Skip to main content

ஜனநாயகப் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு ஓட்டைகளையும், ஆளுநர்களின் அத்துமீறல்களையும், அவற்றை கட்சிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும், இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது கர்நாடகா தேர்தல். பதவிக்காக பாஜகவும் மோடியும் அமித்ஷாவும் நடத்திய கூத்துக்களின் நியாயமற்ற பின்னணியை இந்தத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் எவ்வளவுக்கு குழப்பமானதோ, அவ்வளவுக்கு அது அரசியல் பாடங்களையும், சட்டப்பாதுகாப்பையும் பெற்றுத்தந்திருக்கிறது.

 

s.r.bommai

எஸ்.ஆர்.பொம்மை



1988ல் கர்நாடகாவில் நடந்த ஒரு குழப்பம்தான், அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டது. அந்த ஆண்டு கர்நாடகாவில் ஜனதாக்கட்சி பெரும்பான்மை பெற்றது. அந்தக் கட்சிக்கு லோக்தளம் கட்சியும் ஆதரவு கொடுத்தது. இதையடுத்தே ஜனதாதளம் கட்சியாக பெயர் மாற்றப்பட்டது. எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அன்றைக்கு மத்தியில் இருந்த ராஜிவ் தலைமையிலான அரசு பொம்மை அரசை கவிழ்க்க திட்டமிட்டது.

இதையடுத்து, கே.ஆர்.மொலகேரி என்ற ஜனதாதள உறுப்பினரை பயன்படுத்தினார்கள். அவர் தனக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கூறினார். தனக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். உடனே, பொம்மை அரசைக் கலைக்கலாம் என்று அன்றைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு, கர்நாடகா ஆளுநர் பரிந்துரை செய்தார். ஆனால், மொல்கேரி தனக்கு ஆதரவு அளிப்பதாக ஆளுனரிடம் அளித்த பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் கட்சி மாறவில்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கும்படி ஆளுனரிடம் பொம்மை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தான் எடுத்த முடிவை திரும்பப்பெற ஆளுனர் மறுத்துவிட்டார்.

 

 


தனது ஆட்சியைக் கலைக்கும் குடியரசுத்தலைவரின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதையடுத்து உச்சநீதிமன்றத்துக்குப் போனார் பொம்மை. அங்கு, அதுவரை ஆட்சி கலைக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளும் பொம்மை வழக்குடன் இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு இந்த வழக்கில் நீதிபதி குல்தீப்சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பொம்மையின் அரசை கலைத்தது செல்லாது என்று அந்த அமர்வு அறிவித்தது. அந்தத் தீர்ப்புதான் எதற்கெடுத்தாலும் சொம்பையான காரணங்களுக்கெல்லாம் மாநில அரசுகளை கலைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

குடியரசுத்தலைவரின் ஆணை என்பதற்காக அப்படியே ஏற்க முடியாது. அந்த ஆணையை பரிசீலனை செய்யக்கூடிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது என்பது முதல் அடி. தீய நோக்கத்துடன் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த உத்தரவை ரத்துசெய்து மீண்டும் ஆட்சியை அமைக்க உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. 356 ஆவது பிரிவில் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டதுதான் என்று அந்த தீர்ப்பில் குடியரசுத்தலைவருக்கே செக் வைக்கப்பட்டது. ஆனால், மதசார்பின்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்பதை அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

 

 


பொம்மை வழக்கின் தீர்ப்பு சுருக்கமாக சொல்வது என்னவென்றால், பெரும்பான்மையாக உள்ள அரசாங்கத்தை மத்திய அரசு நினைத்த மாத்திரத்தில் கலைக்க முடியாது. அப்படி கலைக்கும்போது அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என்பதுதான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, பெரும்பான்மை இருப்பவர்களுக்கே ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி இருக்கிறது. பொம்மை தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியும் அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டதுதான் பிரச்சனைக்கே அடித்தளம் ஆனது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கிற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை இன்னொரு முக்கியமான ஜனநாயக உரிமையை கர்நாடகா உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் முடிந்தவுடன் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சியமைக்க குடியரசுத்தலைவரோ, மாநில ஆளுனரோ அழைப்பது வழக்கம். அதே சமயம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிப்பெருங்கட்சியாக எந்தக் கட்சி வந்துள்ளதோ அதை ஆட்சி அமைக்க அழைப்பது வழக்கமாக இருந்தது.
  vajpayee

