ADVERTISEMENT

மாணவர்கள் பாதுகாப்பான பயணம்.. பேருந்தின் பின்னால் சென்று கண்காணிக்கும் பள்ளி தலைமையாசிரியர்

07:46 PM Aug 01, 2018 | bagathsingh



பேருந்துகளில் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் போது படிக்கட்டு பயணங்களையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைவிட அவர்கள் செல்ல ஒற்றை பேருந்துகளே இயக்கடுவதால் அப்படி பயணிக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவன் தள்ளாடிய அரசு நகரப் பேருந்தில் படிக்கட்டில் 20 பேரோடு நின்று கொண்டு பயணம் செய்தான். ஒரு பள்ளத்தில் பேருந்து இறங்கி ஏறிய போது படிக்கட்டின் கீழே கால் மாட்டிக் கொண்டு கால் முறிந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். அதன் பிறகாவது எங்கள் ஊருக்கு கூடுதல் பேருந்தை இயக்குங்கள் பாதுகாப்பான பயணம் செய்கிறோம் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டும் இன்று வரை கூடுதல் பேருந்து இயக்கவில்லை. அதனால் அந்த ஆபத்தான பயணத்தை தான் செய்யது பள்ளிக்கும் வீட்டுக்கும் சென்று வருகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் இந்த நிலையில் தான் ஒரு பள்ளி ஆசிரியர் தங்கள் பள்ளி மாணவர்களின் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஏறும் பள்ளிப் பேருந்துக்கு பின்னாலேயே பயணம் செய்து மாணவர்கள் இறங்கும் வரை ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று கவனித்து அழைத்துச் செல்கிறார். அதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

அப்படி ஒரு பள்ளி எங்கே உள்ளது? என்ற கேள்வி எழுகிறதா?

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் தான். தன்னுடைய பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பான ஒழுக்கத்துடன் கூடிய பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக தினமும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு காலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்து விடுகிறார்.

அப்படியே பேருந்தின் பின்புறம் தனது வாகனத்தில் வந்து கொண்டு ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் கீழப்பழுவஞ்சி, மேலப்பழுவஞ்சி, பெருமாநாடு, புல்வயலில் நின்று தனது மாணவர்களை கண்காணித்து கொண்டு பள்ளி வரை வருகிறார்.


இது குறித்து தலைமையாசிரியர் ஜெயராஜ், நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் இந்நாள் வரை மாணவர் நலனில் அக்கறை செலுத்துவது என் வழக்கம். அதுவும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருகை, மாலையில் பள்ளி முடிந்தவுடன் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லுதல் என்பதில் தெளிவாக இருப்பேன். 2015 ஆம் ஆண்டில் இருந்து இப்பள்ளியின் தலைமையாசிரியராக நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறேன். வயலோகம் பள்ளிக்கு சுற்று வட்டார பகுதி மாணவர்கள் படிக்க வருவதால் கூடுதலாக பேருந்து வசதி அதிகமாக தேவைப்படுகிறது.

ஆனால் புதுக்கோட்டையில் இருந்து வயலோகம் வரை பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் கூட்டம் அதிகம். ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மாணவ, மாணவிகள் தனியாக வரிசையாக நின்று ஏறுகிறார்கள். காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். மாலையில் சிறப்பு வகுப்புகள் முடிந்தவுடன் மாணவிகள் மட்டும் 6 மணிக்கு வயலோகம் வரும் 5 ஆம் எண் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். மாணவர்கள் 6.10 மணிக்கு வயலோகம் வரும் 12 A பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். மாணவிகளுக்கு போக்குவரத்தில் பாதுகாப்பு மற்றும் முழு ஒழுக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

காலையில் எப்படி பேருந்தில் பின்புறம் வந்து மாணவர்களை கண்காணிக்கிறேனோ அதே போல மாலையிலும் மாணவர்களை பஸ் ஏற்றிவிட்டு பேருந்தின் பின்புறம் கண்காணிப்பதே எனது வாடிக்கை. காலையில் 5 ஆம் எண் பேருந்தில் பயணம் செய்யும் ஏறத்தாழ 150 மாணவ, மாணவியர்கள் மாலையில் 100 மாணவிகள், மாணவர்கள் 50 பேர் என தனித்தனியாக பிரித்து அனுப்புவதால் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யமாட்டார்கள்.

ஆபத்தான பயணம் தவிர்க்கப் பட்டு முழுவதும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு வகுப்பு உள்ளவர்கள் 10,11,12 வகுப்பு மாணவர்கள் காலையில் 5 ஆம் எண் பேருந்தில் ஏறி 8.40 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுவார்கள். அதன் பின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனியார் பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்து விடுவார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் எங்கள் பள்ளியில் மாலை நேர வகுப்பானது 4.30 முதல் 5.30 வரை 10, 11, 12 வகுப்புகளுக்கு நடைபெறும் அந்நேரம் 6 முதல் 9 வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கையான எழில் நிறைந்த அடர்ந்த மரங்களுடன் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற சூழ்நிலையுடன் இப் பள்ளி அமைந்துள்ளது.

பள்ளி நுழைவு வாயில் முதல் அனைத்து வகுப்பறைகளுக்கு முன்னும் அழகுச் செடிகள் மாணவர்களுக்கு வழங்கி அவர்களால் பராமரிக்கப் பட்டு வருகிறது. பசுமைப் படை,ஜீனியர் ரெட்கிராஸ்,சாரண சாரணியக்கம் நாட்டு நலப் பணிதிட்டம் என பள்ளி இணைச்செயல்பாடுகளுடன் மாணவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 9, 11 வகுப்பு மாணவர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, சுற்றுச் சூழலை பராமரித்து வருகின்ளனர்.

பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை சேரும் குப்பைகளை மட்கும் குப்பை ,மட்கா குட்பை என பிரித்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். உள்கட்டமைப்பை பொறுத்தவரை அனைத்து வகுப்புகளுக்கும் மின்விசிறி, மின்சார பல்பு பொருத்தியுள்ளோம். மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் விளையாட்டில் தனி கவனம் செலுத்த ஏற்பாடு செய்து தருகிறோம்.. அதன் விளைவாக 2016-17 கல்வி ஆண்டில் 400 மீட்டர் ,800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் இரண்டாம் பிடித்து தேசிய அளவிலான போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதே போல 2017-18 கல்வி ஆண்டில் நீச்சல் போட்டி, டேக் வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தும்,கபாடி போட்டியில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிறந்த நாள் பரிசு புத்தகங்கள்..

ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக 1500 புத்தகங்கள் கொண்ட நூலகம் செயலபட்டு வருகிறது இப்புத்தகம் அனைத்தும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் என ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளன்று பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியவை ஆகும். மேலும் 7,8 படிக்கும் மாணவர்கள் தினமும் மாணவர்களின் சைக்கிள் (இருசக்கர வாகனத்தை) வரிசையாக நிறுத்தி ஒழுங்குபடுத்துகிறார்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது...மாணவர் நலனில் அக்கறை கொண்டு வெளி ஆட்கள் பள்ளி வளாகத்தில் வருவதை தடுக்கும் விதமாகவும் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதியும் கண்காணிப்பு கேமராக்கள் 8 தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொருத்தப் பட்டுள்ளது.. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது மூலம் தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டே பள்ளியில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை கண்காணிக்க முடிகிறது.


இங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒவ்வொருவரும் புராஜெக்ட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள்..ஒரு சில ஆசிரியர்கள் தன் சொந த செலவில் புராஜெக்ட் டர் வாங்கி வைத்துக் கொண்டும் பாடம் நடத்தி வருகிறார்கள் ..இதனால் ஆர்வத்துடன் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.6 முதல் 9 வரை பயிலும் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தமிழாசிரியை அன்னமரியாள்,உமா ஆகியோர் காலை,மாலை என இரு வேளைகளில் சிறப்பு வகுப்பு எடுத்து வாசிப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

மேலும் 2017-2018 கல்வி ஆண்டில் (அன்னவாசல்- இலுப்பூர்- விராலிமலை) குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் எம் பள்ளியில் நடைபெறும் அளவில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய மைதானம் உடையது இப்பள்ளி். மாநிலத்திலேயே முன் மாதிரியாக அனைத்து வசதிகளுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ. 1.5 கோடி மதிப்பில் பள்ளி வளாகத்தினுள் மாணவர் விடுதி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தாண்டு சுற்றுச் சுவர் கட்ட 400 மீட்டருக்கு திட்ட மதிப்பீடு ரூ.4 இலட்சமும் பள்ளி நுழைவு வாயிலில் இருந்து தலைமை ஆசிரியர் அறை வரை பேவர் பிளாக் பதிக்க ரூ 6 இலட்சம் என திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காவூதீன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் இராஜேந்திரன் அவர களால் பொதுக்குழு கூட்டப்பட்டு ரூ.10 இலட்சத்திற்கான திட்டத்திற்கான நிதியினை பெற்றோர் மற்றும் பொதுமக்களால் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைக்கு ஜீன் மாதம் முதல் செயல்வடிவம் கொடுக்கப் பட்டு வருகிறது.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் டாக்டர் அழகேசன் தன்னுடைய தாய் தந்தையர் பெயரில் ஏற்கனவே 2 இலட்சம் மதிப்பில் கட்டிய கலையரங்கத்திற்கு ரூ. 1 இலட்சம் மதிப்பில் சென்ற ஆண்டில் மேற்கூரை அமைத்து கொடுத்துள்ளார்..இப் பள்ளியின் தேர்ச்சியும் சதவீதம் அதிகரிக்க இப்பள்ளி ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள்.

கிராமப் புற பகுதியான எம் பள்ளியில் பயின்று 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அகிலன் வேல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இலவசமாக பயில புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஒருவனாக அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளான். இப் பள்ளிக்கு பணிக்கு வந்த புதிதில் 620 மாணவர்களோடு செயல்பட்டு வந்த இப்பள்ளியை தற்பொழுது 750 மாணவர்கள் பயின்று வரும் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கையை அதிகரித்து உள்ளார்கள் இப்பள்ளி ஆசிரியர்கள்.

முன்னாள் தலைமை ஆசிரியரின் மகன் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கு ரூ. 15000 பரிசு வருடம் சென்ற வருடம் முதல் வழங்க இருப்பதாக கூறியுள்ளார். நான் கிராமப் புற பகுதியில் இருந்து படித்து வந்ததால் மாணவர்கள் நலன் கருதி காலையில் 8.30 மணிக்கு பள்ளி வரும் என்னை மாலை 6.30 மணி வரை ஞாயிற்று கிழமை தவிர அனைத்து நாட்களிலும் பள்ளியில் காணலாம்.

தன்னுடைய 22 ஆண்டுகால பணிக்காலத்தில் மத விடுப்பு இதுவரை ஒரு நாள் கூட எடுக்கவில்லை. இதற்கு அடிப்படை காரணம் தான் பயின்ற மதுரை மாவட்டம் தே.கல்லுபட்டியில் உள்ள காந்தி நிகேதன் மேல்நிலை பள்ளியே என்றவர், கிராமப்புற மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் சுகாதரத்துடன் கூடிய பாதுகாப்பான கல்வியை கற்றுத்தருவதே இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நோக்கம் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT