Skip to main content

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Yediyurappa

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நரசிம்மமூர்த்தி என்பவர், சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு, இந்த ஜனவரி 27, 2021 -இல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ளது கர்நாடக சிறைத்துறை நிர்வாகம். மேலும், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022 -இல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் பலரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதத்தை சசிகலா எழுதியிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஜனவரி 27 என தேதி குறிக்கப்பட்டிருப்பது குறித்து, சிறைத்துறை விதிகளில் மிகுந்த அனுபவமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நாம் பேசியபோது, "சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்காண்டு காலம் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்ட தவறினால், மேலும் ஒரு வருட காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே தீர்ப்பு.

 

இதனடிப்படையில், சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளின் போதே வழங்கப் பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, அவரது விடுதலைக்கான தேதியும் தீர்மானிக்கப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்கப்படும் போது, அந்தக் கோப்புகளில் இருக்கும் தேதியைத்தான் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கும். அப்படிப்பட்ட தகவல்தான் தற்போது வந்திருக்கிறது.

 

அதேசமயம், சிறை விதிகளின்படி தண்டனைக் காலங்களில் சசிகலாவுக்கு சலுகை நாட்கள் கிடைத்திருக்குமானால், அதனைத் தேவைப்படுகிற போதுதான் பரிசீலிப்பார்கள். அப்படிப் பரிசீலிக்கும்போது சலுகைகளாக எத்தனை நாட்கள் கிடைக்கிறதோ, அந்த நாட்களை மொத்த தண்டனைக் காலத்திலிருந்து கழித்த பிறகே விடுதலை தேதியை முடிவு செய்வர். அந்த வகையில், முன் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவரது விடுதலையில் அரசியல் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியாது?'' என்கிறார் அழுத்தமாக.

 

Ad

 

சசிகலாவின் விடுதலை தேதி குறித்த பரபரப்பு ஆளும்கட்சி அமைச்சர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்ததும் இதுகுறித்து, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, இந்தத் தேதியை வைத்துக்கொண்டு சசிகலா முன் விடுதலை ஆக மாட்டார் என்கிற முடிவுக்கு வராதீர்கள். கர்நாடக அரசு நினைத்தால் முன் விடுதலைக்கு அனுமதிக்கவும் செய்யலாம்'' என்று எடப்பாடியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வின் மேலிட தொடர்புகள் கூறுகின்றன.

 

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, "பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையின் சூப்பிரன்டெண்ட் வழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் எடியூரப்பாவுக்கும், கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. அதில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம், பரப்பன அக்ர ஹாரா சிறைக்குள் அடைக்கப்பட்ட தேதி, பரோலில் வெளியே சென்ற நாட்கள் ஆகிய அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு, கர்நாடக அரசின் சிறைத் துறை விதிகளின்படி, சிறையில் நேர்மையாக இருந்து வருகிறேன் என்பதையும், விதிகளுக்கு உட்பட்டு கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதையும், அந்த வகையில் ஒரு கைதிக்கு கர்நாடக அரசு வழங்கும் சலுகை நாட்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும் என்பதையும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.

 

அதனடிப்படையில், எனக்கான சலுகை நாட்களை கணக்கிட்டு அதனை எனது தண்டனை காலத்திலிருந்து கழித்து எனது விடுதலை தேதியை முடிவு செய்யுமாறு பணிந்து சமர்பிக்கிறேன் எனவும் சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார்' என்கிறார்கள் மத்திய உளவுத் துறையினர்.

 

Nakkheeran

 

இந்த நிலையில், சசிகலா ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து சில நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களும், சசிகலா இரண்டு முறை தமிழகத்திற்கு பரோலில் வந்த வகையில் 17 நாட்களும் என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சசிகலாவுக்கு அதிகபட்சம் 130 நாட்கள் சலுகை நாட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நன்னடத்தை விதிகளுக்காக வழங்கப்படும் இந்தச் சலுகை நாட்களை ஒரு கைதி தனது உரிமையாகக் கோர முடியாது. அரசாங்கத்தின் கண் அசைவினிலேயே சலுகை நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சசிகலாவின் விடுதலையில் அரசியல் விளையாட்டுகள் இருப்பதால் கர்நாடக அரசு மனது வைத்தால் மட்டுமே அவரது முன் விடுதலை தீர்மானிக்கப்படும்’ என்கிறார்கள் சிறைத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.

 

 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.