Skip to main content

 சிவகார்த்திகேயனுடன் நட்பு... உருவத்தால் பட்ட அவமானம்...  -  'பிளாக் ஷீப்' விக்னேஷ்காந்த் பகிரும் லைஃப் ஸ்டோரி

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

விக்னேஷ்காந்த்... இணைய வானொலி ஆர்.ஜேவாக நமக்கு அறிமுகமாகி தமிழில் யூ-ட்யூப் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்திலேயே அதில் களமிறங்கி இன்று வரை வெற்றிகரமாகத் தொடரும் இவர் 'மீசைய முறுக்கு', 'தேவ்' படங்களின் மூலம் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். பிஸியான நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், இதற்கிடையில் தனது 'பிளாக் ஷீப்' குழுவினருடன் 'நவயுக ரத்தக்கண்ணீர்' எனும் மேடை நாடகத்தையும் நடத்தி வருகின்றார். அவருடன் நம் உரையாடல்...    

 

rj vignesh

 

'நவயுக ரத்தக்கண்ணீர்' மேடை நாடகம் நடத்தும் நோக்கம் எப்படி வந்தது? 

ஒரு மேடை இருக்கு, அதுல பிளாக் ஷீப் குழு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்லும்போது வந்துச்சு. எங்க வீடியோவுல அரசியல் பேச்சு குறைஞ்சுட்டாலும் எங்களுக்குள்ள அந்தத் தாக்கம் இருந்துகிட்டுதான் இருக்கு. எங்க குழு பசங்களோட நடிப்புத்  திறமையையும், அரசியல் கருத்துக்களையும் சொல்ற ஒரு விஷயமாக நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். நவயுக ரத்தக்கண்ணீர் கதையை இணையதள தொடரா எடுக்க நினைச்சோம். அப்புறம் அதை படமாக்க முயற்சி பண்ணுனோம், இறுதியில் நாடகம்தான் இதுக்கு சரியான ஊடகம்னு தோனுச்சு. ஏன்னா, ரத்தக்கண்ணீர் படமே நாடகமா இருந்து படமா மாறுனதுதான்.
 

உங்க சமூக கருத்துக்களை வீடியோவுல சொல்றதுக்கும் இப்படி நாடகங்கள் மூலமா மக்களை நேர்ல சந்திச்சு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்குறிங்க?

மேடை நாடகத்தின் பாதிப்பு அதிகமா இருக்கும். ஏன் சினிமாவுல சிகரெட் பிடிக்குறதும், ஆபாசமா பேசுறதும் மக்களை கெடுக்குற விஷயம்னு வருத்தப்படுறோம்னா, வீடியோவுல பதிவு பண்ணும்போது ஒருத்தரோட கருத்தா மட்டும் போய்சேரும், ஆனால் படத்துலயும் நாடகத்துலயும் பாக்கும்போது பார்வையாளன் தன்னையும் ஒரு கதாபாத்திரமா நினைச்சுதான் பாக்குறான். அதனால நாடகத்துல சொல்லப்படுற கருத்துக்கள் அதிக விளைவை ஏற்படுத்தும். டிஜிட்டல் மீடியாவுல அது நடக்குறது இல்ல.
 

ஆர்.ஜே, வீ.ஜே, அப்பறம் ப்ளாக் ஷீப் யூ-ட்யூப் சேனல், இப்ப படத்துலயும் நடிக்குறீங்க. இதுல எந்த வேலை உங்களுக்கு ரொம்ப பிடிச்சது?

நிகழ்ச்சி தொகுப்பாளர் (anchoring). ஒவ்வொரு மேடை ஏறும்போது சரியாய் வேலைய செஞ்சுடணும், எப்படியாவது மக்களை மகிழ்விக்கணும்னு நினைச்சு பயந்து பயந்து ஏறுவேன். கேமரா முன்னாடி நடிக்குறப்ப இல்லாத பயம், டிஜிட்டல் மீடியாவுல ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதை செயல்படுத்துறப்ப இல்லாத பயம், தொகுப்பாளரா மேடையில ஏறும்போது இருக்கும்.

