Skip to main content

ஜனநாயகப் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு ஓட்டைகளையும், ஆளுநர்களின் அத்துமீறல்களையும், அவற்றை கட்சிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும், இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது கர்நாடகா தேர்தல். பதவிக்காக பாஜகவும் மோடியும் அமித்ஷாவும் நடத்திய கூத்துக்களின் நியாயமற்ற பின்னணியை இந்தத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் எவ்வளவுக்கு குழப்பமானதோ, அவ்வளவுக்கு அது அரசியல் பாடங்களையும், சட்டப்பாதுகாப்பையும் பெற்றுத்தந்திருக்கிறது.

 

s.r.bommai

எஸ்.ஆர்.பொம்மை



1988ல் கர்நாடகாவில் நடந்த ஒரு குழப்பம்தான், அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டது. அந்த ஆண்டு கர்நாடகாவில் ஜனதாக்கட்சி பெரும்பான்மை பெற்றது. அந்தக் கட்சிக்கு லோக்தளம் கட்சியும் ஆதரவு கொடுத்தது. இதையடுத்தே ஜனதாதளம் கட்சியாக பெயர் மாற்றப்பட்டது. எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அன்றைக்கு மத்தியில் இருந்த ராஜிவ் தலைமையிலான அரசு பொம்மை அரசை கவிழ்க்க திட்டமிட்டது.

இதையடுத்து, கே.ஆர்.மொலகேரி என்ற ஜனதாதள உறுப்பினரை பயன்படுத்தினார்கள். அவர் தனக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கூறினார். தனக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். உடனே, பொம்மை அரசைக் கலைக்கலாம் என்று அன்றைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு, கர்நாடகா ஆளுநர் பரிந்துரை செய்தார். ஆனால், மொல்கேரி தனக்கு ஆதரவு அளிப்பதாக ஆளுனரிடம் அளித்த பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் கட்சி மாறவில்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கும்படி ஆளுனரிடம் பொம்மை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தான் எடுத்த முடிவை திரும்பப்பெற ஆளுனர் மறுத்துவிட்டார்.

 

 


தனது ஆட்சியைக் கலைக்கும் குடியரசுத்தலைவரின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதையடுத்து உச்சநீதிமன்றத்துக்குப் போனார் பொம்மை. அங்கு, அதுவரை ஆட்சி கலைக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளும் பொம்மை வழக்குடன் இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு இந்த வழக்கில் நீதிபதி குல்தீப்சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பொம்மையின் அரசை கலைத்தது செல்லாது என்று அந்த அமர்வு அறிவித்தது. அந்தத் தீர்ப்புதான் எதற்கெடுத்தாலும் சொம்பையான காரணங்களுக்கெல்லாம் மாநில அரசுகளை கலைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

குடியரசுத்தலைவரின் ஆணை என்பதற்காக அப்படியே ஏற்க முடியாது. அந்த ஆணையை பரிசீலனை செய்யக்கூடிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது என்பது முதல் அடி. தீய நோக்கத்துடன் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த உத்தரவை ரத்துசெய்து மீண்டும் ஆட்சியை அமைக்க உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. 356 ஆவது பிரிவில் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டதுதான் என்று அந்த தீர்ப்பில் குடியரசுத்தலைவருக்கே செக் வைக்கப்பட்டது. ஆனால், மதசார்பின்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்பதை அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

 

 


பொம்மை வழக்கின் தீர்ப்பு சுருக்கமாக சொல்வது என்னவென்றால், பெரும்பான்மையாக உள்ள அரசாங்கத்தை மத்திய அரசு நினைத்த மாத்திரத்தில் கலைக்க முடியாது. அப்படி கலைக்கும்போது அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என்பதுதான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, பெரும்பான்மை இருப்பவர்களுக்கே ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி இருக்கிறது. பொம்மை தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியும் அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டதுதான் பிரச்சனைக்கே அடித்தளம் ஆனது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கிற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை இன்னொரு முக்கியமான ஜனநாயக உரிமையை கர்நாடகா உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் முடிந்தவுடன் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சியமைக்க குடியரசுத்தலைவரோ, மாநில ஆளுனரோ அழைப்பது வழக்கம். அதே சமயம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிப்பெருங்கட்சியாக எந்தக் கட்சி வந்துள்ளதோ அதை ஆட்சி அமைக்க அழைப்பது வழக்கமாக இருந்தது.
  vajpayee

