Skip to main content

பாஜகவின் பிரச்சார பீரங்கி ஆனார் ஆளுநர் ரவி; அரசியல் மேடை ஆனது பெரியார் பல்கலை!!    

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

'ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் எதற்கு' என சுயாட்சி பேசும் மாநிலங்கள் முழங்கி வரும் வேளையில், சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களவை தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை  மறைமுகமாகத் தொடங்கி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.     

 

புது டில்லியில் கடந்த செப்டம்பர் திங்களில், 18வது ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது. அந்த மாநாட்டில் பேசப்பட்ட  சங்கதிகள் குறித்து, 'ஜி20 முன்னோக்கு பகுப்பாய்வு' என்ற தலைப்பில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 23 ஆம் தேதி கருத்தரங்கம்  நடந்தது. ஏற்கனவே, துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் சங்கப்பரிவாரங்களுக்கு ஆதரவு மனநிலையில், பல்கலைக்கழகத்தையே மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 

 

இந்நிலையில்தான் ஆளுநர் வருகையையொட்டி,  அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களும் கண்டிப்பாக கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பல்கலை  நிர்வாகம். இதனால் பல்கலையில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கருத்தரங்கில் வேறு வழியின்றி கலந்து கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரை ஆற்றினார். 

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

அவர் பேசுகையில், “வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு  வழங்கியுள்ளது. அதேபோல், பெண்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில்  முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களால் பெண்கள் பொருளாதாரம் மேம்படுகிறது. அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆகிறார்கள்” என்றார் ஆளுநர். மேலும் அவர் பேசுகையில், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்தியா மூன்றாவது  பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடு என்ற உயரத்தை எட்டும். வங்கிக் கணக்கு இல்லாத அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் 'ஜன் தன்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வங்கிக் கணக்கு தொடங்கி  உள்ளது. 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' எனப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,'' என்ற ஆர்.என்.ரவி, முத்ரா திட்டத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் பெற்று, சின்னதாக தேநீர் கடையோ அல்லது சமோசா கடையோ போட்டால்கூட தொழில்முனைவோராகி விடலாம் என்றதுதான் பார்வையாளர்களையே கதிகலங்க வைத்தது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இந்தியர்களின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதனால்தான் கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உதவ முடிந்தது என்றும் கூறினார் ஆர்.என்.ரவி.     

 

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில்  தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்திய அரசு, பிற நாடுகளுக்கு உதவி செய்த அதேவேளையில், உள்நாட்டிலேயே  கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். இதையெல்லாம் ஆளுநர் பெரிய சாதனை போல பேசுகிறார் என்ற விமர்சனமும் கிளம்பியது.     சமோசா கடையும், தேநீர் கடையும் போடலாம் என்ற ஆளுநர், ஏனோ பானி பூரி கடையும், பான் பீடா கடையும் போடலாம் என்று சொல்ல  மறந்துவிட்டதாக கிண்டல் பேச்சுகளும் மாணவர்கள் மத்தியில் ஒலித்தன. 

 

ஆளுநர் ரவி, வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்க என்றுதான் பச்சையாக சொல்லவில்லையே தவிர, அக்கட்சிக்கு முழுநேர பிரச்சார  பீரங்கியாகி விட்டதாகவே சொல்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி இறுதியாக, மத்திய அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல  வேண்டும் என்று அன்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆளுநரே பாஜ கட்சியின் நட்சத்திர பேச்சாளர் போல மாறி வருவது, அந்தப் பதவிக்கு அழகல்ல என பல தரப்பிலும் கண்டனங்களும்  எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 24ம் தேதி, பெரியார் பல்கலையில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு விழாவை காலை 9 மணிக்கே  தொடங்கியது பல்கலை நிர்வாகம். இதுவும் பல தரப்பிலும் அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது. பட்டமளிப்பு விழா என்பது பகல் 11 மணியளவில் நடத்தப்படுவதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்த மரபுக்கு முரணாக  காலை 9 மணிக்கே பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளனர்.     

 

மேலும், பதிவாளர் நேர்காணலில் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் விதிமீறல், துணைவேந்தரின் தன்னிச்சையான செயல்பாடு  உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, செனட் உறுப்பினர்களும், கல்லூரி ஆசிரியர் கழகத்தினரும் மொத்தமாக புறக்கணித்தனர். அதேபோல் சிண்டிகேட் உறுப்பினர்களில் அரசுப் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், தமிழக அரசின் பல்கலைக்குள் புகுந்து  பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகமாக பரப்புரை செய்துவிட்டுச் சென்றது ஆளுங்கட்சித் தரப்பிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உள்ளது.     

 

'சந்திரமுகி' படத்தில், கங்கா பாத்திரத்தில் நடித்த ஜோதிகா, மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறியதுபோல், ஆளுநர் என்ற அந்தஸ்தில் இருந்து  ஆர்.என்.ரவி, மெல்ல மெல்ல தாமரைக் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொண்ட முனைவர் பட்ட மாணவர்கள், 'என்ன கொடுமை ஆர்.என்.ரவி சார்?' என கிண்டலாக பேசியபடியே அந்த அரங்கத்தை விட்டு  வெளியேறினர். ஆளுநரின் கருத்தரங்கு பேச்சை ரகசியமாக பதிவு செய்த நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி ஆகிய உளவுப்பிரிவு காவல்துறையினர்,  தமிழக காவல்துறை மேலிடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.  

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.