Skip to main content

"இந்த நூறு வருடத்தில் பிளவை சந்திக்காத ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ்... அதற்கு காரணம்.." - இடும்பாவனம் கார்த்திக்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

kl;

 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இந்து மதம் தொடர்பாக ஆ.ராசா பேசியது மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்த இருக்கும் பேரணி தொடர்பான செய்திகள் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆ.ராசாவுக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுஸ்மிருதியில் காட்டப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை ஆ.ராசா பொதுக்கூட்ட மேடையில் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அளவில் கடுமையான எதிர்வினைகளை பாஜக தரப்பு செய்துவருகிறார்கள். ஆனால் ஆ.ராசா குறித்து பேசிய உங்கள் தலைவர் சீமான், அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வது, அவரின் திடீர் ஆதரவு என்பது ஆ.ராசாவின் கருத்து மட்டும்தானா? இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?

 

ஆ.ராசாவின் கருத்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்கிறார்கள். மனுஸ்மிருதியில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்பட்டதா இல்லையா? தற்போது என்ன சொல்கிறார்கள், மனுஸ்மிருதி தற்போது நடைமுறையில் இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் சில இடங்களில் இடதுசாரி தோழர்கள் மனுஸ்மிருதியை கொளுத்தும் போராட்டத்தை நடத்தும் போது எதற்காக பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். நடைமுறையில் இல்லாத ஒன்றை எதிர்த்து எதற்காக பாஜக போராடுகிறது. இவர்கள் மனுதர்ம ஆட்சி நடத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணம் அதுதான் என்பதைப் பலமுறை அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அரசியலமைப்பை விட இவர்கள் இந்த முறையிலான ஆட்சி நடத்தவே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வெளியில்  கூறுவது ஜனநாயக ஆட்சி என்பார்கள். நடைமுறையில் அவர்களின் செயல்பாடுகள் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அண்ணன் ஆ.ராசா சொல்வதில் எந்த தவறும் இல்லை. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. 

 

இந்தியாவில் இருக்கும் எந்த மதமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துவதில்லை. அதன் கோட்பாடுகளைக் கொள்கைகளாக வைத்திருக்கவில்லை. ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்துள்ள மதமாக இந்து மதம் இருக்கிறது என்று ஆ.ராசா கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் ஆண், பெண்ணாக மாறலாம், பெண் ஒரு ஆணாக மாறலாம். ஆனால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் மற்றொரு சாதிக்கு மாற முடியாது. குறிப்பிட்ட சாதியினர் இன்றளவும் நிமிர்ந்து நடக்கக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடந்து செல்லக் கூடாது என்ற காட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றது. இதற்கு ஆதி மூலமாக இந்த மனுதர்மம் இருக்கிறது. அதனை எப்படி நாம் எதிர்க்காமல் இருக்க முடியும். 

 


கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட நாங்கள் அனைத்து மக்களுக்கும் சேர்ந்தே போராடுகிறோம், இந்த மனுஸ்ருமிதி கூட தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் இந்த விவாதம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 


மனுஸ்மிருதியில் எங்கேயாவது ஜாதி இல்லை என்று கூறியிருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி என்ற ஒரு அமைப்பு சுற்றிவருவதாகவே அமைத்துள்ளார்கள். இதை யாரும் மறுக்க முடியுமா? விளிம்பு நிலை மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்று இன்றைக்குக் கூறுகிறார்கள். அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக, விளிம்பு நிலை மக்களாக இத்தனை ஆண்டுக்காலம் வைத்திருந்தது யார். இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? சாதிக் கலவரம் நடக்கும் இடங்களில் இவர்கள் சென்று நாம் எல்லோரும் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவார்களா? அவ்வாறு இதுவரைக்கும் எந்த இடத்திலாவது சென்று இவர்கள் கூறியிருக்கிறார்களா? என்பதை உங்களுக்கு தெரியவந்தால் கூறுங்கள். ஆ.ராசா கருத்து சரியாகப் பட்டதால் அவரை ஆதரிக்கிறோம். அதைத்தாண்டி வேறு எதுவுமில்லை. 

 

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் விரைவில் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜனநாயக அமைப்பு கிடையாது. அதற்கு ஜனநாயகத்தின் மீது துளியளவு நம்பிக்கையும் கிடையாது. இந்த அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காலக்கொடுமை, அந்த அமைப்பில் வழிவந்த பாஜக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அகண்ட பாரதம் என்ற ஒரே தேசத்தை அமைக்க நினைக்கிறார்கள். அவர்களை யார் தோலுரித்துக் காட்டுகிறார்களோ அவர்களை எதிர்த்து இவர்கள் கம்பு சுற்றுகிறார்கள். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் மக்கள் முன் அவமானப்பட்டுப் போவார்கள் என்பது மட்டும் நிஜம்.

 


இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட இந்த நூறாண்டுக் காலத்தில் அது தொடங்கப்பட்ட நோக்கத்தை இலக்காக வைத்து பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுக் காலம் பிளவு பெறாத வண்ணம் இருக்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டும்தான். ஏனென்றால் அந்த அமைப்புக்கு ஆட்சி அமைக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எந்த ஒரு நோக்கமும் இல்லை. மாறாக இந்து ராஷ்டிரா, அதாவது இந்தியா முழுவதும் இந்து மதமே ஆட்சி செய்ய வேண்டும், மாற்று மதத்தினரை வாக்கற்ற மக்களாக அகதிகளாக வைக்க வேண்டும் அல்லது அனைவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துள்ளனர். இதை நோக்கியே அவர்கள் தங்களின் செயல்பாடுகளை வைத்துள்ளார்கள்.


 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்