முதலில் லோக்கல் சேனல் வீ.ஜே ஆகணும்னுதான் ஆசை இருந்துச்சு. நான்லாம் வீ.ஜேவுக்கு ஃபோன் பண்ணி "உங்கள ரொம்ப புடிக்கும் மேடம், சூப்பரா பண்றீங்க"னு வலியுற வகை. 'சன் மியூசிக்' சேனலுக்கு கால் பண்ணிட்டு எத்தனையாவது கால்னு எண்ணிக்கிட்டு இருப்பேன். ஒரு முறை லோக்கல் சேனலுக்கு ஆடிஷனுக்கு போயிருந்தப்ப, அங்க ஒருத்தர் "நீ நல்லா பண்ற தம்பி, ஆனால், உன் உருவமும் நிறமும் இதுக்கு ஒத்துவராது, உன் திறமையை ரேடியோவுல காட்டு"னு சொன்னாரு, அப்புறம்தான் நான் ஆர்.ஜே ஆகணும்னு நினைச்சேன்.

 

rj vignesh


 

ஆரம்பத்துல உங்க உருவத்தை வச்சு நீங்க வீஜே ஆக முடியாதுனு சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருந்தது? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்? 

இப்ப சொன்னா அதெல்லாம் ஓவரா இருக்கும். அப்போ அது கஷ்டமான விஷயம்தான். அதுவும் நம்ப அளவே திறமை இருக்க ஒருத்தர் உருவத்தால் மட்டுமே மேல போகுறத பாக்குறது ரணமா இருக்கும். ஆனால், அதெல்லாம் தாண்டி உங்கள நீங்க நம்பும்போதுதான் பாசிட்டிவிட்டி கிடைக்கும். ஒன்னு கிடைக்கலைனா அதை நம்மளே உருவாக்கணும்னு எண்ணம் வரணும்.
 

மீசையை முறுக்கு டீம், இப்ப தேவ் பட டீம் மாதிரி நல்ல டீம்லாம் தானா அமைஞ்சதா? இல்ல நீங்களே ஏற்படுத்திக்கிட்டதா?

நாங்க 5 பேரா இருந்து ஆரம்பிச்சபோதே ஒரு புது பையன டீம்ல சேக்கணும்னா அவனுக்கு திறமை இருக்கணும்னு முக்கியம் இல்ல. திறமை இல்லாதவனுக்கு வேலை கத்துக்கொடுத்துடலாம். நாங்க பண்பை மட்டும்தான் பார்ப்போம். 24 மணி நேரமும் வேலை செய்ய தயாரா இருக்கானா, தனக்குனு இல்லாம பக்கத்துல இருக்கவன் ஜெயிச்சாலும் சந்தோஷப்படுறானா, எதையும் எதிர்பார்க்காம இருக்கானானு பாத்துதான் சேத்துக்குவோம். அதனாலேயே பாசிட்டிவான டீம் அமைஞ்சுது. இன்னொரு விஷயம் பாஸிட்டிவா யோசிச்சுக்கிட்டு பாசிட்டிவான டீமோட நடந்து போகுற பொது, உங்களுக்கு என்ன வேணுமோ அது தானா கிடைக்கும்.


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'பிளாக் ஷீப்' டீம் படம் பண்றீங்க. அவருக்கும் உங்க டீமுக்குமான நட்பைப் பற்றி?

எங்களுக்கும் அவருக்கும் பாசிட்டிவிட்டிலதான் இணைப்பு வந்தது. அவ்வளவு பாசிட்டிவான மனிதர் அவர். நான் எப்பவுமே சொல்றது என்னனா சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணம் அவரோட திறமை உழைப்பை எல்லாம் தாண்டி அவர் ஜெயிக்கணும்னு தமிழ்நாட்டுல இருக்க மக்கள் எல்லாரும் நினைச்சோம். அந்த பாசிட்டிவிட்டியாலயும் வெற்றிபெற்ற மனிதர் சிவகார்த்திகேயன். அதனாலேயே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். நாங்க முதலில் ஆரம்பிச்ச ஸ்டுடியோவை அவர்தான் திறந்து வச்சார். இப்ப படம் பண்ணும்போதும் அவர்தான் தயாரிக்கிறார்.

 

 

 

Next Story

'அவதூறு பரப்பிய பிரபல யூடியூப் சேனல்'- நஷ்ட ஈடு கேட்கும் மலேசிய தயாரிப்பாளர்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
nn


மலேசியா நாட்டை சேர்ந்தவர்  அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேசிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது. உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்ட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, 'அப்துல் மாலிக் மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேசியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.

தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேசியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.  இதன் காரணமாக அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யூடியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் நற்பெயரை களங்கப்படுத்தி இருப்பதோடு, மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம். அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றனர்.

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.