Skip to main content

அஜீத்தை ஏன் கடுமையாக விமர்சனம் செய்வதில்லை..? - கோடாங்கி வடிவேல் பதில்!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

இணையத்தில் அதிகம் புழங்குபவர்கள் அனைவரும் அறிந்த ஒரு பெயர் என்றால் அது வாத கோடங்கி வடிவேல். திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் படத்தின் கதை, பாடல்கள், இயக்கம் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை பற்றிதான் விமர்சனம் செய்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இது கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு இயல்பான நிகழ்வுதான். ஆனால், வாத கோடாங்கி வடிவேல், அவர் விமர்சனம் செய்யும் படங்களில் பணியாற்றிய லைட் மேன்களை கூட சும்மா விடுவதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு பஞ்ச் வைத்து அலற வைப்பார். நமக்கும் ஏதாவது பஞ்ச் விடுவாரா என்ற எதிர்பார்ப்போடு நாம் அவரை சந்தித்தோம். பெண் பார்க்க வந்த மணமகனை போல நம் அனைத்து கேள்விகளுக்கும் இயல்பாகவே பதிலளித்தார். அவரோடு ஒரு கலகல சந்திப்பு,

கோடங்கி பத்தி எங்களுக்கே நன்றாக தெரியும், விமர்சனம் எப்படி செய்கிறார் என்று, ஆனா இந்த வடிவேல் யாரு, அவர் என்ன செய்கிறார்?

வடிவேல் சோத்துக்கு வேற வேலை வச்சி இருக்காரு. பில்டிங் கட்டி சேல்ஸ் பன்ற வேலையை பாத்துக்கிட்டு இருக்கேன்.

படங்களை ரிவியூ செய்கிற வேலைகளை எப்போது தொடங்கனீங்க?

ஆரம்ப காலத்தில் படம் பார்ப்போம், 10 நண்பர்களை கூப்பிட்டு வைச்சி கதை சொல்லுவோம். நம்ம சொல்கிற கதையை கேட்டுட்டு படத்துக்கு போகனும்னு நினைக்கிறவங்க கூட, மீண்டும் தியேட்டருக்கு போகமாட்டாங்க. அப்புறம் பேஸ்புக் வந்தது, அதில் கிராமத்து நடையில் எனக்கு தோணுவதை எழுதினேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்புறம் பொபைல் வந்த பிறகு யூ-டியூப்பில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ராங்கா கைவைச்சிட்டமோனு கூட நினைச்சியிருக்கேன். அப்புறம் போகப்போக நல்லா வந்துடுச்சி. சித்திரமும் கைப்பழக்கம் போல, இப்ப ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.

 

 reviewer kodak interview



நீங்க முதன்முதலா சிங்கம் படத்தை தான் ரிவியூ செய்தீங்க. இதை எப்படி பிளான் பண்ணி செய்தீர்களா, இல்லை இயல்பாகவே நடந்ததா?

படம் பார்த்த பிறகு இயல்பாகவே எனக்கு தோன்றியது. இந்த படத்திற்கு முன்பே ஒரு சேனல் தொடங்கி இரண்டு படங்களை விமர்சனம் செய்திருந்தேன். அதன் பிறகு அந்த சேனலை முழுக்கு போட்டாச்சி. கொஞ்ச நாள் காத்திருந்து எல்லா செட்டப்பும் பக்கா செய்த பிறகு, வாக்கா வந்து மாட்டிய படம்தான் சிங்கம் 3. 

நார்மலா படம் பார்க்கும்போது எப்படி பார்ப்பீங்க, நாங்க எல்லாம் படம் பார்க்கிற மாதிரி காட்சிகளை பாப்பீங்களா? இல்லை, என்ன கமெண்ட் பண்ணலாம், எப்படி இதை வைத்து காமெடி அடிக்கலாம்னு நினைத்து பார்ப்பீர்களா?

