19 ஆயிரம் லிட்டர் டீசல் எங்கே? - அரசுக்கு அல்வா கொடுத்த போ.வ. அதிகாரிகள்!

99

இருப்பு இருக்க வேண்டிய 19 ஆயிரம் லிட்டர் டீசல் எங்கே போனது. மாயமானதா.?. கடத்தப்பட்டதா?. என்கிற தகவல் வெளியே கசிந்து விவாதமாக அரசின் நெல்லை போக்குவரத்து மண்டலமே திகைத்துப் போய்க் கிடக்கிறது.  அத்துடன், நெல்லை அரசுப் பேருந்துப் போக்குவரத்துக்கழகப் பணியாளர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழ்நாடு அரசு நெல்லை கோட்டத்தில் நெல்லை தூத்துக்குடி நாகர்கோவில் உள்ளிட்ட மூன்று மண்டலங்களில் சுமார் 1,985 பேருந்துகள் அன்றாடம் இயக்கப்படுகின்றன. இவைகளுக்கான டீசல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும் அந்த, மொத்தக் கொள்முதலுக்கான விலையில் ஒன்றிய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றி விட்டது. இந்த திடீர் விலையேற்றத்தால் பேருந்துக் கழகம் தனது தேவைக்கான டீசலை தனியார் பங்க்குகளிடம் இருந்து  லிட்டருக்கு ரூபாய் 2க்கு குறைவாகக் கொள்முதல் செய்கிறது.

இந்தச் சூழலில் நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சரவணன் அண்மையில் தூத்துக்குடிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து பாபநாசம் கிளை மேலாளர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று நெல்லை பொது மேலாளராகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அவர் பொறுப்பிற்கு வந்த போது வண்ணார்பேட்டையிலுள்ள தாமிரபரணி டிப்போவில் டீசல் இருப்பு குறித்து ஆய்வுகளை மேற் கொண்ட போது 19 ஆயிரம் லிட்டர் டீசல்  நாள் சரியாக தொடர்ந்து ஸ்டாக்கில் பற்றாக்குறையாக இருப்பது தெரியவந்திருக்கிது. இதனால் அதிர்ந்து போன பொதுமேலாளர் டீசல் ஷார்ட்டேஜ் குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

அவரின் அறிக்கைப்படி அரசுப் போக்குவரத்துக் கழத்தின் தணிக்கைப் பிரிவு அதிகாரியான மெர்லின் சுகந்தி தலைமையிலான ஆடிட் பிரிவு அதிகாரிகள் குழுவினர் தாமிரபரணி டெப்போவில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பு பற்றாக்குறை உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் பஸ்களின் கி.மீ. இயக்கத்திற்காகவே டீசலின் அளவைக் கூட்டிக் குறைத்துப் போட்டதால் தான் டீசல் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக ஆடிட் குழுவினர் சென்னையிலுள்ள நெல்லை போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் (எம்.டி.) தசரதனுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

94

இதையடுத்தே எம்.டி. தசரதன் டீசல் பற்றாக் குறைக்குக் காரணமான டெப்போ கிளை மேலாளர் கிருஷ்ணகுமார், உதவி பொறியாளர்கள்(தணிக்கை) ஆவுடையப்பன், பிரின்ஸ், மாடசாமி, ஸ்டோர் கீப்பர் சங்கர் உள்ளிட்ட 6 பேரை சஸ்பென்ட் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு பிற கோட்டத்தின் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார். 

வெளியான டீசல் ஷார்ட்டேஜ் விவகாரம் மாநகரில் திகைப்பையும் பரபரப்பையும் கிளப்பிய வேளையில் போ.வ.பணியாளர்கள் திகிலில் உறைந்திருக்கிறார்கள். காரணம் நெல்லை பேருந்து வரலாற்றில் தாமிரபரணி டிப்போவின் இந்த டீசல் ஷார்ட்டேஜ் இத்தனை பெரிய புயலைக் கிளப்பியதில்லை என்கிறார்கள் போ.வ.பணியாளர்கள்.