வாஜ்பாய்



1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து, காங்கிரஸ் தலைமையில் அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்தன. ஆனால், 161 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக வாஜ்பாய் தலைமையில் அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. அதை ஏற்று குடியரசுத்தலைவர், வாஜ்பாய்க்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அவர் 13 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். இந்த நடைமுறையை முதன்முதலாக பாஜக மாற்ற முயன்றது. மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தனிப்பெருங்கட்சியாக வந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி உதிரிக்கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆளுனர் உதவியோடு ஆட்சி அமைத்தது.

 

 


2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றன. ஆனால், கோவாவில் உள்ள சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் அவசர அவசரமாக மிரட்டி விலைக்கு வாங்கிய பாஜகவை ஆளுனர் அரசு அமைக்க அழைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "உங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆளுநர் முன்பாக அழைத்துச் சென்று காட்டினீர்களா? அவர் முன் தர்ணா செய்தீர்களா?"  என்று கேட்டது. தனிப்பெரும் கட்சியைத்தான் அழைக்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே, தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கக் கோரலாமா என்ற கேள்விக்கும் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

  vajubhai

கர்நாடகா ஆளுனர் வஜூபாய் வாலா



"கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படுவது மாநிலங்கள் பலவற்றில் சகஜமாகிவிட்டது. மத்தியிலும் கூட அது எதார்த்தமாகிவிட்டது. இரண்டு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்காவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதில் தவறில்லை” என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. கோவாவில் தனிப்பெருங்கட்சியை பின்னுக்குத் தள்ளி ஆட்சி அமைத்த பாஜக, கர்நாடகாவில் தனிப்பெருங்கட்சி என்பதால் தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்தது. ஆளுனரைக் கொண்டு அது ஆட்சியையும் அமைத்து, 15 நாட்கள் அவகாசமும் பெற்றுவிட்டது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து நடத்திய ஜனநாயகப் போராட்டம் நீதிமன்றத்தின் வாசலைத் தட்டியது.

அங்கு, ஆளுனரின் செயலை ஏற்காத நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு அவர் கொடுத்த அவகாசத்தையும் ரத்து செய்தது. பதவியேற்ற இரண்டே நாளில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டலை மீறி தற்காலிக சபாநாயகராக சீனியர் உறுப்பினருக்கு பதிலாக ஜூனியர் உறுப்பினரான போபையாவை நியமி்த்து இன்னொரு சட்டப்போராட்டத்துக்கு ஆளுனர் வழிவகுத்தார்.

 

yeddi

எடியூரப்பா



ஆனால், நீதிபதிகள் பாப்டே, சிக்ரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்சனையை கவனமாக கையாண்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்தால் நாட்கள் நீள வாய்ப்புண்டு என்று பகிரங்கமாகவே அறிவித்தது. திட்டமிட்டபடி நியாயமாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதையும் அது ஏற்றுக்கொண்டது. போபையா ஏற்கெனவே பாஜகவுக்கு ஆதரவாக தவறான முடிவுகளை எடுத்து ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டவர் என்பதையும் நீதிமன்றம் ஏற்றது. எனவே, சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

சபையில், போபையா மூலம் முறைகேடு செய்து, அதன் விளைவாக கலவரம் ஏற்படுத்தி அரசாங்கத்தை முடக்கலாம் என்ற பாஜகவின் திட்டம் இதன்மூலம் முறியடிக்கப்பட்டது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க 100 சதவீதம் உறுதி சொன்ன எடியூரப்பா, சனிக்கிழமை 4 மணிக்கு பேசத்தொடங்கி, பேச்சின் முடிவில் நம்பி்க்கை வாக்குக் கோராமலேயே ராஜினாமா செய்தார். எஸ்.ஆர்.பொம்மைக்கு பிறகு, இப்போதைய கர்நாடகா அரசியல் குழப்பங்களும் அதில் நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கிற ஜனநாயகபூர்வமான தீர்ப்புகளும் இனி வருங்காலத்தில் இதுபோன்ற நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பது உறுதி.




 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்பப்படும் மன்மோகன் சிங்கின் வீடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது