Skip to main content

ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்த சபரீசன்!

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Sabareesan in erode by election

 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் களம் அனலாய் மாறியுள்ளது.

 

தி.மு.க. அணியில் வாக்கு கேட்க செல்ல ஒரு வீதிக்கு 200 பேர் என்ற அளவில் ஒரு வார்டுக்கு ஏறக்குறைய 1000 பேர், ஒருவருக்கு 500 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. திரும்பத் திரும்ப ஒருவரையே வைத்துக்கொள்ளாமல் சுழற்சி முறையில் அதே வார்டிலுள்ள மற்றவர்களையும் தி.மு.க. அணி பயன்படுத்திவருகிறது. இதே பார்முலாவை கடைப்பிடித்துள்ள அ.தி.மு.க. ரூபாய் 500-க்கு பதிலாக 700 ரூபாய் வழங்கிவருகிறது. இதோடு சிக்கன் பிரியாணியும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர் சப்ளையும் நடக்கிறது.

 

இதனால் அ.தி.மு.க. தரப்பு சற்று உற்சாகத்தோடு வீதிகளில் வருகிறது. தி.மு.க. அணியில் சில பகுதிகளில் பணம் மட்டும்தான் தருகிறார்கள். டீ, காபி, சாப்பாடு தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வருகிறது. 

 

அ.தி.மு.க. வலுவாகக் காணப்படும் வீரப்பன்சத்திரம் பகுதிதான் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீதிகள்கொண்ட அந்த பகுதியில் முழுக்க விசைத்தறி தினசரி கூலித் தொழிலாளர்கள் அதிகம். இங்கு காலை ஆறு மணி முதலே வாக்கு கேட்கச் சென்றுவிடுகிறார் செந்தில்பாலாஜி. ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள பெண்களுக்கு புதிய புடவைகள், பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கப்படுகிறது. ஏறக்குறைய 20 ஆயிரம் வாக்குகள் கொண்ட அந்த பகுதியை முழுக்க கவர்செய்ய அமைச்சர்கள் தொடர்ந்து வேகம்காட்டுகிறார்கள்.

 

அ.தி.மு.க. தரப்பில் முதலில் பத்து மாஜிக்கள் தலா ரூ10 கோடி என 100 கோடியும் எடப்பாடி தனியாக நூறு கோடி என 200 கோடி ரூபாய் த.மா.க. இளைஞரணித் தலைவர் யுவராஜின் வில்லரசம்பட்டியிலுள்ள அவரது கெஸ்ட் ஹவுஸில் வைக்கப்பட்டு அங்கிருந்து பண விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது. 200 கோடி போதாது என்ற தகவல் எடப்பாடிக்கு எட்ட 12-ஆம் தேதி மாலை ஈரோடு வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்னும் எத்தனை நூறு கோடி செலவானாலும் பரவாயில்லை. நாம் இங்கு ஏற்கனவே வாங்கிய வாக்குகள் 56 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறவேண்டும். வெற்றி தோல்வியைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை என அ.தி.மு.க. மாஜிக்களிடம் கூறியிருக்கிறார்.

 

தொடர்ந்து ஐந்து நாட்கள் பிரச்சாரத்தில் பா.ஜ.க. அண்ணாமலையோடு சேர்ந்து ஒரு இடத்திலும் நான் பிரச்சாரம் செய்யமாட்டேன் என எடப்பாடி அறிவித்திருக்கிறார். அண்ணாமலையோடு ஓ.பி.எஸ். அணி பிரச்சாரம் செய்வதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்தத் தொகுதியிலுள்ள 238 வாக்குச்சாவடிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்டவை பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் இவற்றில் மத்திய போலீஸ் படையின் கவனம் அழுந்தப்பதிந்துள்ளது.

 

குக்கர் சின்னம் சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவருக்கும், டார்ச் லைட் சின்னம் வேலுமணி என்பவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இருவரும் தங்களுக்கு எப்படியும் 10 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் விழும் என எதிர்பார்க்கிறார்கள். தே.மு.தி.க. பிரச்சாரத்திற்கு பிரேமலதாவும், விஜயகாந்தின் மகனும் இறங்குகிறார்கள். அதேபோல் நாம் தமிழர் சீமான் தொடர்ந்து ஒரு வாரம் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

 

தி.மு.க. கூட்டணிக்கு வலிமைசேர்க்கும் விதமாக மூன்று நாட்கள் நடிகர் கமலஹாசன் பிரச்சாரத்தில் இறங்குகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, முதல்வர் மு.க. ஸ்டாலின் என ஈரோட்டின் அரசியல் மேடை தமிழகத்தின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது.

 

Sabareesan in erode by election

 

இந்த வரிசையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நேரடியாகக் களமிறங்கி இருக்கிறார். கடந்த பிப்ரவரி 9, 10 இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்ட அவர், 20-க்கும் மேற்பட்ட அமைப்பினரை அழைத்து அவர்களின் தேவைகளை, அரசு செய்யவேண்டியதைக் கேட்டறிந்து நிச்சயமாக அதை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். சபரீசனின் இரண்டு நாள் பயணம் தி.மு.க. அணிக்கு மேலும் பலம்சேர்த்திருக்கிறது.

 

ஈரோடு கிழக்குக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்காக பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர் வைத்தனர். அன்று மாலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என நான்காவது ஆக ப்ளக்சை மாற்றினார்கள். இந்த நான்கு பேனர்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம்பெற்றிருந்தன.

 

இந்த நிலையில் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் மாற்றிவைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சியின் வெற்றி வேட்பாளர் என பிரதமர் மோடியின் பெரிய படமும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சிறிய படமும் இணைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்துவிட்டு, ஆறாவதாக என்ன மாற்றம் செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை என ர.ர.க்களே கிண்டல் செய்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.