அப்படி எல்லாம் இல்லை. எல்லோர் மாதிரியும் நார்மலா தான் நானும் படம் பார்ப்பேன். 20 நிமிடத்திலேயே ஒரு படத்தோட தரத்தை காண்டுபிடித்து விடலாம். இந்த படம் தாங்குமா?  இல்லை நமக்கு தீணிப்போடுமானு ஈசியா கணிச்சிடலாம். சில வருஷத்துக்கு முன்புவரை மாசத்துக்கு இரண்டு படங்கள் தான் இந்தமாதிரி சிக்கும், அதை வைத்து விமர்சனம் செய்வோம். இப்ப ஒரு வாரத்துல ரிலீஸ் ஆகின்ற 5 படங்களுமே எங்களுக்கு வேலை கொடுக்கிறது. அதனால் எங்க பிழைப்பு சிறப்பா போயிட்டு இருக்கு.

நீங்க மற்ற படங்களை விமர்சனம் செய்கின்ற மாதிரி விஜய், அஜித் படங்களை விமர்சனம் செய்றதில்லையே? கைவைத்தால் தப்பா போயிடுமோனு பயப்படுகிறீர்களா?

அப்படி சொல்ல முடியாது...சிரிக்கிறார்...இப்படியும் சொல்லலாம். நாம யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது  இல்லை. யாரை நாம விமர்சனம் செய்கிறமோ அவங்க பார்த்தா கூட அதை சிரிச்சிட்டு கடந்து போற மாதிரிதான் நான் விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனம் யாரையும் காயப்படுத்தாத வகையில் தான் பெரும்பாலும் இருக்கும். 

குறிப்பாக அஜீத் படங்களை ரொம்ப மென்மையா விமர்சனம் செய்கிறீர்கள், நீங்க அஜீத்தின் தீவிர ரசிகரா?

அஜீத் படம், விஜய் படம்னு பார்த்து நான் விமர்சனம் செய்யவில்லை. சினிமாவை சினிமா என்ற அளவில்தான் நான் பார்ப்பேன். அதை அடிப்படையா வைத்து, அந்த படத்தை பற்றி எனக்கு என்ன தோணுதோ அதை விமர்சனமா செய்வேன், அவ்வளவுதான்.

உங்களுக்கும் சிம்புவுக்கும் எதேனும் தனிப்பட்ட பகை இருக்கா? 

எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. சொல்லப்போனால் ஒற்றுமைதான் இருக்கு, நானும் அவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம். அவர் மூந்று வயதில் சினிமாவில் ஆடிக்கொண்டிருக்கும் போது, நான் அவர் படத்தை பார்த்து தியேட்டரில் ஆடிக்கொண்டிருந்தேன். சிம்பு சினிமாவில் அனைத்தையும் தெரிந்தவர். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் ஜால்ரா அடிப்பதாலோ என்னவோ அவரை தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்து விடுகிறார்கள். அவர் மேல் இருக்கிற அக்கறையில் தான் அவரை அதிகம் விமர்சனம் செய்கிறோம்.

 

Next Story

செங்களம்- விமர்சனம்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

nn

 

மாதாமாதம் தொடர்ந்து தரமான வெப் சீரிஸுகளை கொடுத்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனம் இந்த முறை பொலிட்டிக்கல் திரில்லர் ஜானரில் செங்களம் வெப்சீரிசை வெளியிட்டுள்ளது. பொதுவாக வெப் சீரிஸ் என்றாலே மிகவும் ராவாகவும், திரில்லர் வகை, ரொமான்ஸ் வகை, ஹாரர் வகை வெப் சீரிஸ்களே அதிகம் ரிலீஸ் ஆகும் இதிலிருந்து சற்றே மாறுபட்டு பொலிடிக்கல் திரில்லர் ஜானலில் வெளியாகியிருக்கும் செங்களம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது?

