Skip to main content

பசுமை வழிச் சாலை போட வருகிறது ராணுவம்?

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
Salem Chennai Green Road


சென்னை முதல் சேலம் வரை 8 வழிப் பாதையாக பசுமை வழிச் சாலை அமைக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பசுமை வழிச்சாலைதான் தமிழகம் முழுக்க பேசப்படுகிறது. அச்சாலை அமைய உள்ள 5 மாவட்டங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோவக் கனலாக உள்ளார்கள். அதற்கு காரணம் அச்சாலைக்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள் மற்றும் விவசாய நிலங்கள்தான். தொடர்ந்து நாளுக்கு நாள் விவசாயிகள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் தங்கள் விளை நிலத்தை பறிபோக விடமாட்டோம் என தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்கள் நிலத்தில் படுத்து கண்ணீருடன் கதறுகிறார்கள். சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை ஊழியர்கள் பல இடங்களில் திரும்பி செல்கிறார்கள். அரசு காவல்துறையை விட்டு மக்களுக்கு நெருக்கடி கொடுக்க அதையும்மீறி கடும் எதிர்ப்புகள் பல இடங்களில் காவல்துறையும் திரும்பி போகிறது.

 

 

 

ஒட்டுமொத்தமாக நில அளவீடு சர்வே பணிகளை முழுமையாக முடிக்க முடியாது என்ற சூழலுக்கு மாநில அரசு வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பும், பொதுமக்களின் போராட்டங்களையும் உற்றுநோக்கிய மத்திய உளவுத்துறை மேலிடத்திற்கு சில அறிக்கைகளை அனுப்பியுள்ளது. அதில் சாலை அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டங்கள் வலுப்பெறும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றும், மாநில அரசின் காவல்துறை இதை சமாளிக்க முடியாது என்று அறிக்கை கொடுத்துள்ளது.
 

இதன் பின்னணியிலேயே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பயங்கரவாதிகள் பங்கு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை கண்டு கட்சிகள் அஞ்சுகிறது என்றும் தெரிவித்து வருகிறார். இதேபோல் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சமூக விரோதிகள் அரசு நல திட்டங்களை தடுக்க முயலுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

இந்த நிலையில்தான் மத்திய உள்துறையில் இருந்து மாநில அரசுக்கு ஒரு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த பசுமை வழிச் சாலையை மாநில அரசு நிறைவேற்றுமா, மக்களின் போராட்டங்களை எப்படி கட்டுப்படுத்தும், தமிழக காவல்துறை இதனை எப்படி சமாளிக்கும், சட்டம் ஒழுங்கை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும், இதற்கு ராணுவத்தின் உதவி தேவைப்படுமா, ராணுவ வீரர்கள் இந்த பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட வைக்கலாமா என்ற கேள்விகளை கேட்டுள்ளதாக தெரிகிறது. 

 

 

 

ஆனால் மாநில அரசு, ராணுவத்தின் மூலமாக இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எங்கள் அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை என்ற கேள்வி எழும். எதிர்க்கட்சிகள் இதையே பிரச்சாரமாக செய்வார்கள். ஆகவே ராணுவத்தை இறக்குவது ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தெரிகிறது. தொடர் கொந்தளிப்பாக பசுமை வழிச்சாலை இருந்து கொண்டே இருக்கிறது.