல்ல. பொன்னம்மாபேட்டை பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சமூக விலகலின்றிதான் மக்களும் உணவுப்பொட்டலத்தை வாங்கிச் செல்கின்றனர். உணவு விநியோகம் செய்வோரும் அவர்களை ஒழுங்குபடுத்துவதில்லை. அதேநேரம், இந்தச் சேவையை வழங்கி வரும் பாஜகவினர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வருகின்றனர்.
 

http://onelink.to/nknapp



இதுபற்றி பாஜகவின் சேலம் நகர மண்டலத் தலைவர் வினோத்திடம் கேட்டபோது, ''என்றைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்களோ அதற்கு அடுத்த நாளில் இருந்தே ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் பணிகளைத் தொடங்கி விட்டோம். ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் பேருக்கு இந்தச் சேவையை வழங்குகிறோம். உணவுப் பொட்டலம் வாங்க வரும் மக்களிடம் முகக்கவசம் அணியுமாறும், 3 அடி தூரத்தில் வரிசையில் நின்று உணவை வாங்கிச் செல்லும்படியும் சொல்லி வருகிறோம். ஆனாலும், மக்கள் காது கொடுத்துக் கேட்காமல் போனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? காவல்துறையினர் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. எங்கே உணவுப் பொட்டலம் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் அவர்கள் இப்படிக் கூட்டமாக நிற்கிறார்கள்,'' என்றார் அந்த இளைஞர். 

இறைச்சிக்கடையில் வாடிக்கையாளர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் போனால் உடனடியாக அந்தக் கடையைப் பூட்டி சீல் வைக்கும் மாநகராட்சி நிர்வாகம், இப்பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உணவளிக்கும் நோக்கத்தில் பழுதில்லை என்றாலும், உயிரா? வயிறா? என்ற போராட்டத்தில் வயிற்றுக்கே முன்னுரிமை கொடுப்பதால், ஒட்டுமொத்த சமூகமும் பெருந்துயரத்தை நோக்கிச்செல்லும் அபாயம் இருப்பதை மக்களும் உணர வேண்டும்.

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.