 

ஒரு பக்கம் கலையரசன் மற்றும் அவரது தம்பிகள் இரண்டு கொலைகள் செய்துவிட்டு காட்டில் பதுங்கிக் கொண்டே எம்எல்ஏ, ஊர் சேர்மன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை ஒவ்வொன்றாக கொலை செய்துக் கொண்டு இருக்கின்றனர். இன்னொரு பக்கம் இவர்களை போலீஸ் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ இல்லாமல் தனி கட்சியாக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக வம்சாவழியாக சரத் கொகித்சவா குடும்பம் விருதுநகர் பகுதியில் சேர்மேனாக இருந்து வருகிறது. இந்த தலைமுறையில் இவரது மகன் பவன் சேர்மன் ஆக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டாம் தரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் பவன் இறந்து விட அந்த சேர்மன் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வாணி போஜன் முயற்சி செய்கிறார். அதற்கு உறுதுணையாக நன்கு அரசியல் அறிவு படைத்த கலையரசனின் தங்கை ஷாலி நிவேகாசை கூடவே வைத்து கொண்டு சாமர்த்தியமாக காய் நகர்த்தி சேர்மன் பதவியை பிடித்து விடுகிறார் வாணி போஜன். இதை அடுத்து இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? இதில் இருக்கும் வாரிசு அரசியலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கலையரசனின் தங்கையின் திட்டம் என்ன? என்பதே இந்த வெப் சீரிஸ் இன் நீண்ட கதையாக விரிகிறது.

 

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலனின் காதல், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ் முதல் நான்கு ஐந்து எபிசோடுகள் மிகவும் மெதுவாக நகர்ந்து பின் போகப் போக வேகம் எடுத்து ஒரு கிளிப்பிங் ஆன அரசியல் வெப் சீரிஸ் ஆக ரசிக்க வைத்துள்ளது. ஒரு முழு நீள திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைத்துள்ள இயக்குனர் அதை வெப் சீரிஸ் ஆக மாற்றுவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டிருக்கிறார். அது முதல் நான்கு ஐந்து எபிசோடுகளில் வெட்ட வெளிச்சமாக தெரிந்து அயர்ச்சியையும் கொடுத்துள்ளது. பின் வெப் சீரிஸ் கதை கருவுக்குள் அடியெடுத்து வைக்கும் கடைசி நான்கு எபிசோடுகள் மிக திரில்லிங்காகவும் தற்போது உள்ள சூழலில் நடக்கும் மாநில அரசியலை தழுவி நடக்கும் கதை களம் ஆகியவை மிக க்ரிப்பிங் ஆக அமைந்து காட்சிகளுக்கு வலு சேர்த்து ரசிக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் தற்போது உள்ள சூழலில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கி அதை விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் அரசியலாக காண்பித்து சில பல நிஜ நிகழ்வுகளை உல்டா செய்து அதை வெப் சீரிஸ் ஆக கன்வெர்ட் செய்து கவனம் பெற்று இருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன். பயிற்சியை கொடுக்கும் முதல் நான்கு ஐந்து எபிசோடுகளின் நீளத்தை இன்னும் கூட குறைத்து இருக்கலாம்.

 

கலையரசன் அவரது தம்பிகள் டேனியல் அண்ணி போப், லகுபரன் ஆகியோர் எதார்த்தமாகவும் காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை நிறைவாகவும் கொடுத்திருக்கின்றனர். இவர்களது அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் தனது அனுதாபமான நடிப்பால் பார்ப்பவர்களை கலங்க செய்துள்ளார். இவர்களுடன் இணைந்து படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவைகளில் அரசியல் பெரும்புள்ளிகளாக வரும் சரத் லோகித்சவா, பவன், வேல ராமமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் குறிப்பிடும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். அதேபோல் வாணி போஜன் கலையரசனின் தங்கை ஷாலி நிவேகாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் திரில்லிங்காகவும் அதேசமயம் சாமர்த்தியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவையே படத்திற்கு மிகப்பெரிய ஜீவனாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஷாலினி நிவேக்காஸின் திருப்பம் நிறைந்த காட்சிகள் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களுடன் இணைந்து போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜய், அரசியல் வாரிசுகளாக வரும் பிரேம்குமார், பூஜா வைத்தியநாத் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

 

தருண் குமார் இசையில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் காடு சம்பந்தப்பட்ட காட்சிகளும், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு முழு நீள திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு அதை ஒரு வெப் சீரிஸ் ஆக மாற்றும் போது அதில் இருக்கும் சவால்களை மிகவும் சிறப்பாக கையாண்டு அதற்கேற்றால் போல் திரைக்கதை அமைக்கும் பட்சத்தில் அந்த வெப் சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். ஆனால் இந்த வெப்சீரிஸ் சோ இந்த விஷயத்தில் சற்றே தடுமாறி பல இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்ந்து அயர்ச்சி கொடுத்தாலும் கடைசி கட்ட மூன்று, நான்கு எபிசோடுகள் சிறப்பாக அமைந்து இந்த செங்களத்தை கரை சேர்த்திருக்கிறது.

 

செங்களம் - அரசியல் சடுகுடு

 

 

 

Next Story

எப்படி இருக்கிறது 'விக்ரம் வேதா' இயக்குநர்களின் புதிய படைப்பு..? சுழல் - விமர்சனம்

Published on 19/06/2022 | Edited on 20/06/2022

 

சுழல் விமர்சனம்

விக்ரமாதித்தன் முதுகில் வேதாளம் ஏறிக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் பதில் கூறுவதை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்து உருவாகிய விக்ரம் வேதா வெற்றி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியின் அடுத்த படைப்பாக ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவை மையமாக வைத்து, அதில் சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு ஆழமான கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர் சுழல். இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் பாணியில் ஒடிடியில் வெளியாகியுள்ள இந்த தொடர் விக்ரம் வேதா கொடுத்த அதே அனுபவத்தை கொடுத்ததா..?  

 

கோயம்புத்தூரை ஒட்டி உள்ள ஒரு மலை கிராமமான சாம்பலூரில் ஒரு மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் போராட்டம் நடத்துகின்றனர். இதை அந்த தொழிற்சாலையின் முதலாளி ஹரிஷ் உத்தமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் கதிர் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு தடியடி நடத்திக் கலைக்கிறார். இதையடுத்து அன்று இரவே அந்த தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. அதேநேரம் தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபனின் இளையமகள் நிலவும் அன்று இரவே காணாமல் போகிறார். கூடவே ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவும் ஒரு புறம் சிறப்பாக நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சிமெண்ட் தொழிற்சாலை எப்படி தீப்பற்றி எரிந்தது? காணாமல் போட பார்த்திபனின் மகள் என்னவானார்? இந்த மயான கொள்ளை திருவிழாவுக்கும் நடந்த இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே சூழல் தொடரின் மீதி கதை.

 

தமிழில் வெளியான தொடர்களிலேயே அதிக அளவு மொழிகளில் டப் செய்யப்பட்ட தொடராக வெளிவந்துள்ள இந்த சூழல் தொடரின் முதல் நான்கு எபிசோடுகளை பிரம்மாவும், அடுத்த நான்கு எபிசோடுகளை அனுசரணும் இயக்கியுள்ளனர். புஷ்கர் காயத்ரியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இத்தொடர் எபிசோடுக்கு எபிசோடு பல்வேறு திருப்புமுனைகள் கொண்டு ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்து ரசிக்க வைத்துள்ளது. தொடர்  ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு எபிசோடும் கடக்கும் பொழுது இந்த குற்றத்தை அவர் செய்திருப்பாரோ, இல்லை இவர் செய்திருப்பாரோ, அல்லது அவர்கள் செய்திருப்பார்களோ என்று யோசிக்க வைத்து கடைசியில் யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்டை வைத்து ரசிகர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டில் பயணித்தது போன்ற ஒரு உணர்வை தந்துள்ளது இத்தொடர். சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய குற்ற செயலை கதை கருவாக எடுத்துக் கொண்டு அதை மயான கொள்ளை திருவிழாவோடு பின்னிப்பிணைந்து, அதன் வழியே கதையாடல்களை உருவாக்கி திரைக்கதை அமைத்து, கடைசிவரை யாரும் கண்டுபிடிக்காத வகையில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டு கதையோடு ஒன்ற வைத்துள்ளனர் சுழல் தொடரின் கிரியேட்டர்களான புஷ்கர் காயத்ரி. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்த தொடரில் முடிந்த அளவு எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு திரைக்கதையை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் அமைத்து மீண்டும் ஒரு வெற்றி படைப்பை கொடுத்துள்ளனர் புஷ்கர் காயத்ரி.

