Skip to main content

கொடூரக் கொலையால் மதக் கலவர அபாயம்!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

ட்டு நெசவுக்கு புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், சௌராஷ்டிராக்கள் உட்பட பல சமூகங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அதே ஊரின் தூண்டில் விநாயகம்பேட்டையச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பா.ம.க.வில் நகரச் செயலாளராக இருந்தவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் கேட்டரிங் தொழிலையும் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டும் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

ramalingam



கடந்த 05-ஆம் தேதி காலை, ஷாமியானா பந்தல் அமைக்கும் வேலைக்காக, பாக்கினாம் தோப்பில் இருக்கும் தனது ஆட்களை அழைப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது தேனி மாவட்டம் போடி அருகே இருக்கும் முத்துதேவன்பட்டி, உருது கல்லூரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இஸ்லாம் மத பெருமைகள் குறித்து, நோட்டீஸ்களை வினியோகித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாகச் சென்ற ராமலிங்கத்திடமும் ஒரு நோட்டீசைக் கொடுத்த போது, ""இந்த ஊர்ல எல்லோரும் தாயா புள்ளையா பழகிக்கிட்டிருக்கோம். எங்கிருந்தோ வந்து நீங்க ஏன் முஸ்லிம் மதத்துக்கு மாறுங்கன்னு பிரச்சாரம் பண்றீங்க. நாங்க நோம்புக் கஞ்சி குடிக்கிறோம், ஆனா நீங்களோ எங்க சாமிக்கு படைச்சதை சாப்பிடமாட்டீங்க'' என பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கே இருந்த இஸ்லாமிய இளைஞரின் தலையில் இருந்த குல்லாவை எடுத்து, தனது தலையில் வைத்துக் கொண்டார் ராமலிங்கம்.

அத்துடன், அருகில் இருந்த வீட்டிலிருந்து விபூதி, குங்குமத்தை எடுத்து வரச்சொல்லி, அந்த இஸ்லாமிய இளைஞரிடம் பூசிக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் ராமலிங்கம். நடந்த சம்பவங்கள் அத்தனையையும் அங்கே இருந்தவர்கள், செல்போனில் வீடியோ எடுத்து, வாட்ஸ்-அப்களில் வைரலாக்கிவிட்டனர். ராமலிங்கமும் பகல் முழுவதும் கடையில் இருந்துவிட்டு, இரவு 12 மணிக்கு மூத்தமகன் ஷாம்சுந்தரோடு முஸ்லிம் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, மாருதி ஷிப்ட் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ராமலிங்கத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டது.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றும் ராமலிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன் தலைமையில் தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களின் எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், என போலீஸ் படையே திருபுவனத்தில் குவிக்கப்பட்டது. திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவும், மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தமும் ஸ்பாட்டுக்கு வந்து, கண்டனத்தை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

திருபுவனம் இஸ்லாம் சமூக பிரமுகர்களிடம் நாம் பேசிய போது, ""வீதிவீதியாகச் சென்று மதம் மாற்றும் வேலையை நாங்கள் செய்வதில்லை. அதே சமயம் இந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்''’என்றனர்.

மத மாற்ற விவகாரமா அல்லது ராமலிங்கத்திற்கு இருந்த தொழில் போட்டியா? என விசாரிக்கும் போலீசார், முதல்கட்ட கைது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் யாராக இருந்தாலும் முளையிலேயே கிள்ளப்பட வேண்டும் என்கிறார்கள் அச்சத்தில் உள்ள மக்கள்.

-க.செல்வகுமார்

 

Next Story

'பிரதமர் சொன்னால் அவரிடமே செல்லுங்கள்' - செவிட்டில் விட்ட உச்சநீதிமன்றம் 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கும், நியமனத்திற்கும் எதிராகப் பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளையும் சேர்த்து உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுகிறீர்கள்’ எனத் தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவித்தார். ‘ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள் ஆகம விதியைப் பின்பற்றும் கோவில்களில் நியமிக்கப்படுகிறார்கள்’ எனத் தமிழக அரசு பதிலளித்தது. தொடர்ந்து  இது தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க மனுதாரர் தரப்பு, 'தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசே கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்' எனத் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் சொன்னால் பிரதமரிடமே செல்லுங்கள்' என கண்டனம் தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.