Skip to main content

சேலம் மாநகராட்சியில் காய்கறி கடை ஒதுக்கீட்டில் ஊழல்!

Published on 28/06/2020 | Edited on 28/06/2020

 

salem corporation market peoples token


'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்கிற சொலவடை யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தாமல் போகலாம்; ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சிக்கு ரொம்பவே பொருந்தும். அன்றாடம் தெருவோரம் கடை விரித்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கும் சாதாரண சாலையோர காய்கறி வியாபாரிகளிடம்கூட போலி ரசீது மூலம் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டியிருப்பதாக சேலம் மாநகராட்சி மீது புகார்கள் எழுந்துள்ளன.

 

கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், காலை 08.00 மணி வரை காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, சேலம் ஆற்றோரம் மற்றும் ஆனந்தா இறக்கம் பகுதிகளில் இயங்கி காய்கறி கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன. 

 

இதையடுத்து, அவர்களுக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்டோர் காய்கறி கடை வைத்திருந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெறும் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், இடம் கிடைக்காதவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இடம் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்களிடம் தலா 1500 முதல் 5000 ரூபாய் வரை அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

salem corporation market peoples token

இந்நிலையில்தான், காய்கறி கடைகள் வைக்க ஒப்பந்தம் விடாமலேயே, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குண்டர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறு காய்கறி கடைக்காரர்களிடம் ஏகத்துக்கும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அதுவும், கரோனா ஊரடங்கின் பெயரில் போலி ரசீது மூலம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் காய்கறி வியாபாரிகள்.

 

இதுபற்றி, சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் பேசினர். சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதி, பஜார் தெரு ஆகிய இடங்களில் காய்கறிகள், பழங்கள் என 384 சாலையோர வியாபாரிகள் கடை போட்டு வந்தோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த கடைகளை எல்லாம் ஒரே நாளில் தடாலடியாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. பிறகு, பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியபோது, 100 பேருக்கு மட்டுமே கடை வைக்க அனுமதித்தனர்.

 

அங்கே இடம் கிடைக்காத காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் இன்று இடம் ஒதுக்குவார்கள், நாளை ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அன்றாடம் மாநகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். ஜூன் மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள், அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல், மே மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை நடத்த அனுமதி பெற்றவர்களுக்கே புதிய இடத்திலும் கடை நடத்த இடம் ஒதுக்கியுள்ளனர்.

salem corporation market peoples token

ஆளுங்கட்சி என்ற செல்வாக்கு இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு காசு கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே வணிக வளாகத்தில் கடை போட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வணிக வளாக பகுதியில் அனுமதி இல்லாத இடத்தில் மொத்த வியாபாரிகளிடம் தலா 5000 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக கடை நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அம்மாபேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், முதன்மை அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்தும் பயனில்லை.

 

சாலையோர காய்கறி கடைக்காரர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனாலும், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சாலையோர காய்கறி வியாபாரிகளிடம் அன்றாடம் சுங்கம் வசூலிக்கிறது. ஊரடங்கு காலத்தில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம்  வசூலிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது. அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

 

அப்படித்தான் வசூலித்துவிட்டுப் போகட்டும் என்றாலும், அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரே சீரியல் நம்பர் கொண்ட ரசீதுகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை பல லட்ச ரூபாய்களை மாநகராட்சி நிர்வாகம் சுருட்டிவிட்டது. மாநகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத குண்டர்கள், தினமும் காலையில் காய்கறி வியாபாரிகளிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை சுங்கம் வசூலித்துள்ளனர். 

salem corporation market peoples token

சுங்கம் வசூலிக்கும் குண்டர்களுக்கும் மாநகராட்சிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதையெல்லாம் கேள்வி கேட்டால், கண்ணியக்குறைவாக பேசுகிறார்கள். இப்படி போலி ரசீது போட்டு கொள்ளை அடிக்கும் தொகையெல்லாம் யாருடைய கல்லாவை நிரப்புகிறது என்று தெரியவில்லை,'' என்கிறார்கள் சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்.