நெல்லை அரசு போ.வ. கழக டெப்போவின் பணியாளர்கள், தொடங்கி அங்குள்ள மேலாளர் மட்டும் வரையிலான பலரிடம் இது குறித்துப் பேசிய போது, நெல்லை மாநகரில் அரசு டெப்போ மூன்றிருந்தாலும் குறிப்பிட்ட தாமிரபரணி டிப்போவின் மூலமாக சுமார் 650 பேருந்துகள் நகரம் முதல் அண்டையிலுள்ள புறநகர்க் கிராமங்கள் வரை இயக்கப்படுகின்றன என விரிவாகப் பேசிய பேருந்து இயக்கப் பணியாளரான அவர், இயக்கப்பட்டும் அத்தனை பேருந்துகளும் பிராண்ட் நியு என்று சொல்லி விட முடியாது. பல பேருந்துகள் இயக்க கால கெடுவையும் தாண்டி(ஒல்ட் மாடல்கள்) இயக்கப்பட்டு வருகின்றன. சரியான பராமரிப்பு கிடையாது. பார்ட்ஸ்கள் போல்ட் நட்டுப் போனால் உடனடியாக அவைகளை மாற்றி விடமாட்டார்கள். தொழில் நுட்பபிரிவு அதிகாரிகள் பழைய பார்ட்ஸ்களைப் போட்டு ஒப்பேற்றி விடுவார்கள்.

இப்படியான ஒப்பேற்றல்களில் பேருந்துகளின் இயக்கம் எப்படி இருக்கும். இதனால் பல பேருந்துகள் பிரேக் டவுணாகி வழியில் நின்று விடுகிற நிலை. இதை நாங்கள் டிப்போ பணிமனை அதிகாரிகளிடம் சொன்னால், எங்களைக் கட்டி ஏறி விடுவார்கள். பி.டியச் சரிபண்ணியாச்சு. வண்டிய எடுன்றாக. அவுக விரட்டலுக்கு நாங்க பணிய வேண்டியதாயிருக்கு. இந்த மாதிரி, கண்டிஷன்ல உள்ள பேருந்துக ஒரு லிட்டர் டீசல்ல எத்தனை கிலோ மீட்டர் தொலைவு இயங்கும்.

93

புதுசா பஸ் இறக்குறப்ப பஸ்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு நான்கிலிருந்து. நாலே முக்கால் கி.மீ. தொலைவு தான் இயங்கும்னு கம்பெனியே சொல்லுது. இது டைரக்டான பெருவழிச் சாலை வழியான இயக்கத்திற்குத்தான் சரியாவரும். ஆனா கிராமப்புறங்கள், பல இடங்களில் நிற்பதாலும், லக்கேஜ்கள், பயணிகளின் கொள்ளளவாலும் டீசலின் செலவு கணக்குகள் மாறுபடும். ஒரு லிட்டருக்கு சொல்லப்படுகிற கி.மீ. தொலைவின் அளவு நிச்சயம் குறையும்.

அப்படி இருக்கும் போது இந்தக் கணக்குத் தெரியாத டெப்போ அதிகாரிகள் அன்றாடம் காலையில் பேருந்தை எடுக்கிற போது அரசு விதிகளுக்கு ஏற்ப ஒரு லிட்டர் டீசலுக்கு 5 கி.மீ என்ற கணக்கில் 50 லிட்டர் டீசல் போட்டுவிடுவார்கள், நாங்களும் போட்ட டீசலுக்கு ஒப்புதலளித்து விடுவோம். சாதாரண பஸ் என்றால் 5 கி.மீ. கணக்கு ஏ.சி. பஸ் என்றால் லிட்டருக்கு 3 கி.மீ தான் போகும் அது தான் கணக்கு. சாலைகளின தன்மையைப் பொறுத்து இந்தக் கணக்கு சரிவராது. சொல்லப்பட்ட தொலைவை விட கி.மீட்டரின் அளவு நிச்சயம் குறையும். சாதாரணமாக 50 லிட்டரையும் சற்றுத்தாண்டிவிடும்.

97

ஆனால் ஆரம்பத்திலேயே லிட்டருக்கு 6 கி.மீ. தொலைவு கட்டாயம் இயக்கப்பட்டே ஆக வேண்டும் என்று அதிகாரிகள் என்போன்ற டிரைவர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். அதன்படி 50 லிட்டர் டீசலை முதலில் பேருந்துகளுக்கு வழங்கிவிடுவார்கள். பின்பு நாங்கள் 10 லிட்டர் டீசலில் 8 லிட்டர் அளவிலேயே 50 கி.மீ. போய் வந்து விட்டதாகவும், அதில் இரண்டு லிட்டர் மிச்சப்படுத்தியதாகவும், இந்த வழியில் டீசலின் பயன்பாட்டைக் குறைத்து விட்டதாக அறிக்கையை அவர்கள் தயார் செய்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்து மேலிடமான எம்.டி. தசரதனுக்கு முந்தைய பொது மேலாளரான சரவணன் அனுப்பிவிடுவார்.

