Skip to main content

ஆர்.எஸ்.எஸ். போட்ட ஸ்கெட்ச்! அடிச்சு தூக்கிய திருச்சி போலீஸ்! 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

RSS tried to enter in police department trichy on high

 

‘ரமணா’ பட பாணியில் தமிழக காவல்துறையில் அரங்கேறிய ஒரு சம்பவத்தை அசால்ட்டாக கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே களையெடுத்துள்ளது திருச்சி காவல்துறை.

 

காவல்துறையில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். மற்ற அரசுத் துறைகளைப்போல அல்லாமல், பொதுமக்களின் அச்சமற்ற வாழ்க்கைக்கு அச்சாணியாக விளங்கும் காவல்துறையில் சங்கம் அமைத்து செயல்பட நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது. மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட திருச்சி நகர காவல்துறையில் கடைநிலைக் காவலராக பணியாற்றுபவர் ஜார்ஜ் வில்லியம். பொதுமக்களைப் பாதுகாக்கும் காவல்துறையில் பணியாற்றும் பலரும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக டெபுடேசனில் பணியமர்த்தப்படுவதுண்டு. அப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டார் ஜார்ஜ் வில்லியம்ஸ். அப்போதே அரசியல் நோக்கில் ஆசைவார்த்தை காட்டி அவரது மூளையை சிலர் சலவை செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து ரெகுலர் டூட்டிக்குத் திரும்பிய அவர், சமீபத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் கலந்துகொண்டு அதில் தோல்வியைத் தழுவினார்.

 

அதன்பிறகு, அவர் செய்த சில காரியங்கள்தான், ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என இருந்த நேர்மையான காவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பல கட்டங்களாக நடந்த எஸ்.ஐ. தேர்வில் பொதுமக்களோடு சேர்ந்து தற்போது காவல்துறையில் பணியாற்றும் பலரும் தேர்வு எழுதினார்கள். அதில், தகுதியான பலரும் தேர்வாகி தற்போது பயிற்சியில் இருக்கும் நிலையில், ‘அந்தத் தேர்வே முறையாக நடத்தப்படவில்லை’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தோல்வியடைந்த யாரோ சிலர்தான் இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள்’ என அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது காவல்துறை.

 

ஆனால், அதன் தொடர்ச்சியாக காவலர் சமூகத்தில் நடக்கும் பொதுவான சில விசயங்களும் பூதாகரமாக்கப்பட்டு வெளியில் கசியவே, நேர்மையான காவலர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்தான், ‘அந்தக் குழப்பத்திற்கான ஆணி வேரே காவலர் ஜார்ஜ் வில்லியம்ஸ்தான்’ என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறையினர்.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது “குறிப்பிட்ட அந்த பா.ஜ.க. முக்கிய பிரமுகரிடம் ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்றிய போது அக்கட்சியின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர், காவல் துறையில் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் சில தகவல்களையும், உயரதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகளையும் கண்டறிந்து, அவற்றை தங்களுக்கு ‘பாஸ்’ செய்யச்சொல்லி அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட, பயிற்சிப்பாசறை போலவே நடந்த அவர்களின் ரகசிய ட்ரைனிங்கில் கலந்து கொண்ட அவருக்கு சில அசைன் மெண்டுகளும் தரப்பட்டனவாம்.

 

அதன்படி, காவல்துறையில் தன்னைப் போலவே வெறுப்பு மனநிலை கொண்டவர்களையும், பணிச்சுமை காரணமாக விரக்தியில் உள்ளவர்களையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி கண்டறிந்து, அவர்கள் மூலமாக உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையில் சர்வசாதாரணமாக பின்பற்றப்படும் நடைமுறைகளையும் பெரிதுபடுத்தி, அவற்றை சமூக வலைத்தளத்தின் மூலம் பரப்புவதுதான் அவருக்கு அளிக்கப்பட்ட அசைன்மெண்ட்.

 

அதன்படி, ‘காவலர் புரட்சி’என்ற பெயரில் ‘ஃபேக் ஐடி’ மூலம் முகநூல் கணக்கு ஒன்றைத் துவங்கிய அவர், அதைப் பயன்படுத்தி பல்வேறு ஃபேக் ஐடிக்கள் மூலம் காவல்துறையினரின் ஆபத்பாந்தவனாகவும், ‘ரமணா’பட ஹீரோ போலவும் தன்னைக் காட்டிக்கொண்டு, அதில் பல்வேறு மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் ஆர்டர்லிகளாக பணியாற்றும் பலருக்கும் தூண்டில் போட்டதாகவும், அதில் ஏமாந்து சிக்கிக்கொண்டவர்கள் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழு அமைத்து, கிட்டத்தட்ட காவலர்களுக்கான நலச்சங்கம் போலவே செயல்பட்டு, தங்கள் பிரிவுகளில் அல்லது தாங்கள் பணியாற்றும் இடங்களில் நடக்கும் குறைகளை அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த ஃபேக் ஐடிக்களை நிர்வகிப்பதற்கும், அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று தங்கள் தலைமைக்கு பாஸ் செய்வதற்கும் என பா.ஜ.க.வின் ஐ.டி. விங்கிலுள்ள எக்ஸ்பீரியன்ஸான சிலர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

 

ஏற்கெனவே, தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் காவல்துறையில் நிர்வாக ரீதியாக நடந்து வரும் சில விசயங்களை உண்மைக்குப் புறம்பாகப் பெரிதுபடுத்தி காவல்துறையினர் மத்தியில் வெறுப்பை விதைப்பதையும், பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு உள்ள நல்ல பெயரைக் கெடுப்பதையும், அதன் மூலமாக ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அந்த ஆர்.எஸ். எஸ். நபர்களின் பின்னணி தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாங்கள் பணியாற்றும் துறைக்கே துரோகம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீசார், ‘இத்தனை குளறுபடிகளுக்கும் மூலகாரணமே அங்கு பணியாற்றும் ஜார்ஜ் வில்லியம்ஸ்தான்’ என்பதையும், ‘இந்த விசயத்தில் அவருக்கு தோளோடு தோள் நின்றது திருச்சி மாவட்ட சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மதன் என்ற காவலர்’ என்பதையும் கண்டறிந்து, அதுபற்றிய அறிக்கையை தங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

 

காவல்துறையில் நடந்துள்ள இவ்விசயம் அரசல் புரசலாக கசிந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அறிவதற்காக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியிடம் பேசினோம். “கேள்விப்பட்ட விசயங்கள் உண்மைதான்” எனக்கூறிய அவர், “காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி, கடமைகளை மறந்த அந்தக் காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

 

விரைவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல நூறு போலீசார் மீது நடவடிக்கை பாயலாம் என பரவி வரும் தகவல்களால் உச்சக்கட்ட பரபரப்பிலிருக்கிறது தமிழக காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.