 

காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடைக்கு தலா 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. ஆனால், சரக்கு லாரியில் இருந்து சந்தைக்கு கொண்டு வந்து இறக்கப்படும்போது ஒரு பெட்டி தக்காளிக்கு 10 ரூபாய் இறக்குக் கூலியாகவும்,  அதை சில்லரை வியாபாரிகளின் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்வதற்கு கிரேடுக்கு 20 ரூபாயும், கடை நடத்த 60 முதல் 550 ரூபாய் வரையிலும் சுங்கம் வசூலி க்கின்றனர். சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் அமலில் இருந்தபோது குத்தகைதாரர்கள் எந்தளவு வசூலித்தார்களோ, அதைவிட பல மடங்கு கட்டணத்தை மாநகராட்சி  நிர்வாகம் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு வசூலித்து வருகிறது.

salem corporation market peoples token

இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ராம் மோகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''சார்... ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருவதால் இனி அங்கு காய்கறி கடைகள் நடத்த முடியாது. அவர்களுக்கு சேலம் முதல் அக்ரஹாரம்,  நீலாம்பாள் மருத்துவமனை இறக்கம், கோட்டை மாரியம்மன் கோயில் பின்பகுதிகளில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதற்கான சுங்கம் வசூலிக்கும் புதிய ஏல ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1- ஆம் தேதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது. இனிமேல் அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் இயங்கும். மற்றபடி, நான் இந்த சீட்டுக்கு புதுசுங்க சார். எத்தனை கடைகளுக்கு அனுமதி என்ற விவரங்களை நீங்கள் ஏஆர்ஓவை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

salem corporation market peoples token

இதையடுத்து நாம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலர் (ஏஆர்ஓ) செந்தில்முரளியிடம் தொடர்பு கொண்டோம். ''வணிக வளாகத்தில் காய்கறி கடை நடத்துவோரிடம் சுங்கம் வசூல் பணிகளை இன்னும் யாருக்கும் ஏலம் விடவில்லை. அதற்கான ஒப்பந்தம் ஜூலையில் இறுதி செய்யப்படும். ஏப்ரல் முதல் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம்தான் நேரடியாக சுங்கம் வசூலிக்கிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா டூட்டி இருப்பதால், சுங்கம் வசூலிக்கும் பணிகளை வெளி ஆள்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் நமக்கு 'சப்போர்ட்டிங்' ஆக இருக்கிறார்கள். 

 

சுங்கம் வசூலிப்பதற்காக ஒரே சீரியல் நம்பரில் பல ரசீது போடப்பட்டதாக காய்கறி கடைக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க சான்சே இல்லீங்க. அவர்கள் 'பில்டப்' செய்து பேசுவதுபோல் தெரிகிறது. அது ஒண்ணுமில்லீங்க சார்... மொத்தம் 400 காய்கறி கடைக்காரர்கள் இருக்கிறார்கள். புதிதாக இடம் ஒதுக்கியபோது  பலருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் இப்படி புகார் சொல்கிறார்கள்,'' என்கிறார் செந்தில் முரளி.

salem corporation market peoples token

ஏற்கனவே சேலம் மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டேண்டு, கடைகளை குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர்தான், காய்கறி கடைக்காரர்களிடம் அடாவடியாக சுங்கம் வசூலித்து வருவதாக பல தரப்பிலும் சொல்லப்படுகிறது. அவர் நினைத்தால்தான் யார் ஒருவருக்கும் குத்தகை கிடைக்கும் என்ற அளவுக்கு மாநகராட்சி ஆணையருடன் நெருக்கத்தை வளர்த்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவரைப் பற்றியோ மாநகராட்சி தரப்பில் ஒருவரும் பிடிகொடுத்து பேசவும் மறுக்கிறார்கள்.

 

''எங்க தாத்தா, எங்க அப்பா ஆகியோரும் தெருவில்தான் காய்கறி கடை போட்டார்கள். நானும் அதே தெருவில்தான் கடை நடத்தி வருகிறேன். இப்படி காலங்காலமாக கேர் ஆப் பிளாட்பார்மாக இருக்கும் நாங்கள், என் பையனையாவது படிக்க வைத்து உத்தியோகத்துக்கு அனுப்பணும்னு நினைக்கிறோம். இந்த காய்கறி கடையால ஏதோ அரை வயித்து கஞ்சிக்குதான் வருமானம் வரும். இப்போது கொரோனா என்ற பெயரில் எங்களை ஒவ்வொரு இடமாக மாநகராட்சி அதிகாரிகள் அலை க்கழிப்பதோடு, அடாவடியாக சுங்கம் வசூலித்து வயிற்றில் அடிக்கிறார்கள். இதெல்லாம் நியாயம்தானா?,'' எனக் கேட்கிறார் ஒரு காய்கறி கடைக்காரர்.

 

அவருடைய கேள்வி, மாநகராட்சி ஆணையரின் செவிகளில் விழுந்தால் நல்லது.

 

 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.