இந்த வழியில் பேருந்துக்கு கொடுத்த டீசலின் அளவில் 10 லிட்டரில் 50 கி.மீ பயண தூரம் முடித்து 2 லிட்டர் மிச்சம் என்றும் டெப்போவிலுள்ள அனைத்து பேருந்துகளுக்கும் இந்த வழியில கணக்கிட்டு அனுப்பும் போது அறிக்கை தான் அத்தனை லிட்டர் மீதம் என்று காட்டுமே தவிர இருப்பில் அவர்கள் காட்டிய அத்தனை லிட்டர் டீசல் ஸ்டாக் எப்படி இருக்கும்.

91

அதிகாரிகள் குறிப்பிட்டபடி 10 லிட்டர் டீசலில் 8 லிட்டரிலேயே குறிப்பிட்ட கி.மீ. பயண தொலைவு முடிந்தது. டீசலை சிக்கனப்படுத்திவிட்டோம் என்ற அவர்களின் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் ரிப்போர்ட்டில் ஒட்டுனர்களான நாங்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டே ஆக வேண்டும். இல்லை யென்றால் நாங்கள் எந்த வழியிலாவது பழி வாங்கப்படுவோம். 

நடக்காத ஒன்றையும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி, டீசலில் இந்த டெப்போ சிக்கணம் என்று அனுப்பப்பட்ட அறிக்கையை மேலாளர் சரவணனும், எம்.டி. தசரதனும் அரசுக்கு அனுப்பி, “சபாஷ்“ அங்கீகாரமும், அவார்டும் வாங்கியிருக்கிறார்கள். இதற்கு நாங்கள் பலி. ஏனெனில் அவர்கள் இங்குள்ள டெப்போவில் நடந்த பிற முறைகேடுகளிலிருந்து தப்பிக்கவே இப்படியான டீசல் சேமிப்பு அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பி தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள்.

98

இப்படி பேருந்துக்கு வழங்கிய 10 லிட்டர் டீசலில் 8 லிட்டர் இயக்கச் செலவு போக 2 லிட்டர் மிச்சம் என்று இல்லாத கணக்கை அத்தனை பேருந்துகளுக்குமான வகையில் காட்டி நாட்கள், மாதக் கணக்கில் காட்டியதன் விளைவு 19 ஆயிரம் லிட்டர் டீசல் கையிருப்பு என்று வளர்ந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்க நிஜத்தில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் எங்கே இருக்கும். பேப்பர் அளவில் சீனி என்று எழுதினால் அது இனிக்குமா. அந்த மாதிரி பேப்பர் அளவில் தான் 19 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பு என்பது, ஆனால் ஸ்டாக்கில் இல்லை என்று தெரிந்து விட்டது. இந்தப் போலிக் கணக்கு வட்டியும் முதலுமாகச் சேர்ந்து 19 ஆயிரம் லிட்டர் டீசல் எங்கே. மாயமானதா, என்று பூகம்பத்தைக் கிளப்பி விட்டது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் டெப்போவிற்கு டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படுகிற டீசலின் அளவுகள் முறைப்படி கேஜ் அளவு போடப்பட்டு சரிபார்த்து சி.சி.டி.வி.களின் கண் பார்வையில் இறக்கப்படுகின்றன. உடனே டேங்க் இருப்பும் சரி பார்க்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் மட்டுமல்ல டெப்போலிருந்து ஒரு லிட்டர் தண்ணீர் கூட அத்தனை சுலபமாக வெளியேறிவிடாது. கியர் அடிக்க முடியாது... வழியில்லை. பேருந்து இயக்க வழிகளில் கூட டீசல் முறை கேடில்லை. அத்தனை கண்காணிப்பு. இந்த ஷார்ட்டேஜ் கணக்கு விசயத்தை கூட முதன் முதலில் வெளியே கொண்டு வந்தவர் கிளையின் உதவி மேலாளர் கிருஷ்ணகுமார் தான். அவர் பழிவாங்கப்பட்டு சஸ்பென்ட்டிற்குள்ளாகியிருக்கிறார்  என்கிறார்கள் பணியாளர்கள்.

தற்போது சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் டெப்போவில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இல்லாத ஊருக்கு வழி சொன்னால் இந்தக் கதிதான்.

nellai public transport tngovt
இதையும் படியுங்கள்
Subscribe