Skip to main content

மத்திய அரசின் இடஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடியை கடிந்துகொண்ட கவர்னர்!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020
ddd

 

 

7.5 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் எடப்பாடியை கவர்னர் கடுமையாக எச்சரித்திருக்கிறார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை எடப்பாடி, சட்டமன்றத்தில் கொண்டுவந்து கவர்னருக்கு ஒப்புதல் பெற அனுப்பிய உடன் கவர்னருக்கு அதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. 

 

இந்த இடஒதுக்கீடு ஏற்கனவே தமிழகத்தில் நிலவியுள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்குள் வருமா? அல்லது 69 சதவிகித இடஒதுக்கீட்டை தாண்டி வருமா? என்பதுதான் கவர்னருக்கு ஏற்பட்ட சந்தேகம். இதுபற்றி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவர்களின் கருத்தை கேட்டு கவர்னர் பைலை அனுப்பினார். அவர் பதிலளிக்க காலதாமதம் ஆனது.

 

இதற்கிடையே கவர்னருக்கு மத்திய அரசு எடப்பாடியை பற்றி ஒரு நோட் அனுப்பியது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. அந்த சட்டம் இந்தியா முழுவதும் அமலாகிறது. தமிழகத்தில் அமலாகவில்லை. அந்த சட்டத்தில் சலுகைகளை பெற பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் என்கிற சான்றிதழை மாநில அரசு தரவேண்டும். அந்த சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிலையங்கள் மற்றும் வேலைபெறும் நிறுவனங்களில் இந்த 10 சதவிகித முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியாது. 

 

இதுதொடர்பாக கவர்னரை சந்தித்த எடப்பாடியிடம் கவர்னர் நீங்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியாது என சொல்வது தவறானது. அந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுவனங்களில் செயல்படுத்த தேவையான சான்றிதழ்களையும் தரமாட்டேன் என்கிறீரர்கள், இது தவறு. இதில் ஒரு முடிவுக்கு நீங்கள் வராமல் 7.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்திற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகிறது என கவர்னரிடம் தனிப்பட்ட முறையில் கூறிய எடப்பாடியிடம், கவர்னர் தெரிவித்தார். 

 

கடந்த வாரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதியினர் என்கிற சான்றிதழை எடப்பாடியின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கொடுத்தனர். அதன்பிறகே சொலிசிட்டர் ஜெனரலை தொடர்பு கொண்ட கவர்னர் அலுவலகம் உடனடியாக அவரது கருத்தை 7.5. சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் மசோதாவைப் பற்றி உடனடியாக தெரிவிக்கச்சொன்னார். 

 

சொலிசிட்டர் ஜெனரல் இந்த மசோதா 69 சதவிகித இடஒதுக்கீட்டில் மீறிய செயல் அல்ல என பதிலளித்தார். அந்த பதில் வந்ததும் நாங்கள் இதுத்தொடர்பாக ஒரு அரசாணை பிறப்பிக்கலாமா என எடப்பாடி கேட்டார். அதற்கு கவர்னர் அனுமதி அளித்தார். அதன் பிறகு இந்த இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் தனது ஒப்புதலை அளித்தார். 

 

இப்படி கவர்னரின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து எடப்பாடி அரசு நடந்து கொண்டது. அதன் பிறகு கவர்னரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார் எடப்பாடி என்கிறது தமிழக அரசு வட்டாரங்கள்.

 

 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.