Skip to main content

புரட்சியாளர் பகத்சிங்கும் இந்துத்துவவாதி சாவர்க்கரும்!

Published on 23/03/2018 | Edited on 25/03/2018

1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தியாகிகள் பகத்சிங்கும் அவருடைய இரண்டு தோழர்கள் ராஜகுரு, சுகதேவும் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர்.

 

யார் கண்ணிலும் படாமல் எரியூட்டப்பட்டு, சாம்பல்கூட கிடைக்காமல் செய்தனர்.

 

பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருடைய வயது 23 தான். வாழ்க்கையை இனிதான் வாழவேண்டும் என்ற நிலையில் தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

 

bagath singh vs savarkar

 

அவருடைய நலம் விரும்பிகளும், குடும்பத்தினரும் பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனு அளிக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், பகத்சிங் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பிரிட்டிஷ் அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வாக்குமூலத்தில், தன்னை சுட்டுக் கொல்லும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

“பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நான் போர் தொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறேன். அது உண்மை என்றால் துப்பாக்கியில் என்னை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, பிரிட்டிஷாரிடம் இருந்தும், இந்திய ஒட்டுண்ணிகளிடம் இருந்தும் இந்திய உழைக்கும் மக்கள் விடுதலை பெற எனது மரணம் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.


பாரதிய ஜனதாக் கட்சி பகத்சிங்கை கையில் எடுக்க முயற்சித்து வருகிறது. ஆனால், பகத்சிங் தன்னை ஒரு நாத்திகன் என்றும், கம்யூனிஸ்ட் என்றும் ஆணித்தரமாக நிறுவிச் சென்றிருக்கிறார். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை அவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

 

எனவே, பகத்சிங்கின் தேசபக்தியை தனதாக்கி, அவருடைய இமேஜை குழப்ப பாஜக திட்டமிட்டிருக்கிறது. எனவேதான், பகத்சிங்கின் பெயரை உச்சரிக்க சற்றும் தகுதியில்லாத பாஜக பல வழிகளில் அவருடைய நோக்கத்தையும், லட்சியத்தையும், தோற்றத்தையும் சிதைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

 

இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்றாலும், பாஜக சார்பில் விடுதலைக்காக போராடியவர் என்று கூறப்படும் ஒரே நபரான வி.டி.சாவர்க்கரின் தேசபக்த யோக்கியதையை அறிந்தால் அந்தக் கட்சியின் தேசபக்த கபடநாடகம் புரியும்.

 

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1911 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சாவர்க்கர் 50 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டவுடனே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி பிரிட்டிஷ் அரசுக்கு அவர் பல கருணை மனுக்களை அனுப்பினார்.

 

savarkar manu

 

1913ல் மீண்டும் இத்தகைய கருணை மனுக்களை அனுப்பத் தொடங்கினார். கடைசியாக 1921 ஆம் ஆண்டு அந்தமான் சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் 1924 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். “நீங்கள் என்மீது கருணை கொண்டு என்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசியாக இருப்பேன். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்” என்பதைத்தான் அவர் தொடர்ந்து தனது கருணை மனுக்களில் குறிப்பிட்டிருந்தார்.

 

அவருடைய இந்த கருணை மனுவை சாவர்க்கரின் தந்திரம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுவார்கள். ஆனால், அவர், தனது மனுவில் கூறியபடியே, பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசியாக இருந்தார். பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உதவியாக ஹிந்துத்துவா கோட்பாட்டை வலியுறுத்தத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான், முஸ்லிம் லீக் இரு நாடுகள் கோட்பாட்டை முன்வைத்தது.

 

பிரிட்டிஷ் அரசிடம் கருணை பிச்சைகேட்டு வாங்கிய சாவர்க்கரை போற்றும் பாஜக, பிரிட்டிஷ் அரசை தகர்க்கத் துணிந்த வெடிகுண்டு பகத்சிங்கை கையில் எடுக்க முயற்சிப்பது எந்தக் காலத்திலும் இயலாது!

 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.