வாஜ்பாய்



1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து, காங்கிரஸ் தலைமையில் அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்தன. ஆனால், 161 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக வாஜ்பாய் தலைமையில் அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. அதை ஏற்று குடியரசுத்தலைவர், வாஜ்பாய்க்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அவர் 13 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். இந்த நடைமுறையை முதன்முதலாக பாஜக மாற்ற முயன்றது. மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தனிப்பெருங்கட்சியாக வந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி உதிரிக்கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆளுனர் உதவியோடு ஆட்சி அமைத்தது.

 

 


2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றன. ஆனால், கோவாவில் உள்ள சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் அவசர அவசரமாக மிரட்டி விலைக்கு வாங்கிய பாஜகவை ஆளுனர் அரசு அமைக்க அழைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "உங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆளுநர் முன்பாக அழைத்துச் சென்று காட்டினீர்களா? அவர் முன் தர்ணா செய்தீர்களா?"  என்று கேட்டது. தனிப்பெரும் கட்சியைத்தான் அழைக்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே, தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கக் கோரலாமா என்ற கேள்விக்கும் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

  vajubhai

கர்நாடகா ஆளுனர் வஜூபாய் வாலா



"கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படுவது மாநிலங்கள் பலவற்றில் சகஜமாகிவிட்டது. மத்தியிலும் கூட அது எதார்த்தமாகிவிட்டது. இரண்டு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்காவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதில் தவறில்லை” என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. கோவாவில் தனிப்பெருங்கட்சியை பின்னுக்குத் தள்ளி ஆட்சி அமைத்த பாஜக, கர்நாடகாவில் தனிப்பெருங்கட்சி என்பதால் தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்தது. ஆளுனரைக் கொண்டு அது ஆட்சியையும் அமைத்து, 15 நாட்கள் அவகாசமும் பெற்றுவிட்டது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து நடத்திய ஜனநாயகப் போராட்டம் நீதிமன்றத்தின் வாசலைத் தட்டியது.

அங்கு, ஆளுனரின் செயலை ஏற்காத நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு அவர் கொடுத்த அவகாசத்தையும் ரத்து செய்தது. பதவியேற்ற இரண்டே நாளில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டலை மீறி தற்காலிக சபாநாயகராக சீனியர் உறுப்பினருக்கு பதிலாக ஜூனியர் உறுப்பினரான போபையாவை நியமி்த்து இன்னொரு சட்டப்போராட்டத்துக்கு ஆளுனர் வழிவகுத்தார்.

 

yeddi

எடியூரப்பா



ஆனால், நீதிபதிகள் பாப்டே, சிக்ரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்சனையை கவனமாக கையாண்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்தால் நாட்கள் நீள வாய்ப்புண்டு என்று பகிரங்கமாகவே அறிவித்தது. திட்டமிட்டபடி நியாயமாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதையும் அது ஏற்றுக்கொண்டது. போபையா ஏற்கெனவே பாஜகவுக்கு ஆதரவாக தவறான முடிவுகளை எடுத்து ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டவர் என்பதையும் நீதிமன்றம் ஏற்றது. எனவே, சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

சபையில், போபையா மூலம் முறைகேடு செய்து, அதன் விளைவாக கலவரம் ஏற்படுத்தி அரசாங்கத்தை முடக்கலாம் என்ற பாஜகவின் திட்டம் இதன்மூலம் முறியடிக்கப்பட்டது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க 100 சதவீதம் உறுதி சொன்ன எடியூரப்பா, சனிக்கிழமை 4 மணிக்கு பேசத்தொடங்கி, பேச்சின் முடிவில் நம்பி்க்கை வாக்குக் கோராமலேயே ராஜினாமா செய்தார். எஸ்.ஆர்.பொம்மைக்கு பிறகு, இப்போதைய கர்நாடகா அரசியல் குழப்பங்களும் அதில் நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கிற ஜனநாயகபூர்வமான தீர்ப்புகளும் இனி வருங்காலத்தில் இதுபோன்ற நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பது உறுதி.




 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.