 

நிமிர்ந்த நடை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான வசன உச்சரிப்பு என 'திமிரு ' டன் திரியும் போலீஸ் அதிகாரியாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தி உள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நாம் அன்றாடம் பார்த்து பழகும் போலீஸ் அதிகாரிகளை அப்படியே எதார்த்தமாக நம் கண்முன் நிறுத்துகிறார் ஸ்ரேயா ரெட்டி. அதேசமயம் மகனை இழந்து வாடும் தாயாக நெகிழ்வான நடிப்பும், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பும் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். யூனியன் லீடராக நடித்திருக்கும் பார்த்திபன் தனக்கே உரித்தான நக்கல் நையாண்டி வசனங்களை தவிர்த்து விட்டு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் நிறைவாக செய்து மகளை இழந்து வாடும் தந்தையின் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், படத்தின் நாயகனாகவும் நடித்துள்ள கதிர் மிகவும் இயல்பான போலீசாக அலட்டல் இல்லாத நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார். எந்த ஒரு காட்சியிலும் தான் நடிப்பதே வெளியே தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இதே நடிப்பை அவர் தொடரும் பட்சத்தில் சினிமாவில் அவருக்கான வாய்ப்பு கதவு பிரகாசமாக திறந்துள்ளது.

 

ஸ்ரேயா ரெட்டியின் மகனாக நடித்திருக்கும் எஃப் ஜே நடிப்பில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்த்தமான நடிப்பை மிக இயல்பாக வெளிபடுத்தி கவனம் பெற்று உள்ளார். இவருக்கும் இவரது அம்மா ஸ்ரேயா ரெட்டிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி வெகுவாக கவர்ந்துள்ளது. இவருடன் இணைந்து பார்த்திபன் இளைய மகளாக நடித்துள்ள கோபிகா ரமேஷ் நன்றாக டஃப்  கொடுத்து நடித்துள்ளார். கோபிகா, எஃப் ஜேவுக்குமான கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. இவர்களைப் போலவே படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். அதேபோல் திரைக்கதையிலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹரிஷ் உத்தமன், பிரேம் குமார், இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், லதா ராவ், யூசுப் உசைன், நித்திஷ் வீரா, சந்தானபாரதி ஆகியோர் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். எப்போதும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சற்று ஓவர் ஆக்டிங் செய்து நடித்துள்ளார். உணர்ச்சி பொங்கும் படியான காட்சிகளில் கண்களை பெரிதாக திறந்து அதிகமான நடிப்பை அளவில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

 

முகேஷ்வரனின் ஒளிப்பதிவில் மலையும் மலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், மயான கொள்ளை திருவிழா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளன. அதேபோல் சாம் சி எஸ் -ன் பின்னணி இசை காட்சிகளுக்கு காட்சி திகில் கூட்டி ரசிகர்களை இசையால் கட்டிப் போட்டுள்ளது. இவரது பின்னணி இசை இன்னொரு நாயகனாக மாறியுள்ளது. அதேபோல் அருண் வெஞ்சாரமுடுவின் கலை இயக்கமும் மிக மிக சிறப்பாக அமைந்து காட்சிகளை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

 

ஒவ்வொரு எபிசோடுகளுக்கிடையே வரும் ட்விஸ்டுகள் ரசிக்க வைத்தாலும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு புரியவைப்பதற்காக மிகவும் நீண்டு கொண்டு போய் முடியும்படி அமைந்துள்ளதால் அவைகள் ஆங்காங்கே சற்று அயர்ச்சியை கொடுப்பதை தவிர்க்கவும் முடியவில்லை. அதேபோல் சந்தானபாரதியின் கதாபாத்திரம் மேம்போக்காக அமைந்துள்ளதாலும், இரண்டு மூன்று எபிசோடுகளுக்கு பிறகு வரும் திருப்பங்களும், நீண்டு எடுக்கப்பட்ட தேவையற்ற காட்சிகளும் சுவாரஸ்யத்தை சற்று குறைத்துள்ளன. இருந்தும் படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் அதில் சொல்லப்பட்ட மெசேஜும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளதால் இத்தொடர் தவிர்க்க முடியாத ஒரு தரமான தொடராக மாறி உள்ளது.

சுழல் - தரம்!