Skip to main content

பட்டியல் சமூக பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர்! முதல்வர் மாவட்டத்தில் பரவும் சாதீய வன்மம்!

Published on 30/04/2020 | Edited on 01/05/2020
am

                                                     அம்சவள்ளி                                    சதீஸ்குமார்


''ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன்!" பட்டியல் சமூக பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர்! முதல்வர் மாவட்டத்தில் பரவும் சாதிய வன்மம்!


சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள அத்திக்காட்டானூர் காட்டு வலவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38). தாரமங்கலம் ஒன்றிய திமுக துணை செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி (33). இவர், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த மோகன், சேலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவராகவும், டி.கோணகாபாடி ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மனைவி நிரஞ்சனா, இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்.

இதுவரை பொது தொகுதியாக இருந்து வந்த டி.கோணகாபாடி ஊராட்சி, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பட்டியல் சமூகத்திற்கான ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டது. அதையடுத்தே, வரலாற்றில் முதல்முறையாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த அம்சவள்ளி இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக வெற்றி பெற முடிந்திருக்கிறது.


அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்தே மோகன், அம்சவள்ளி - சதீஸ்குமார் தம்பதியிடம் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ள தொடங்கியிருக்கிறார். பலர் முன்னிலையிலும் சாதி பெயரை சொல்லி அழைப்பதும், ஆபாச சொற்களால் அர்ச்சனை செய்வதுமாக இருந்திருக்கிறார். 

இந்நிலையில்தான், அருகில் உள்ள இலங்கை அகதிகள் குடியிருப்புக்கு குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பான பணியின்போது, அம்சவள்ளியை பணிகளை செய்ய விடாமல் தடுத்ததோடு, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் எல்லாம் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அம்சவள்ளி கையெடுத்து கும்பிட்டபடி, காவல்துறை மோகன் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர் மல்க கூறிய காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் பரபரப்பை கூட்டியது.


அம்சவள்ளி நம்மிடம் விரிவாக பேசினார். 


''கடந்த 6.1.2020ம் தேதி நான் டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டேன். ஜன. 10ம் தேதி, என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்தேன். 5வது வார்டு உறுப்பினரான மோகன், எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாக என் சாதி பெயரைக் குறிப்பிட்டு, ஆபாசமாக திட்டியும் சீட்டில் உட்காரக் கூடாது, எழுந்துருடி என்றும் மிரட்டினார். அந்த இருக்கை, அதற்கு முன்பு அவருடைய மனைவி நிரஞ்சனா தலைவராக இருந்தபோது உட்கார்ந்ததாம். அதனால் அதில் பிற சாதிக்காரர்கள் அமரக் கூடாது என்று கத்தினார். 

மோகன் தரக்குறைவாக திட்டியதால் நான் அழுதுகொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். மறுபடியும், பஞ்சாயத்து ஆபீஸ் பக்கம் வந்தால் குடும்பத்தோட கொளுத்திடுவேன்னு மிரட்டினார். ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன். கரோனா வந்துட்டதால தப்பிச்சிட்டீங்கனு கொலை மிரட்டல் விடுத்தார். 


எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் குடியிருப்பில் குடிநீர் பிரச்சனை இருப்பதால், அதற்காக புதிதாக குடிநீர் குழாய் பதிக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஏப். 22ம் தேதியன்று, மோகனுக்கு சொந்தமான தேங்காய் நார் மில் அருகில் இருந்து குழாய் பதிக்கும் பணிகளுக்காக ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டர் முனியன் ஆகியோருடன் நானும் கணவரும் சென்றிருந்தோம். அங்கு வந்த மோகன், எங்களை மேற்கொண்டு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததோடு, மீண்டும் என்னையும், கணவரையும் சாதி பெயரை சொல்லியும், ஆபாசமாகவும் திட்டினார். அப்போது தாரமங்கலம் போலீஸ்காரர் ஒருவரும் அங்கே இருந்தார். ஆனால் அவர் எதையும் கண்டுக்கவே இல்லை. அதன்பிறகுதான் மோகன் மீது ஏப். 23ம் தேதி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்,'' என்றார் அம்சவள்ளி.

அம்சவள்ளியின் கணவர் அளித்த புகாரின்பேரில், மோகன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளில் தாரமங்கலம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த எப்ஐஆர், அன்று இரவு 8 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாள் இரவு 8.45 மணிக்கு, ஏளங்காடு காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மோகனின் ஆதரவாளரும், அதிமுகவை சேர்ந்தவருமான தனபால் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அதன்பேரில், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் துணைத்தலைவரான பிரபு மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. 


இது தொடர்பாக அம்சவள்ளியின் கணவர் சதீஸ்குமார் பேசினார்.


''தனபால் என்பவர் அத்திக்காட்டானூர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இருக்கிறார். அவரும் எங்கள் சாதியை சேர்ந்தவர்தான். ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கினர். அப்போது தனபால் உள்ளிட்ட அதிமுகவினர் நிவாரண நிதி வழங்கியபோது, எங்கள் ஊராட்சியின் துணைத்தலைவர் பிரபுவும், நானும் சேர்ந்து கொண்டு தனபாலை தாக்கியதாகவும், அவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் பொய்யான புகார் அளித்திருக்கிறார். பிரபு என் நண்பர் என்பதால், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால், அவருக்காக நான் மோகன் மீதான புகாரை வாபஸ் பெற்று விடுவேன் என்று கருதி மோகனின் தூண்டுதலால் இவ்வாறு புகார் அளித்துள்ளார். 

நான் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவனோ, அராஜகம் செய்பவனோ இல்லீங்க. ஊருக்குள் இப்போதும் அடங்கி ஒடுங்கித்தான் இருக்கிறோம். அம்பேத்கர், பெரியார், கலைஞர் எல்லாம் எங்கள் சமூகம் மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தனர். அதன்மூலம்தான் என் மனைவி பஞ்சாயத்து தலைவரானாரே தவிர, பொதுத்தொகுதியில் போட்டியிட்டு யாருடைய கவுரவத்தையும் இழக்கச் செய்யவில்லை.


மோகன் என்ற ஆதிக்க மனப்பான்மையுள்ள ஆளிடம் சிக்கிக்கொண்டு என் குடும்பமே சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. என் குடும்பம் மட்டுமின்றி, அவரைப் பார்த்தாலே எங்க ஊரு பொம்பளைங்க அப்படியே மூத்திரம் போய்டுவாங்க. அந்தளவுக்கு மிரட்டி வெச்சிருக்காரு. நாளைக்கு ஏதாவது அரசாங்க உதவிகிதவி கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் அவருக்கு எதிராக யாரும் புகார் கொடுப்பதில்லை. இந்த ஊரே அடங்கிக் கிடக்கும்போது, நான் மட்டும் தேர்தலில் ஜெயிச்சிட்டேன்கிற வன்மத்தினால்தான் மோகன் அப்படி நடந்து கொள்கிறார். அவருக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் என் மனைவிக்கு எதிராக மோகன், அவருடைய தோட்டத்தில் வேலை செய்து வரும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பேபி என்பவரை நிறுத்தினார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதன்பிறகு துணைத்தலைவர் பதவிக்கு மோகனே நேரடியாக போட்டியிட்டும்கூட வெற்றி பெற முடியவில்லை. எங்கள் நண்பர் பிரபு துணைத்தலைவராக ஆனார். 

இந்த ஊரில் உள்ள அவர்கள் சமூகத்தை சேர்ந்த மற்றவர்கள் நல்லாதான் பழகுறாங்க சார். அந்த சமூகத்தில் மோகன் ஒருவர்தான் தப்பானவர். இவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது சொந்தக்காரர் என்று சொல்லி அதிகாரிகளையும் மிரட்டி வருகிறார். மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அவரிடம் அடங்கிக் கிடக்கின்றனர். எங்கள் குடும்பத்திற்கு மோகனால் அச்சுறுத்தல் இருக்கிறது. எங்கள் புகாரில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்,'' என்கிறார் சதீஸ்குமார்.

இது ஒருபுறம் இருக்க, ஓராண்டுக்கு முன்பு தாரமங்கலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் பெண் ஊழியர் ஒருவரை, போலீசார் முன்னிலையிலேயே மோகன் ஒருமையில் ஆபாசமாக திட்டித்தீர்க்கும் காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

  amjjj

                                                                      மோகன்


இப்பிரச்சனை தொடர்பாக மோகனிடம் விளக்கம் கேட்டோம். ''நான் யாரையும் சாதி பெயரை சொல்லி திட்டவில்லை. பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு அம்சவள்ளியும், அவருடைய கணவரும் போலி பில் போட்டு ஊழல் செய்கின்றனர். அவர்கள் ஊழல் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருப்பதால், என் மீது கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஒரு புகாரை ஜோடித்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் போலீசார் எப்படி எப்ஐஆர் போட்டார்கள் என்று தெரியவில்லை. மேலும், அகதிகள் குடியிருப்பு பகுதி எங்கள் பஞ்சாயத்து எல்லைக்குள் வராது. அங்கே குடிநீர் குழாய் பதிப்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்? எங்களிடையே நேரடி மோட்டிவ் எதுவும் இல்லை. அதனால் அரசியல் பழிவாங்கல் இருக்கலாம் என நினைக்கிறேன்,'' என்றார் மோகன்.


  am

                                                                  டிஎஸ்பி பாஸ்கரன்


இது தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரனிடம் கேட்டதற்கு, ''இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மேலும் சில  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவர்களிடம் வலுவான ஆதாரங்கள் இதுவரை எதுவும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


கடந்த பிப்ரவரி மாதம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதேபோல், கடந்த 2015ல், திருமலைகிரி சைலகிரீஸ்வர் கோயில் வழிபாட்டின்போதும் குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு திருமலைகிரி, சிவதாபுரம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது.


  amhhh


சில மாதங்களுக்கு முன்பு, மோகனின் மகள் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆசீர்வதித்துச் சென்றார். அதனால் காவல்துறை அவர் மீது மென்மையை கடைப்பிடிக்கிறதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்கிடையே, பெண் ஊராட்சி மன்றத் தலைவி மீதான சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக, ஆதித்தமிழர் பேரவை கடும் கண்டனங்களையும் பதிவு செய்திருக்கின்றன.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாதத்தில் நான்கு நாட்கள் சொந்த ஊர் வந்து சென்றாலும், இந்த மண்ணிலிருந்து எந்தவித சமூக அவலங்களும் களையப்படவே இல்லை. ஆனாலும் கட்சியினர் அவரை மண்ணின் மைந்தர் என்று மேடைக்கு மேடை முழங்குவது ஆகப்பெரும் நகைமுரண். சேலத்தில் சாதிய மோதல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பு காவல்துறையை முடுக்கி விடுவது, அத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் கடமையும்கூட.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.